இரத்தசோகை என்றால் என்ன?

இரத்தத் தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலே ( 4 மில்லியன் / cumm of இரத்தம் - குறைவாக) அல்லது பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் எனும் புரதம் குறைந்து காணப்பட்டாலும், ( 100 மில்லி இரத்தத்தில் 12 கிராமுக்கு குறைவாக) அதை இரத்த சோகை என அழைப்பர். பொதுவாக உணவில் புரதத்தின் அளவோ, இரும்புச்சத்து, போலிக் அமிலம் வைட்டமின் B12 + சில ஹார்மோன்கள் (உ.ம்) (தைராய்டு) ........... குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

இரத்த சோகையின் அறிகுறிகள் :

உடல் அசதி, எளிதில் சோர்வு, தலைவலி, மயக்கம், தலைசுற்றல், கை, கால் குடைச்சல், உடம்புவலி, மூச்சு வாங்குதல், பெண்களுக்கு வீட்டு தூர பிரச்சனைகள், நெஞ்சுவலி, இறுதியில் கை, கால், முக வீக்கம்.... போன்றவை.

இரத்த சோகையை எப்படி அறிவது :

1) நாக்கு, கண்ணின் கீழ் இரப்பை, நக நுனி வெளிறி போதல்.

2) நகங்களில் பள்ளம் விழுந்து இருப்பது.

3) இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை, இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவை தேவையெனில் பரிசோதிப்பது.

உணவு பற்றாகுறை தவிர்த்து இரத்த சோகைக்கு பிற காரணங்களும் உண்டு (உ.ம்) உபயோகத்திற்கு வரும் குடிநீர், ஈயக் (Lead) குழாய்களில் வரும் போது குடிநீரில் ஈயத்தின் அளவு அதிகமாக போனால் இரத்த சோகை உண்டாகும். பெருகி வரும் வாகன புகைகளில் ஈயத்தின் அளவு அதிகமானாலும் இரத்த சோகை ஏற்படும். “பசுமைப் புரட்சியும்” இரத்த சோகைக்கு ஒரு காரணமாக பேசப்படுகிறது.

பசுமைப் புரட்சியில் பயிர்கள் குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சியினை பெற்றாக வேண்டும். அதற்காக அவை மண்ணில், நீரில் கலந்துள்ள உணவுப் பொருட்கள் அதிகம் உறிஞ்சுகிறது. இயற்கை உரம் போட்ட பழைய காலத்தில் பயிர்களால் உறிஞ்சுப்படும் உணவுப் பொருட்கள் உதவுவதால் துத்தநாக (Zinc) இரும்புச்சத்து (Iron) பற்றாக்குறை ஏற்படுவதில்லை, பசுமைப் புரட்சியின் காரணமாக பழக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட செயற்கை உரங்களில் N,P,K) (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஸ்) மட்டுமே உள்ளதால், பயிர் வளர்ச்சிக்கு அவை மூன்றுமே முக்கிய காரணியாக உள்ளதால் விரைவில் மண்ணிலும், நீரிலும் இரும்பு, துத்தநாக சத்து குறைவு ஏற்பட்டு (Micro Nutrient Deficiency) அதனால் இரத்த சோகை ஏற்படவும் அது வழிவகுக்கிறது.

பல ஆங்கில மருந்துகளும் (குறிப்பாக வலி நிவாரணிகள் (உ..ம்) அனால்ஜின் கிருமிக் கொல்லி மருந்துகள் (உ.ம்) குளோராம் பெனிகால்) புற்றுநோய் மருந்துகள் பலவும் இரத்த சோகை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. உணவு, நீர், காற்று பலவகை வேதிப் பொருட்களின் மாசு காரணமாக (உ.ம் பூச்சி கொல்லி மருந்துகள்) கெட்டுப் போயுள்ள தற்போதைய சூழலில் இரத்த சோகைக்கான காரணங்களுக்கு அவற்றின் பங்கையும் இணைத்தே சிந்திப்பது நல்லது. மேலும் இந்தியாவை பொறுத்தமட்டில் வயிற்றில் பூச்சி (குறிப்பாக கொக்கி புழு தாக்கம் (Hookworms) ஒரு முக்கிய காரணியாகவும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைத்தால் பூச்சி தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

உடம்பிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறினால் (உ.ம்) மூலம், பெண்களுக்கு தூரம் அதிகமாக படுதல், குழந்தையின் பிறப்பின் போது அதிக இரத்த ஒழுக்கு .... போன்றவையும் இரத்த சோகைக்கு காரணமாக இருக்கலாம்.

