ஒற்றைக் கண்ணீர்த்துளியொன்று வீழ்ந்து
புரள்கிறது
வெயிலெனப் பரவிய பூமியின்மேல்
உயிர்களைக் கடந்து
சுட்டுச் சாய்த்த சடலங்களை
குப்பைகளை பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்க வேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை காலில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக் காற்றின் கடைசி சுவாசத்தை
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவள் சுரப்பிகளைப் பொசுக்கி இருக்கலாம்
ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்
உறைந்த கடைசிவானம் குருதிச் சிவப்பாகியிருக்கலாம்
அதிகாரப்பசியின் கோரம்
உயிர்களைத் தின்ன
கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை கூடுகிறது
வறுமை
வாழ்வின்மை
சுரண்டல்
இவற்றுக்கெதிரான குரலே
மரணத்திற்கானதாகி விடுகிறது
ஊழலின் அரசியலை ஜனநாயகமாக்குவதும்
மக்களின் உயிர்களை மயிரென நினைப்பதும்
மக்களாட்சியெனின்
பசுமை வேட்டை என்பது
வேறென்ன
மக்களை கொல்வதன்றி