அறிவு சார்ந்த மனோதிடத்தைக் கொண்ட கல்விமான்களாக இருங்கள்

பேராசியர் டாக்டர். அரங்கராமானுஜம் அவர்களின் உரை

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக இயக்குனர்களில் ஒருவரும் தேர்ந்த கல்விமானும் ஆன டாக்டர் பெ.அரங்கராமானுஜம் அவர்கள் கல்விக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராகக் கலந்து கொண்டு முன்வைத்த கருத்துக்கள்:

மெளனத்தைக் கலைப்போம்

இக்கருத்தரங்கின் நோக்கம் ஏழை மாணவர்களுக்குத் தரமான கல்வி மறுக்கப்படுவது குறித்து நீண்ட நெடிய உரை வீச்சுகளை முன்வைப்பதல்ல. அதுகுறித்து கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளோரின் கருத்துக்களை அறிவதாகும். அதை நாங்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் இங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் கேள்விகள் கேட்க வேண்டும். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதி கூறியது இன்று நடந்து கொண்டிருக்கிறது. நமது மக்கள் கஞ்சிக்கில்லாதவர்களாக இருப்பது மட்டுமல்ல அதற்கான காரணம் எதையும் அறியாதவர்களாகவும் ஆகிவிட்டனர். எனவேதான் பல எரியும் பிரச்னைகள் குறித்துக் கேள்வி கேட்காதவர்களாக மட்டுமல்ல அதையும் தாண்டி கேள்வி கேட்க மனமில்லாத மெளனிகளாகவும் ஆகிவிட்டனர். இந்தக் கருத்தரங்கின் நோக்கம் அவர்களின் அந்த மெளனத்தைக் கலைப்பதே. அதாவது கேளாத செவிகளைக் கேட்கச் செய்து அவர்களது மெளனத்தை கலைக்க வழி காண்பதே.

உயர்கல்வியில் நாம் இருக்கும் நிலை

நமது நாட்டில் தற்போது ஏறக்குறைய 400 பல்கலைக்கழகங்களும் 2,0000 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. நாம் வெகு வேகமாக வளர்முக நாடு என்பதைத் தாண்டி வளர்ச்சியடைந்த நாடு என்ற கட்டத்தை அடைய பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனை அடைய உயர்கல்வி கற்றோர் எண்ணிக்கை நமது மொத்த மக்கட்தொகையில் 40 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டின் 18 முதல் 23 வயது வரையிலானவர்களில் தற்போது 12 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றவர்களாக உள்ளனர். மேலும் அந்நிலையை அடைய மற்றொரு முன் தேவையையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது நாம் வழங்கும் கல்வி உலகத்தரத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இந்நிலையில் உண்மையில் உலகின் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் உயர்கல்வி பெற்றோர் எண்ணிக்கை இங்கிலாந்தில் 55 சதவீதமாகவும், அமெரிக்காவில் 75 சதவீதமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் 80 சதவீதமாகவும், கனடாவில் 90 சதவீதமாகவும், நார்வே மற்றும் சுவீடனில் 95 சதவீதமாகவும் உள்ளது. இந்நாடுகளின் பட்டியலில் இடம் பெற விரும்பும் நாம், நாம்மை விடச் சிறிய நாடுகளாகவும் இன்னும் வளர்முக நாடுகள் என்ற வரையறைக்குள்ளேயே இருக்கக் கூடியவையுமான  மலேசியா , இலங்கை போன்ற நாடுகளைக் காட்டிலும் கூடப் பின் தங்கியிருக்கிறோம். இதுவே கல்வி வி­யத்தில் நாம் எதிர் கொள்ளும் கசப்பான உண்மை.  உயர்கல்வி பெற்றோரின் எண்ணிக்கை மலேசியாவில் 25 சதவீதமாகவும், இலங்கையில் 15 சதவீதமாகவும் உள்ளது.