புள்ளி விபரங்கள்

1. கருவுற்ற பெண்கள் இரத்த சோகையால் அதிகம் பதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா (88%)

2. 3 வயதிற்கு கீழ் உள்ள 80% குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. தமிழ்நாட்டில் 12-18 வயது பெண் 93 பேர்மேல் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 5 பேருக்கு தான் இரத்த சோகை இல்லை என தெரிய வந்துள்ளது. (88 பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனார்).

4. இரத்த சோகை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதித்துள்ளது. (வீட்டு தூரம், பெண்ணடிமைத்தனம் .... போன்றவைகளால்)

5. பழங்குடி, தாழத்தப்பட்ட இன மக்கள் தான் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6. 75% சதவீதத்திற்கு மேற்பட்ட தலித் குழந்தைகள் இரத்த சோகை உள்ளவர்கள்.

7. இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ 20க்கு கீழாகவே வருமானமாக பெறுகின்றனர். அவர்களில் பழங்குடி / தாழ்த்தப்பட்ட மக்கள் 88%.

8. சமீபத்திய புள்ளி விபரங்கள் National Sample Survey (NSS) 2004-2005, National Family Health Survey (NFHS) 2005-2006 ன் படி 60 திருமணமான / கர்ப்ப கால பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக அற்புதம் எனும் இக்கால கட்டத்தில் தான் தனிநபர் உணவு தானியம் உட்கொள்ளும் அளவு 1990 ல் 476 கிராம் / நாள் என இருந்தது 2001 ல் 418 கிராம் / நாள் ஆக குறைந்துள்ளது. மொத்த உணவுப் பொருட்களின் வாயிலாக கிடைத்த சராசரி கலோரி அளவு 1997 - 88 ல் 200 / நாள் என இருந்தது, 1999 - 2000 ல் 2150 ஆக குறைந்துள்ளது. சமிபத்திய முடிவுகள் அது மேலும் குறைந்துள்ளது என கூறுகிறது.

9. புவி வெப்பமடைவதால் 120 மில்லியன் டன் தானியம் (வகைகளின்) உற்பத்தி குறையும் என FAO நிறுவன தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சிறப்பு பொருளாதார மண்டலங்களின் காரணமாக தானிய உற் பத்தி மேலும் குறையும் என்பது செய்தியாக உள்ளது. (வேளாண் நிலங்கள் கைப்பற்றபடுவதால்) (அரிசி,கோதுமை, பருப்பு வகைக்கான பற்றாக்குறை 2 கோடி டன்னாக அதிகரிக்கும்).

10. விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 2008 ம் ஆண்டு கூடும் என அஞ்சப்படுகிறது. உணவு தானியங்களின் இருப்பு கிராமப்புறங்களில் தலைக்கு 152கிலோவாக தற்போது உள்ளது. அது 1990ல் இருப்பதைவிட 23 கிலோ குறைவாகும் கடை மட்டத்தில் இருக்கும் 30% இந்திய வீடுகளில் வாழும் மக்கள் தமது 70% வருமானத்தை உணவிற்காக செலவழித்தாலும், தலைக்கு நாள் ஒன்றுக்கு 1700 கலோரி உணவே உட் கொள்ளும் நிலை உள்ளது. தேவையான அளவோ 2100 கலோரி ஆகும்.

11. இந்தியாவின் உற்பத்தி திறன் சத்துக்குறைவு காரணமாக வருடத்திற்கு 10 மில்லியன் டாலர் குறைகிறது. திரு.Tandon (USAID இயக்குனர்)

12. இந்தியாவில் தலித் மக்களின் எண்ணிக்கை 22% அதில் 81% நிலமற்ற அமைப்பு சாரா கூலித் தொழிலாளர்கள்.

13. 1993 இந்தியாவில் GDP க்கு முக்கிய காரணமாக இருந்த வேளாண் துறை 2004 ல் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பினை சீர் குலைப்பதாக உள்ளது.

14. இந்தியாவின் வேளாண் உற்பத்தி 15%குறைந்துள்ளதற்கு காரணம் மண்வளம் கெட்டுப் போனதால் தான் (திரு.பச்சௌரி)

இந்தியாவின் மருந்து கொள்(ளை)கை

ஒரு நாட்டிலுள்ள பலரும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் (தற்காலிகமாக) மருந்துகளின் விலை குறைந்து இருத்தலே சமூக நீதிக்கான மருந்துக் கொள்கை அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருவதாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நம் நாட்டிலோ, இரத்த சோகையை சரிசெய்யும் விலை குறைந்த மாத்திரைகள் சந்தையில் எளிதில் கிடைக்காமல் போவது, இரத்த சோகைக்கான சிரப்புகள் / ஊசி அதிக விலையேற்றத்துடன் சந்தையில் இருப்பது மக்கள் நலம் புறந்தள்ளப்பட்டு மருந்து குழுமங்களின் நலனே பிரதானமாக உள்ளதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இரும்புச்சத்து மாத்திரை பலருக்கு, வாந்தி, தலை சுற்றல், மயக்கம், மலசிக்கல், வயிற்றுப்போக்கு .... போன்றவற்றை ஏற்படுத்துவதால் ஊசி கொடுக்கும் சூழல் ஏற்படுகிறது.

