டாக்டர் உமாகாந்த், புகழ்பெற்ற தலித் செயல்வீரர். கல்வியாளர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு தளங்களில் தலித் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். தன்னுடைய இளங்கலைப் படிப்பை தில்லி பல்கலைக் கழகத்திலும், உயர் கல்வியை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் படித்த இவர், "பீகாரில் உள்ள தலித்துகளின் மனித உரிமைகள் ஓர் ஆய்வு (1977 1997)' என்ற தலைப்பில் 2000 இல் முனைவர் பட்டம் பெற்றார். தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட "தலித் மாணவர் பேரவை'யின் நிறுவனர்களில் ஒருவர். "தேசிய தலித் மனித உரிமைகளுக்கான பரப்புரை'அமைப்பிலும், தலித் ஆய்வு நிறுவனத்திலும் (IIDS) உலகளாவிய தலித் ஆதரவு ஒருங்கிணைப்பு (IIDS) ஆகிய அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். "சாதி, இனம் மற்றும் பாகுபாடு : ஓர் உலகளாவிய பார்வையிலான ஆய்வு 2004' என்ற நூலை மற்றொருவருடன் இணைந்து தொகுத்துள்ளார். உமாகாந்த், இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியை இங்கு வெளியிடுகிறோம்.

சந்திப்பு : கோமதி குமார், சஞ்சய் கபீர்

தலித் இயக்கத்தில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறீர்கள். நீங்கள் முதன் முதலில் எப்பொழுது, எவ்வாறு தலித் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினீர்கள்?

நான் இளவயது முதலே தலித் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அம்பேத்கரிய இயக்கத்திலும், கொள்கையிலும் எனக்கான ஈடுபாடு என்பது, என்னுடைய வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இக்கொள்கைகளில் தீவிர ஈடுபாட்டுடன் விளங்கிய என் தந்தைக்குதான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே "பாம்செப்', "டிஎஸ்4' மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வெளியீடுகளை எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் நம் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு எந்த அமைப்போ, சங்கமோ இல்லாத சூழலில் ஆங்காங்கே சிதறியிருந்தனர். நான் கல்லூரி படிப்பிற்காக தில்லி வந்த பிறகு தலித் மாணவர்களிடம் உரையாடி, அவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினேன். ஓர் அமைப்பை உருவாக்காமல், சில குறிப்பிட்ட பிரச்சனைகளை மய்யப்படுத்தி அவர்களை ஒன்றிணைக்க முயன்றேன். இருப்பினும், 1990 இல் தில்லி பல்கலைக் கழகத்தை மய்யப்படுத்தி உருவான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு எதிரான மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மாணவர்களை ஒருங்கிணைக்கும் என்னுடைய பணி தீவிரம் கொள்ளத் தொடங்கியது.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம், தலித் மாணவர்களிடையே எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது?

அந்த காலகட்டத்தில் நம் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. மண்டல் குழு பரிந்துரைகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக இருந்தாலும், சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களையே குறி வைத்து தாக்கத் தொடங்கினர். நம்முடைய மாணவர்கள்தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாயினர். உண்மையில் இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. சாதி இந்துக்களுக்கு எங்கள் மீதான முன் தீர்மானங்கள் எப்பொழுதுமே இருந்து வந்தாலும், இந்தப் போராட்டத்தின் மூலம் மிக வெளிப்படையாக எங்கள் மீது அவதூறுகளை சுமத்த ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் தில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு தலித் மாணவனாக இருப்பதே பெரும் சிரமமாக இருந்தது. எனவே, தலித், பழங்குடி மாணவர்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களையும் சந்தித்து அவர்களிடையே சுயமரியாதை உணர்வை ஊட்டினோம். சாதி இந்து மாணவர்களின் சாதிய மனோபாவத்தினால் இவர்கள் தாழ்வு உணர்ச்சி கொள்ளாத அளவுக்கு, அவர்களிடையே நம்பிக்கை உணர்வை ஊட்டினோம். வெகு விரைவில் ஒரு சிறிய குழு உருவானது. இதன் மூலம் சாதி இந்து மாணவர்களால் தேவையின்றி எரிச்சலடைய வேண்டாம் என்றும், தேவை ஏற்படும்போது இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கலாம் என்றும், ஒருவேளை அவர்கள் நம் மாணவர்கள் மீது வன்முறையை ஏவினால், நாம் ஒற்றுமையாக இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம்.

மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தின்போது, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த சாதி இந்து வன்முறையாளர்கள், தலித் மாணவர்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். எங்கள் கல்லூரியை சார்ந்த தலித் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை எனினும், மண்டல் எதிர்ப்புப் போராட்டம் நம் மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. 1991இல் புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்ட ஆய்வுக்காக சேர்ந்த பிறகு தலித் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளத் தொடங்கினேன்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிலிருந்து முனைவர் பட்ட படிப்புவரை, ஏறக்குறைய பத்தாண்டுகளை அங்கு செலவழித்திருக்கிறீர்கள். இப்பல்கலைக் கழகம் தீவிர தலித் ஆர்வலர்களுக்கான களமாகக் கருதப்படுகிறது. இதில் தங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது? அது, தங்களுடைய மாணவப் பருவத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைத்தது?

நான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, தலித் மாணவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர். நான் உடனடியாக அவர்களுடன் இணைந்து, "ஒருங்கிணைந்த தலித் மாணவர் பேரவை'யை (UDSF) 1991இல் உருவாக்கினேன். என்னுடைய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளவும், பேச்சாற்றலை செம்மைப்படுத்திக் கொள்ளவும் ஏதுவான வாய்ப்பாக அது அமைந்தது. இருப்பினும் எங்கள் பேரவை கூட்டுத் தலைமையிலேயே நம்பிக்கை கொண்டிருந்தது. ஆறு முதல் பத்து பேர் கொண்ட மத்தியக் குழுதான் எங்கள் செயல்திட்டத்தை தீர்மானித்தது. இங்கு நான் எடுத்துக் கொண்ட பயிற்சியே பின்னாளில் நான் ஒரு தலித் செயல்வீரனாக மாறுவதற்கும், உலக அளவில் குறிப்பாக அய்க்கிய நாடுகள் அவையில் தலித் பிரச்சனைகளை கொண்டு செல்வதற்கும் பெரும் உதவியாக இருந்தது. இந்த குறைந்த கால அளவில் நான் ஓரளவுக்கு பங்களித்திருக்கிறேன் என்றால், அந்தப் பெருமை தலித் மாணவர் பேரவையையே சாரும்.

பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கான செயல் தளம் என்பது இல்லாததாகவே இருக்கிறது. இந்நிலையில் இப்பேரவையின் முன்னோடியான தாங்கள், பேரவையின் மய்ய செயல்பாடுகளை விளக்குங்கள்.

நாங்கள் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்தோம். துண்டறிக்கைகளை வெளியிடு வது, சுவரொட்டிகள் ஒட்டுவது, கோரிக்கை மனுக்களை தயாரிப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவது, பல்கலைக் கழகத்திற்கு உள்ளும் வெளியிலும் பல்வேறு பிரச்சனைகளை ஒட்டி பரப்புரைகளை நிகழ்த்துவது என்பவை இதில் அடங்கும். எலினார் செலட், ஓவன் லிஞ்ச் மற்றும் கெய்ல் ஓம்வெட் போன்று தலித் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்திய புகழ்பெற்ற கல்வியாளர்களை அழைத்து வாசகர் வட்டங்களையும், வகுப்பறைகளில் உரையாடல்களையும் நிகழ்த்தினோம். பேராசிரியர்களான காஞ்சா அய்லையா, எஸ்.கே. தோரட், ஜோக்டான்ட் மற்றும் டாக்டர் ராமையா போன்றவர்கள் எங்களுடைய கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று கருத்துரை வழங்குபவர்களாக இருந்தனர். அமைப்பு சார்ந்த கூட்டங்களிலும், பிற பொதுக் கூட்டங்களில் பங்கேற்று எங்கள் தரப்பு வாதத்தை முன்மொழிகின்றவர்களாகவும் செயல்பட்டோம். எங்களுடைய இத்தகைய நடவடிக்கைகள் மூலம்பல்வேறு அரசியல் குழுக்களும் எங்கள் பிரச்சனைகளைப் பேசும் கட்டாயத்திற்கு ஆளாக்கினோம்.

படிப்பைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தலித் மாணவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய சமூக, பொருளாதாரப் பின்னணியை வைத்துப் பார்த்தால், அவர்களுக்கு கூடுதல் ஆபத்து இருக்கிறது. இது பற்றி தங்கள் கருத்து என்ன?

