அரை நொடியில் ஆயிரமாயிரம்
குண்டுகளைப் பொழியும்
நவீனத் துவக்குகளை ஏந்தி
தலைமுறையையே
காலிசெய்த களிப்பில்
கெக்கலிக்கும் உன்னை
என் இயலாமையின் கண்ணீர்
என்ன செய்துவிடக் கூடும்?

கொலைகாரர்களை உருவாக்குகிற
எஜமானனின் உண்மை விசுவாசி நீ.
உங்களால் வேட்டையாடப்பட்ட எங்கள்
முன்னோர்களின் எச்சங்களைத்
தின்னவந்த பிணந்தின்னியே
கோரத்தை மறைத்துச் சிரிக்கும்
உன் தலைவனிடம் சொல்
பதுங்கும் மக்களின்
நோக்கமெல்லாம்
பலியாவதற்கில்லையென்று.
எட்டுத் திக்கும் படர்ந்துகொண்டிருக்கின்றன
ஆணிவேர்களின்
கிளை வேர்கள்.

என் உமிழ்நீர் உன்னை
உளைச்சலுக்கு உள்ளாக்காது எனில்
எதிர்ப்பைக் காட்டும் எந்திரம்
வேறொன்றும் உண்டு என்னிடம்
உன் முகம் நோக்கிப் பாய்ச்சப்படும்
என் சிறுநீரில்
சிறுத்துப்போகும்
உன் முகம் உனதல்ல...
உன் முதலாளியுடையது.

- பெ.சக்திவேல், கோவை

Pin It