அரசு / சுகாதாரத்துறை அமைச்சகம் இந்நிலை மாற உடனடியாக நட வடிக்கை எடுப்பது நல்லது. இரத்த சோகைக்கான ஊசியின் விலையை குறைப்பது உடனடி தேவையாக உள்ளது.

இரத்த சோகைக்கு முக்கிய காரணம் சத்துக்குறைவா? வறுமையா? சமூக நீதியின்மையா?

இரத்தசோகை என்பது அடிப்படையில் சத்துக் குறைவு நோயாக சித்தரிக்கப்படுவதும், சத்தான உணவுப் பொருட்கள் உட்கொள்வதன் மூலம் (கீரை ... போன்ற) அதை முழுமையாக சரி செய்து விடலாம் என்பதும் முற்றிலும் உண்மையல்ல. விலை குறைந்த சத்தான உணவுப் பொருட்கள் (உ.ம் கீரை) உட்கொள்வது நல்லது தான் என்றாலும், வறுமையே அடிப்படை பிரச்சனை என உணரத் தவறினால் முழுமையான தீர்வு நமக்கு கிட்டாது. (சத்துக் குறைவு எனும் வார்த்தை வறுமை எனும் அரசியல் பிரச்சனையை மறைக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது.) அனைவருக்கும் அடிப்படை வசதிகள் ( இருக்க இடம், உடுக்க உடை, உண்ண சத்தான உணவு) கிடைக்கும் நிலை, வயிற்றில் பூச்சித் தொல்லை களிலிருந்து பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், செருப்பு அணிந்து செல்லுதல் .... போன்றவை), சுற்றுப்புற சுத்தம் / சுகாதாரம் அனைவருக்கும் (குறிப்பாக தாழ்த்தப்பட்ட / அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும்படி செய்தல், மேலும் அனைவருக்கும் நிரந்தர வேலை / வேலைக்கு ஏற்ப குறைந்த பட்ச ஊதியம். அதில் ஆண்/ பெண் பாகுபாடற்ற தன் மை ... இவற்றின் மூலம் கிடைக்கும் மன அமைதி - இவற்றை உறுதி செய்தலே இரத்த சோகைக்கான நீண்ட கால தீர்வாக அமையும்.

பசுமைப் புரட்சியின் காரணமாக பாதிப்புகளையும் ஏற்படுத்திய திரு. சுவாமிநாதன் அவர்களே நாட்டில் விளையும் உணவு உற்பத்தி அனைவருக்கும் போதுமானது என்றும், அது பகிர்ந்து அளிக்கப்படுவதில்தான் பிரச்சனை உள்ளது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடிப்படை வசதிகள்

நகரங்களில் 20 - 30 சதவீத மக்கள் சேரிகளில் வாழ்கின்றனர். மேலும் சேரிவாழ் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த சேரி வாழ் மக்கள் தொகை 6.2 கோடி இது ஆண்டுக்கு 2%அதிகரித்து வருகிறது. 41% கிராம வீடுகள் வசிக்க இலாயக்கற்ற கூரை வீடுகளே.

கழிப்பிடம்

72% மக்கள் கழிப்பிட வசதி இல்லாதவர்கள். 19% கிராம மக்களும் 81% நகர மக்களுமே கழிப்பிட வசதி பெற்றுள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 5,19,500 இந்திய குழந்தைகள் கழிப்பிட வசதி இல்லாமலும், சுற்றுப்புற சுகாதாரக் கேட்டிலும் இறக்கின்றனர். 73 கிராம மக்களள் எரிப்பதற்கு இன்னும் விறகையே பயன்படுத்துகின்றனர்.