நான் இதை மறுக்கிறேன். இந்திய கல் லூரிகளில் ஒருங்கிணைந்த தலித் மாணவர் பேரவை போன்ற அமைப்புகளின் தேவை குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஒரு சிறு புரிதல்கூட மக்களிடம் இல்லை. நான் ஒன்றைத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். என்னுடன் படித்த மாணவர்களில் பேரவையின் தீவிர உறுப்பினர்கள் அனைவரும், அறைக்குள் அடைந்து கிடந்த மாணவர்களை விட அதிக அளவில் தங்களுடைய தொழிலில் வெற்றி பெற்றனர். அவர்கள் எல்லாம் இப்பொழுது கல்வியாளர்களாக, அரசு அதிகாரிகளாக இன்னும் சிலர் முழு நேர செயல்வீரர்களாகப் பணிபுரிகிறார்கள்.

அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு பேரவையில் பணியாற்றியதும், பேரவையின் பயிற்சியுமே முக்கியக் காரணம். பல்வேறு சமூகத்தினரு டன் பழகுவதற்கான வாய்ப்பும், ஓர் உறவு முறையை வளர்த்துக் கொள்வதற்கான அறிமுகமும் இதன் மூலம் கிடைத்தது. எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெறுவதற் கான முன்நிபந்தனை அவர்கள் பொது இடத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். அதற்கு பேரவை பெருமளவு உதவியாக இருந்தது. தலித்துகளுக்கு மாணவர் விடுதியில் இயல்பாக நிலவும் எதிர்மனநிலை, இத்தகைய பேரவைகளின் மூலம்தான் சரிசெய்யப்படும். தலித் மாணவர்கள் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளவும், போதிய தகவல்களைப் பெறவும். ஒருவருக்கொருவர் ஆதரவைப் பெறவும் தங்கள் சமூகத்தின் மீதான உணர்வைப் பெறவும் இப்பேரவை மிகவும் உதவியாக இருந்தது.

இப்பேரவையில் தலித் மாணவர்கள், இயக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். எங்கள் அமைப்பினுடைய உண்மையான வெற்றியே இதில்தான் அடங்கியிருக்கிறது. தொழில் ரீதியாக மட்டுமின்றி, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சமூகம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடும் நடந்து கொள்வதற்கு அம்பேத்கரின் கொள்கைகளே உறுதுணையாக இருக்கின்றன. மாணவர் பருவத்தில் அம்பேத்கர் கருத்தியலைப் பரப்புவதற்கு இத்தகைய பேரவைகளே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு இந்திய கல்லூரி வளாகத்திலும் தலித் மாணவர்களுக்கென்று இப்படியான அமைப்புகள் இருந்தால், மிக வேகமான மாற்றத்தை நாம் காண முடியும்.

நீங்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இருந்தபோது, இப்பேரவையின் முக்கிய சாதனைகள் என்ன?

நான் 2000 ஆம் ஆண்டில் நடந்தவற்றைத்தான் பேரவையின் மிக முக்கிய சாதனையாகக் கருதுகிறேன். இந்த ஆண்டில்தான் பல்கலைக் கழக மானியக் குழு (UGC), மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டியல் சாதி யினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்பில் இடஒதுக்கீடு இல்லை என்ற முடிவை வெளியிட்டது.நம்முடைய மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதைத் தடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. சாதிய பாகுபாடுகள் நிறைந்த, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்குஉயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் அங்கு சேர்வதற்கு முற்றிலுமாக வாய்ப்புகளே இல்லை.

இப்பிரச்சனையை பேரவை உடனடியாக கையிலெடுத்து பல்வேறு மாணவர் குழுக்களைத் திரட்டி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர்களை ஒருங்கிணைத்தது. நாங்கள் பல மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், குறிப்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்தோம். நாடு முழுவதும் உள்ள தலித் மாணவர்களை ஒருங்கிணைத்தோம். இப்பிரச்சனையில் பேரவை தலையிடாமல் இருந்திருந்தால், அதுவே தலித் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகமான முடிவாக இருந்திருக்கும்.

எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தால்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான், இப்பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தார். போராட்டம் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய இந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. இன்று வரையும் கூட பேரவையின் மிகப்பெரிய வெற்றியாக நான் இதைத்தான் கருதுகிறேன். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தலித் மாணவர்கள் பெரும் பயன் அடைந்தனர்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்னொரு மிக முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பொழுது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் தன்னுடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தது. இக்கொண்டாட்டத்தின் மூலம் அது மிக முற்போக்கான சிந்தனைகளும், கொள்கைகளும் இங்கு உருவானதாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இம்முழக்கத்தின் பின்னால் இருக்கும் போலித்தனத்தை நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

இச்சூழலை தங்கள் பேரவை எப்படி பயன்படுத்திக் கொண்டது?

