துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர்

வீடு திரும்பினேன்

படுக்கை விரித்து விழ சாமக்கோழி கூவிற்று

வித்துடல் தோளேற்றி நடந்ததால்

வலித்தது தோளும் மனமும்

தூக்கம் தொலைவாகிப் போனது.

கவிதையயான்று எழுதலாம்

எழுதலாம்தான் எப்படித் தொடங்குவது?

எழுதிச் சென்று எங்கே முடிப்பது?

பாட்டெழுதிப் பாட்டெழுதி

நான்படும் துயர் யாரறிவார்?

கூட்டுக்குள் கிடந்து குமைகின்றது உயிர்

பூ அள்ளிப்போட்டே புண்ணானது கைகள்

நிதம் அழுதழுது

நீர் வற்றிப்போனது விழிகள்

கண்மலரும் காலை ஒவ்வொன்றும்

வீரச் சாவுடன்தானே விடிகின்றது.

இமை மூடும் பொழுதும்

இடி விழுத்தித்தானே இருள்கிறது

நிலவு முகந்திருத்திய நிர்மலப் பூங்கொடிகளை

இழவு எடுத்துச் செல்கின்றது நாளாந்தம்

எத்தனைக் காலத்துக்கென்றுதான் இது?

பத்துப் பரப்பில் விதைக்கத் தொடங்கி வயல்

ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.

விதைக்க குழிதோண்ட வியர்க்கிறது நிலம்

காற்றின் விழிகளிலும் துயரம்.

வெள்ளையடித்த கல்லறைக்குள்ளே

பள்ளிகொள்கின்றனர் பரமாத்துமாக்கள்

நூல்பிடித்து ஓடிய நேராய்

வரிசையான நாற்று நடுகை

எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு

பொய்க்கவில்லை

கங்கும் களையுமாக எங்கும் அரும்புகள்

ஒருநாள் வந்து

உள்ளே புகுந்து ஒரு பூ வைத்துப்பாரும்

குழியிலிருந்து கேட்கும் குரல்

பார்க்கும் விழி

துடிக்கும் உயிர்

எவர் சொன்னது இவர்களை இறந்துபோனவர் என்று?

எவர் சொன்னது எலும்பும் உக்கி எருவானார் என்று?

வெளியே வருவதில்லையே தவிர

குழிக்குள்ளேயே ஒரு ராஜாங்கமே நடக்கிறது

கார்த்திகை இருபத்தேழு

தேசத்திற்கு உயிர்ப்பெழுதும் நாள்

சில்லிட்டுப்போகும் நிலம்

பூக்கொண்டு நடப்போம் புனிதரிடம்

மெல்ல அருகமர்ந்து

கல்லறைகள் கழுவுவோம் கண்ணீரால்

நெய்விளக்கு ஏற்றும் நேரம்

செல்வங்கள் விழிதிறப்பர்

செவிகேட்க சிரிப்பர்.

மெளன மொழியில்

பெற்றமனம் குறிப்பேவர்

அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும்

“மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று

என்புருக வழியும் பாடலில்

சிலிர்த்துப்போய் சிலையாவோம்.

பணிமுடித்து உறங்குகின்றோம்

மீதி வழி முன்செல்வீர் என

தேவகுமாரனின் அசரீரி கேட்கும்

எமக்கானது பூவல்ல

எமக்கானது சுடரல்ல

எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல

எமக்கானது விடுதலை

எமக்கானது தேசத்தின் விடிவு

காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன்

கல்லறைகள் மூடிக்கொள்ளும்

ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்

வாசல் கடந்து வெளியேவர

நிலம் விரிந்திருக்கும்

எம் பயணம் தொடரும்

மண்மடிந்தோர் கனவு நனவாகும்வரை.

 

பின் குறிப்பு:

எரிமலை 2009 சனவரி-பெப்ரவரி இதழிலிருந்து இப்பாடலை எடுத்தளிக்கிறோம். அதில் காணப்பட்ட அச்சுப் பிழைகளை நீக்கிச் சரி செய்ய உதவிய கவிஞர் கி.பி. அரவிந்தன், புலவர் இறைக்குருவனார் ஆகியோருக்கு நன்றி.

Pin It