வேலை இல்லா திண்டாட்டம்

கிராமப் பகுதிகளில் வேலையின்மை விகிதம் 1993 - 94 ர் 5.6% இருந்து 7.2% அதிகரித்துள்ளது. இக்கால கட்டத்தில் நகர்ப் பகுதிகளில் 7.2% இருந்து 7.7% அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் சுய வேலை வாய்ப்பு பெற்றவர் விகிதம் 54.8% இருந்து 52.9% குறைந்தள்ளது. வேலை இழந்தோர் விகிதமோ 32% இருந்து 33.2% அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடை நிலை தொழிலாளர் களின் எண்ணிக்கை 1991 ல் 14 இலட்சத்திலிருந்து 41 இலட்சமாக உயர்ந்துள்ளது. விவசாய வருமானம் 24.48% (1993 -94) லிருந்து 18.16% (1999 - 2000) ஆக குறைந்துள்ளது. தமிழகத்தல் வேலை வாய்ப்பு சுருங்கி, வேலை இல்லா திண்டாட்டம் 7%ஆக அதிகமாகியுள்ளது.

11 வது ஐந்தாண்டு திட்டம்

“வளர்ச்சி என்பது மக்களை இணைக்க வேண்டுமே ஒழிய, பிரிக்க அல்ல” - பிரதமர் திரு. மன்மோகன் சிங். ஆனாலும் அவரது ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மிக ஏழைகளாகவும் மாறும் நிலைதான் உள்ளது வேடிக்கையானதாகும். காரணம் அவரது ஆட்சியில் கொள்கைகள் தான்.

11 வது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற வேளாண்மையை உயிர்பிக்கவும், கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்யும் சாதாரண ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றான மருத்துவத்தை கிடைக்கச் செய்யவும் முக்கியத் துவம் அளிப்பதாக உறுதி பூண்டாலும் நடை முறை வேறுவிதமாகத்தான் உள்ளது. (உ.ம்) பஞ்சாபில் பால் உற்பத்தி செய்யும் ஒருவர் அரசிடமிருந்து 1 லிட்டருக்கு ரூ.8 தான் பெறுகிறார். ஆனால் சந்தையில் அங்கு 1 லிட்டர் பால் வாங்க அவர் ரூ.22 செலவழிக்கும் நிலை உள்ளது. அதே போன்று அரசு கோதுமை உற்பத்தி செய்யும் ஒருவருக்கு 1 கிலோவுக்கு ரூ.8 தான் கொடுக்கிறது. சந்தையிலோ அதனை வாங்க அவர் ரூ.14 க்கு மேல் செலவழிக்கும் நிலையே உள்ளது. ஆனால் வெளிநாட்டு வணிகர்களிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் போது அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.18.51 ஐ கொடுத்து வாங்கியுள்ளது. என பா.ஜ.க., அரசை குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் நம் சொந்த மண்ணிலிருந்து கோதுமையை உற்பத்தி செய்ய துளி அளவு கூட வேர்வை சிந்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அவ்வாறு வாங்கிய கோதுமையை கிலோ ஒன்றுக்கு ரூ.20.50 க்கு விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பலனடைவோர் வெளிநாட்டு பெரும் நிறுவனங்களான Glencore, Cargill, Toepfer போன்றவையே SEZ (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்) காரணமாக வந்துள்ள நில சீர்திருத்த சட்டம் மூலம் தனிநபர் ஒருவர் 5000 ஏக்கர் வரை விளை நிலங்களை கையகப்படுத்தலாம் என்றிருப்பது (விவசாயி ஒருவர் 18 ஏக்கருக்கு மேல் விளைநிலங்களை வைத்திருக்க கூடாது). புதுவகை ஜமீன்தார்களை உருவாக்கி, பணக்காரர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் சாதகமாக இருக்கும் என்பதில் துளி அளவு கூட ஐயமில்லை. ஏன் இந்த வேறுபாடு? அதிகாரத்தில் இருக்கும் பிரதமரே இதற்கு ஒன்றும் செய்யவில்லையெனில் யார் தான் இதை செய்வார்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்? Deccan Chronicle 25.12.2007 தலையங்கம்.

“சாம்பாரில் வரும் பாதிப்பு” - பர்மாவை கையேந்தும் நிலை

இந்தியாவில் துவரம் பருப்பின் உற்பத்தி 1960ல் ஹெக்டேருக்கு 849 Kg ஆக இருந்தது, 2004 - 2005ல் 667 kg ஆக குறைந்துள்ளது. பர்மாவிலோ 1993ல் ஹெக்டேருக்கு துவரம் பருப்பின் உற்பத்தி 635 கிலோவாக இருந்தது, 2004ல் 1006 கிலோவாக உயர்ந்துள்ளது. உலகின் துவரம் பருப்பு உற்பத்தியின் மொத்தத்தில் 90% இந்தியர்களால் உட்கொள்ளப்படுகிறது. இது இந்தியாவின் அடிநாதமாகத் திகழும் வேளாண் துறையின் வீழ்ச்சியையே பறை சாற்றுவதாக உள்ளது.