இந்த நிலையைப் போக்க நாம் நிர்ணயிக்கும் இலக்குகளுக்குக் குறைச்சலில்லை. 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வி பெற்றோரை உருவாக்க 15 சதவீத இலக்கினை நாம் நம்முன் நிறுத்தியுள்ளோம். உயர்கல்விக்குச் செல்பவர் எண்ணிக்கையை உயர்த்தும் விதத்தில் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் உயர்கல்வியையும் ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும் விதத்தில் அதற்காக என்.சி.எச்.இ.ஆர். என்ற பெயரில் புதியதொரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் காகிதச் சட்டமாக ஆகும் நிலை

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் உண்மையிலேயே உருப்படியான எதையும் நாம் செய்யப் போகிறோமா என்றால் அது இன்னும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. கல்வி உரிமைச் சட்டம் வெற்றுக்காகிதச் சட்டமாக ஆகிவிடும் அபாயநிலையை அது அதன் ஆரம்ப கட்டத்திலேயே சந்தித்துக் கொண்டுள்ளது. அச்சட்டத்தை அமலாக்க ஆகும் செலவில் 55 சதவீதத்தை மத்திய அரசும் 45 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே பல மாநில அரசுகள் அதனைப் பிரச்னையாக்கத் தொடங்கிவிட்டன. அதாவது கல்வி மத்திய , மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருப்பதால் இந்த 45 சதவீதத்தையேனும் மாநில அரசுகள் ஒதுக்க முன்வர வேண்டும் என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் வாதம். இதற்கு மாநில அரசுகள் தெரிவிக்கும் எதிர்ப்பின் உச்சகட்டமாக உத்திரப்பிரதேச மாநிலம் தனது அதிகபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இச்சட்டத்தை அமலாக்குவதற்கான 100 சதவீதச் செலவினையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று அது மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

உலக அளவில் நிலவும் கல்விச் சூழ்நிலையில் இந்தியாவில் கற்பிக்கப்படும் கல்வியில் போட்டித்திறனும் ஆராய்ச்சி மனநிலையும் குன்றி வருவதைப் போக்க என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள என்.சி.எச்.இ.ஆர். அமைப்பும் எவ்வளவு தூரம் அதன் அறிவிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றக் கூடியதாக அமையப்போகிறது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் ஏழு கற்றறிந்த உறுப்பினர்கள் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்  நமது பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், சபாநாயகர் மற்றும் ஒரு அமைச்சர் இரண்டு செயலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் இதற்கு ஆலோசனை நல்க  கல்விமான்களைக் கொண்ட குழு  ஒன்று இருக்கும் என்றும் அது பரிந்துரை செய்வதை மட்டுமே தனது பணியாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அதன் உறுப்பினர்களும் மாநில அரசுகளால் பரிந்துரைக்கப் படுபவர்களாகவே இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பற்ற கல்விமான்களும் கல்விமான்களுக்கு முக்கியத்துவம் தராத அரசியல் வாதிகளும்

இன்று துரதிஷ்டவசமாக முதுகெலும்புள்ள கல்விமான்கள் பலர் நமது நாட்டில் இல்லை. கல்வி மான்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிப்பவர்களாக நமது அரசியல்வாதிகளும் இல்லை. பண்டித ஜவஹர்லால் நேரு போன்றவர்களோடு அச்சூழ்நிலை மங்கி மறைந்துவிட்டது. எந்த நேரமும் ஒரு துணைவேந்தர் அல்லது விஞ்ஞானி பண்டிதர் நேருவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும். அதுதவிர அவர்களுடனான தனது சந்திப்பை அதிகரிப்பதற்காக அவ்வப்போது நேரு அவர்கள் காலை  விருந்துகளைத் தனது இல்லத்தில் அவர்களுக்காக ஏற்பாடும் செய்வார்.

ஆனால் இன்று கேள்வி எதுவும் கேட்டால் அல்லது ஆட்சியிலிருப்போருக்கு ஏற்றுக்கொள்ளக் கசப்பாய் இருக்கும் அறிவுரைகள் வழங்கினால் தங்களது பணிப்பாதுகாப்பு பதவி உயர்வு போன்றவற்றிற்குப் பங்கம் நேர்ந்து விடும் என்று எண்ணக் கூடிய கல்விமான்களே அதிகம் உள்ளனர். அதைப்போல் கல்வியையும் கல்வித்துறையில் நியமிக்கப்படுபவர்களையும் கூடக் குறுகிய அரசியல் நோக்கோடு தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் நமது நாட்டில்  நிரம்பி வழிகின்றனர். இந்நிலையில் அரசு உருவாக்கியுள்ள என்.சி.எச்.இ.ஆர். அமைப்பிலும் கல்வியைக் காட்டிலும் அரசியலே மேலோங்கி நிற்கும் என்றே தோன்றுகிறது. அந்நிலையில் எவ்வளவு தூரம் விரும்பிய இலக்கை அடைய அவ்வமைப்பு பயன்படப் போகிறது என்பது அடுத்த கேள்வி.

