காவிரி நீர் பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து குறுவை சாகுபடிக்கு இழப்பீடு கோரி தமிழக உழவர் முன்னணி மறியல் போராட்டம்

“காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு / பொருளாதார தடை விதித்தும்/ இந்திய அரசுக்கு எதிராக/ வரி கொடாமை நடத்தியும் / காவிரி நீரைப் பெற்றுத் தராத / தமிழக அரசே! ஜெயா அரசே! / குறுவை காய்ந்து போனதற்கு / நீயே பொறுப்பு! நீயே பொறுப்பு! / குறுவை சாகுபடி இழப்புக்கு / ஏக்கருக்கு 12 ஆயிரம்/ இழப்பீடு உடனே வழங்கு!”
“தானே புயல் காப்பீட்டு தொகையை / கடனுக்காக பிடித்தம் செய்யாதே /உழவர்களை வஞ்சிக்காதே! பயிர்க்காப்பீட்டு தொகையினை / முழுமையாக உடனே வழங்கு! / தானே புயலால் பாதித்த / பயிர் கடன் முழுவதையும் / தள்ளுபடி செய்! தள்ளுபடி செய்!”
 
தமிழக உழவர் முன்னணி சார்பில், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 21.08.2012 அன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட உழவர்கள் முன்வைத்த எழுச்சிமிகு முழக்கங்கள் தான் இவை.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறும் நீரைப்பெற தமிழக அரசு தவறியதால் ஏற்பட்ட குறுவை சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ12,000 இழப்பீடு கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய - கன்னட இனவெறி அரசுகளால் தடுக்கப்பட்ட காவிரி நீரை இழந்து தவித்த உழவர்கள், குறுவை சாகுபடிக்கான இழப்பீடு கோரி உணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமையில், சிதம்பரம் பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கிய உழவர்களின் எழுச்சிப் பேரணி, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு சாலையில் அமர்ந்து மறியல் செய்த 200க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.

த.உ.மு. மாவட்டத் தலைவர் திரு. அ.கோ.சிவராமன், மா.கோ.தேவராசன் மற்றும் பொறியாளர் என். செயபாலன், இரா.சரவணன், க.முருகன், ஆ.மதிவாணன், கென்னடி , இராசேந்திரன், நாராயணசாமி, ஆசிரியர் கோவிந்தராசன், பாலன், பொன்னுசாமி உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும், உழவர்களும் இதில் பங்கேற்றனர்.

கைதாகி தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உழவர்களைச் சந்தித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு கி.வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It