விவசாயிகள் / பிற உற்பத்தியாளர்கள் பாதிக்கபடுவதால், உணவு பற்றாக்குறை ஏற்படுவதால் மறைமுகமாக அது வறுமைக்கும், சத்து குறைவிற்கும் இரத்த சோகைக்கும் காரணமாக அமையும். ஒரு வகையில் பார்த்தால் பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு தான் இரத்த சோகை என்பதும் புரியும். ஆக இரத்த சோகையை எந்த கண்ணோட்டத்தில் காண வேண்டும்?.

இரத்த சோகையை

1) சத்துக்குறைவாக பார்ப்பது

2) கீரை போன்ற விலை குறைந்த ஆனால் சத்து நிறைந்த உணவுகளை உட் கொள்வதுபற்றியான “விழிப்புணர்வு” இல்லாமல் இருப்பது.

3) வெறும் மருத்துவ பிரச்சனையாக மட்டுமே பார்த்து அதை மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருந்துகள், மருத்து பரிசோதனைகள் கொண்டு சரி செய்யக்கூடிய பிரச்சனையாக பார்ப்பது.

நீண்ட கால இரத்த சோகை பிரச்சனையை தீர்க்க உதவாது. தற்காலிக நிவாரணம் தரும் இரத்த சோகைக்கான விலை குறைந்த மாத்திரைகளை சந்தையில் இல்லாமல் செய்வது. அதற்கான ஊசி / டானிக் மருந்துகளை விலையேற்றம் செய்வதிலிருந்து அரசின் கொள்கைகளில் (மருந்துக் குழுமங்களின் நலனை விட தனிமனித நலமே மிக முக்கியமானது என எண்ணி, அதற்கான செயல் திட்டங்களை நடைமுறைபடுத்துவது). மாற்றம் ஏற்படாமல் மக்கள் அதற்காக அரசை நிர்பந்திக்காமல் மாற்றத்தை எதிர்பார்ப்பது நடக்காத காரியமாகும். மாறாக, இரத்த சோகையை

1) வறுமையின் வெளிப்பாடாக பார்ப்பது

2) பெண்ணடிமைத்தனத்தின் சின்னமாக பார்ப்பது.

3) அடிப்படை வசதிகள் (வீடு. உணவு, உடை) அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு இல்லாமையாக பார்ப்பது.

4) பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்காத நிலையாக பார்ப்பது. (122 உலக நாடுகளின் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்த ஐ.நா. அமைப்பு இந்தியாவை 120 வது இடத்தில் வைத்துள்ளது.

5) அனைவருக்கும் நிரந்தர வேலை / வேலைக்கு ஏற்ற ஊதியம், அதில் ஆண் / பெண் பாகுபாடற்ற நிலை போன்ற சமூகநீதிகள் சமுதாயத்தில் இல்லாமையாக பார்ப்பது.

6) சுத்தமான கழிப்பிட வசதிகள் அனைவருக்கும் கிடைக்காத சூழலாக பார்ப்பது.

7) தொழிற் புரட்சியின் / வளர்ச்சியின் விரும்பத்தகாத மாசினை ஒரு கட்டுபாட்டுக்குள் இல்லாத சமுதாய அமைப்பாக சமூகத்தை பார்ப்பது.

8) சாதிய / வர்க்க வேறுபாடுகள் அதிகம் இருக்கும் சமூக சூழலை பார்ப்பது.

9) வெறும் மருத்துவ பிரச்சûயாக பார்க்காமல், ஒட்டு மொத்த சமூக மாற்றத்தின் / சமூக நீதிக்கான பிரச்சனையின் ஒரு அங்கமாக பார்ப்பது.

10) ஜனநாயக மக்கள் போராட்டத்தின் மூலமே, இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என உறுதியாக மக்கள் போராட்டத்தை கட்டமைப்பதே இரத்த சோகையின் நிரந்தர தீர்விற்கான பாதையாக அமையும்.

இரத்த சோகையை சிகிச்சை செய்யும் போது அதற்கான அடிப்படைக் காரணங்களை நீக்காமல் வெறும் இரும்புச்சத்து / பூச்சி மாத்திரைகளை மட்டும் “வருமுன் காப்போம்” என கொடுப்பது ஒருவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து நிரந்தர தீர்வை நோக்கிய பாதையில் போகாமல் ஒரிரு நாட்களுக்கு மீன்களைக் கொடுத்து தற்காலிக தீர்வை மட்டும் பிரதானப்படுத்துவதற்கு சமமாகும். 

Pin It