என்று நமது நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் அரசின் பொறுப்பாகவும் கல்வி குறித்த அனைத்து விசயங்களையும் தீர்மானிப்பது அப்பழுக்கற்ற அர்ப்பணிப்புத்தன்மை வாய்ந்த கல்விமான்களின் பொறுப்பாகவும் ஆகிறதோ அன்றுதான் கல்வி அதன் உன்னத உயரத்தை எட்ட முடியும். அதுவரை எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவை விரும்பிய கல்வி மேம்பாட்டைக் கொண்டுவரா. இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு 1950 ல் நமது நாடு குடியரசு ஆனவுடன்  பத்தாண்டுகளில் அதாவது 1960 க்குள் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசியல் சட்டம் அறிவுறுத்திய கடமையாகும். அது இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

மிகக் குறைந்த கல்விக்கான ஒதுக்கீடு

இந்த நிலையில் உயர்கல்வி கற்றோர் எண்ணிக்கையை வேறு வழியில் அதிகரிப்பதற்காக 14 திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் உயர்கல்வி பெற்றோர் எண்ணிக்கை நமது நாட்டின் உயர்கல்வி பெற்றோரின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதமாகத் தற்போது உள்ளது. இதுபோல் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உயர்கல்வி கற்றோர் எண்ணிக்கையை உயர்த்த முயன்றாலும் சமூகத்தின் அடிப்படையில் அதன் நிர்வாகத்தில் உள்ள கோளாறுகள் தேவைப்படும் உயரத்தை உயர்கல்வி எட்டமுடியாத நிலையிலேயே அதனை வைத்திருக்கின்றன.

அரசுகள் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கும் மற்றும் பல திட்டங்களுக்கும் அரசு ஒதுக்கியுள்ளதைப் போன்று 65,000 கோடி ரூபாய் போன்ற தொகைகளைக் கல்விக்காக அரசு ஒதுக்குவதில்லை. உலகெங்கிலும் அனைவருக்கும் கல்வி புகட்ட இன்னும் தேவைப்படும் ஆசிரியர் எண்ணிக்கை ஒருகோடி என்றால் அதில் 30 லட்சம் பேரின் தேவை நமது நாட்டிற்கானதாக உள்ளது. அதுமட்டுமல்ல நிறுவனமயமாக்கப்படாத வழிமுறைகளில் அறிவைப்பெற வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதாவது இணையதளத்தின் பயன்பாடு நமது நாட்டில் 5 சதவீதத்தைக் கூட எட்டமுடியாத நிலையிலேயே உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இணையதளத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உள்ளது.

சந்தைத் தேவைக்காக மட்டும் தான் கல்வியா

இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி, கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம், உயர்கல்வியையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்துவதற்காக புதியதொரு அமைப்பு, அடுத்து அந்நியப் பல்கலைக்கழகங்கள் வரவழிவகுக்கும் சட்டம் போன்ற நடவடிக்கைகள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் முறையான சமச்சீரான கல்வியை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலன்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள் அல்ல. மாறாக நிலவும் உலகச் சந்தைத் தேவையினை கருத்திற்கொண்டு ஆரவாரமான அறிவிப்புகள் மூலம் அத்தேவையினைப் பூர்த்தி செய்யத் திரைமறைவில் செய்யப்படும் நடவடிக்கைகளாகவே தோன்றுகின்றன.

அந்நியப் பல்கலைக்கழகங்கள் வர வழிவகுக்கும் சட்டம் வரப்போகிறது என்ற பேச்சு இன்று அடிபடுகிறது. ஆனால் இன்றைய நிலையிலேயே 300 க்கும் மேற்பட்ட அந்நியப் பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் இயங்கிக் கொண்டு உள்ளன. இந்நிலையில் தரத்தை மேம்படுத்துவதற்குப் போட்டி அவசியம் என்ற பெயரில் அந்நியப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவரப்படப் போகிறது.