பேரவை ஒரு முழக்கத்தை முன்வைத்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் கடந்த 25 ஆண்டுகளில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு செய்தது என்ன? இதுவரை எத்தனை தலித் மற்றும் பழங்குடி ஆசிரியர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்? தலித் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறித்த ஒரு பட்டியலைத் தயாரித்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே, பல்கலைக்கழகத்தின் அனைத்து முற்போக்கு முகங்களும் அம்பலமாகிவிட்டன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் சட்டத்திற்கு விரோதமாக, இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் வெளிக் கொணர்ந்தோம். பல்கலைக் கழக வளாகம் முழுவதும் இப்புள்ளிவிவரங்களைக் கொண்ட சுவரொட்டிகளால் நிரப்பினோம். கருப்பு கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். பல்கலைக் கழகம் எங்களுக்கு அநீதியை இழைத்துள்ளது என்ற பரப்புரையை மேற்கொண்டோம். இது, மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் மூலம் வெள்ளி விழா கொண்டாட்டமே ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு தான் இவ்வளவு நாட்களாக நிரப்பப்படாமல் இருந்ததலித் மற்றும் பழங்குடியினருக்கான இடங்கள் நிரப்பப்பட்டன. எங்கள் பரப்புரையின் தாக்கம் ஏற்படுத்திய விளைவே இது.

தலித் மாணவர்களின் பிரச்சனைகளைக் கடந்து, தலித் சமூகத்திற்குப் பேரவை எந்த வகையில் பங்காற்றியது?

நம்முடைய மாணவர்கள் சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ஆந்திர மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சுண்டூர் படுகொலையே பேரவை உருவாகக் காரண மாக இருந்தது. இப்படுகொலையில் 8 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் தங்களுடைய ஆதரவை தலித் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி நிலையில்தான் பேரவையை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் உணர்ந்தனர்.

1990களில் தான் தலித் சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக கிராமப்புறங்களில் உச்சக்கட்ட வன்முறைகள் நிகழ்ந்தன. இந்தப் பத்தாண்டுகளில், ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் எழுச்சியுடன் போராட வந்த தலித்துகள் கொல்லப்பட்டனர். பேரவை இத்தகைய வன்கொடுமைகள் நிகழ்ந்தபோதெல்லாம் தன்னுடைய ஆற்றலுக்கேற்ப பல்கலைக் கழக வளாகத்திற்கு உள்ளேயும், வெளியிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதுமட்டுமின்றி வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு உண்மை அறியும் குழுக்களை அனுப்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியது. மேலும் இப்பிரச்சனை குறித்து வளாகத்தில் பொதுக் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

1998ஆம் ஆண்டு 61 தலித்துகள் மிகக்கொடூரமாக சாதி இந்துக்களால் பீகாரில் லஷ்மண்பூர் என்ற இடத்தில் கொல்லப்பட்டனர். அப்பொழுது நானும் என்னுடன் படித்த ரவீந்திரகுமாரும் (இவர் தற்பொழுது புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்) இணைந்து, அய்.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிர தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். எங்களுடைய யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு நடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் மேற்கூறிய வன்கொடுமை நிகழ்ந்தது. அன்று இரவு முழுவதும் ஒவ்வொரு விடுதியாகச் சென்று மாணவர்களைத் திரட்டினோம்.

அடுத்த நாளே இவ்வன்கொடுமையைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டத்தை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தினோம். மேலும் தில்லியில் உள்ள உயர் அரசு அதிகாரிகளை எங்கள் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சென்று சந்தித்தனர். அதன் பிறகு எங்கள் குழு வன்கொடுமை நிகழ்ந்த லஷ்மண்பூருக்கு சென்று ஓர் உண்மையறியும் அறிக்கையை தயாரித்தது. இவ்வறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி, வன்கொடுமையாளர்களை கடுமையாக தண்டிக் கும்படி கோரியிருந்தோம். எங்களுடைய பரப்புரையின் மூலம் கொடூரமான இக்குற்றத்தை உலகறியச் செய்ததோடு, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இடையறாது போராடினோம். அப்பொழுது அய்.கே. குஜ்ரால் அரசில் அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் மிகுந்த அக்கறை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்.

-பேட்டி அடுத்த இதழிலும்

Pin It