ஏற்கனவே மிகவும் மத்தியத்துவப் படுத்தப்பட்ட தொழில்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த கல்வி என்ற பெயர்களிலான கல்வித் திட்டங்களை இந்திய , உலகச் சந்தைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு கொண்டுவந்ததன் விளைவினைக் கடந்த ஆண்டு நாம் அனுபவித்தோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாடுகளில் வேலை செய்த 45,000க்கும் மேற்பட்டோர் கடந்த ஓரிரு ஆண்டுகளில் வேலையிழந்து நாடு திரும்பினர்.

இந்நிலையில் நாம் கொண்டுவரும் திட்டங்களின் நோக்கம் அனைவருக்கும் உரிய உயர்ந்த அறிவினை வழங்குவது என்பதாக இருக்க வேண்டும். குறுகிய சந்தைத் தேவைக்காக சந்திரபாபு நாயுடு பாணியில் சமூக விஞ்ஞானக் கல்வியை அழித்தொழிப்பது நாசகர விளைவுகளையே ஏற்படுத்தும். அதாவது சமூகத்தின் அடிப்படை மதிப்புகளையே அது நாளடைவில் அழித்தொழிக்கும்.

கல்வியின் வளர்ச்சிக்கு கியூபா போன்ற நாடுகளின் வளர்ச்சி இங்கு உரையாற்றியவர்களால் மேற்கோள் காட்டப்பட்டது. அதில் முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அத்தகைய கல்வி வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ள அந்நாட்டின் அடிப்படை சமூகக் கட்டமைப்பே. அந்நாட்டில் தாய் மொழியிலேயே உயர்கல்வி வரை கற்பிக்கப்படுகிறது என்றால் அவ்விதத்தில் அங்கு தாய்மொழி வளர்க்கப் பட்டுள்ளது. இங்கு தாய் மொழியில் உயர்கல்வி என்று ஆவேசமாகப் பேசுபவர்கள் எல்லாம் தாய் மொழியின் வளர்ச்சிக்காக அணுவளவு நடவடிக்கைகள் கூட மேற்கொள்வதில்லை. மருத்துவம் , பொறியியல், விஞ்ஞானம், உளவியல் என அனைத்துப்பாடப் பிரிவுகளையும் கற்பிக்கும் விதத்தில் அந்தந்தத் துறை சார்ந்தோரால் நமது தாய்மொழி செழுமைப்படுத்தப்பட வேண்டும். தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் சேர்த்துக் கற்க வேண்டும்.

நமது நாடு ஒரு மிகப்பெரும் உள்ளார்ந்த வலுவினைக் கொண்டது. உரிய முறையில் நடைமுறை அனுபவங்கள் சார்ந்து நவீனக்கல்வி யுக்திகளைக் கிராமப்புறங்கள் உள்பட அனைத்துப் பின்தங்கிய பகுதிகளிலும் நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அவை கல்வி மேம்பாட்டில் பல அற்புதங்களை நிகழ்த்தும். சில ஆண்டுகளுக்கு முன்பு “போல் இன் த வால்” என்ற பெயரில் என்.ஐ.ஐ.டி. நிறுவனம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பொதுவான சுவரொன்றின் மீது ஒரு கணிணியை வைத்து அதனை அங்குள்ள மக்கள் தங்களது தேவை மற்றும் விருப்பத்திற்கு உகந்த வகையிலெல்லாம் பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் அறிவித்தது. அது தூண்டிவிட்ட அறிவு தாகம் கிராமப்புறச் சிறுவர் மற்றும் சிறுமியரின் உள்ளார்ந்த திறமைகள் பலவற்றை வெளிப்படுத்தியது. அதனை இயக்கும் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராகக் கொண்ட அந்தத் திட்டம் தற்போது 30 நாடுகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. இறுதியாக நமது ஆசிரியர்களைப் பற்றி ஒரு வார்த்தை. கற்றவருக்கு இலக்கணமான அறிவு சார்ந்த மனோதிடத்தைக் கொண்ட கல்வி மான்களாக இருங்கள். இந்த சமூகத்திற்குக் கல்வி கற்றோரின் தரமான தலைமையைத் தர முன்வாருங்கள்.

 

Pin It