ஜூலை 11, 2006 அன்று நடைபெற்ற பயங்கரவாத செயலில் மும்பைவாசிகள் 200 பேரின் உயிர் பறிக்கப்பட்டது. மிகவும் நவீனமான நகரமாகக் கருதப்படும் மும்பையில் இது மூன்றாவது பெரும் தாக்குதல். மும்பை கலவரங்களின் போது நடைபெற்ற தாக்குதலில் ஆயிரம் பேர் மாண்டனர். அந்த முதல் தாக்குதலில் இறந்த பெரும்பான்மையினர் முஸ்லிம்களே. குஜராத் படுகொலைகளைத் தொடர்ந்து நான்கு குண்டு வெடிப்புகள் மும்பையை உலுக்கின. பல உயிர்கள் கொல்லப்பட்டன. இப்போது நிகழ்ந்ததும் ஒரு பயங்கரத் தாக்குதலே. 1993 தொடர் குண்டுகளை திட்டமிட்டு செய்தவர்கள், மும்பை நிழல் உலகுடன் தொடர்புடையவர்கள். சிவசேனாவால் வெளியேற்றப்பட்டு, தாக்குதல்-அவதூறு பிரச்சாரங்களால் வன்மம் கொண்டவர்கள் தான் அதில் ஈடுபட்டார்கள்.

படுகொலைக்குப் பிந்தைய குஜராத்

யார் இந்த தாக்குதல்களை செய்திருக்கக் கூடும் என சந்தேகிப்பதற்கு முன்பு, குஜராத்தில் படுகொலைகளின் போது என்ன நடந்தது? இப்பொழுது அங்கு என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். படுகொலைக்குப் பின்னர் குஜராத் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இருப்பிடத்தில் வசிக்குமாறு ஒடுக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் முஸ்லிம்கள் சமூக வாழ்விலிருந்து விலக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வாழ்ந்து வருகின்றனர். குஜராத் படுகொலையின் உண்மைக் குற்றவாளிகள்சுதந்திரமாக உலவி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த இழப்பீடுகளும் வந்து சேரவில்லை.

மகாராட்டிராவின் நாண் டேட்டில் அண்மையில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அது வெடித்ததில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இருவர் செத்து மடிந்தனர். அந்த இடத்தில் குண்டு தயாரிப்பு குறிப்புகள் அடங்கிய டைரி கைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அடையாள மாற்றத்திற்கான செயற்கை தாடி, மீசையும் கைப்பற்றப்பட்டுள்ளது. வெடிப்பு நிகழ்ந்த கட்டடம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளருக்கு சொந்தமானது. அந்த வீட்டின் மீது காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள பல பகுதிகளில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அருகில் காவல் துறையின் மோதல் சாவில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் இந்த நாக்பூர் சம்பவம் விசாரிக்கப்பட்டது. காவல் துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விசாரணையில் காவல் துறையின் அறிக்கை, பல முறைகேடுகளுடன் தயாரிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. காவல் துறை சார்பான ஒரு நேரடி சாட்சியம் கூட இல்லை. வழக்கம் போலவே செத்துக் கிடந்த தீவிரவாதிகளின் உடலில் தொலைபேசி எண்களுடன் கூடிய தாள்கள் இருந்தன. அப்போதுதானே காவல் துறை இவர்களை தீவிரவாதிகள் என அடையாளம் காண இயலும்.

உலகச் சூழல்

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட அல் கொய்தாவை அமெரிக்கா நிதியுதவி அளித்து வளர்த்தது, நம் நினைவுகளில் இன்னும் கூட பசுமையாக உள்ளது. அதன் பிறகு ஈரானுடன் போரிட ஈராக்கிற்கு ஆயுதங்களை வழங்கி அந்தப் பகுதியை பதற்றத்தில் ஆழ்த்தியது அமெரிக்கா. தான் வளர்த்த ஈராக் மீதே போரை தொடுத்தது அமெரிக்கா. ஈராக்கை நிர்மூலப்படுத்திவிட்டு, இப்பொழுது ‘தாலிபானு'க்கு பாடம் கற்பிக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல், அந்த சமூகத்தையே முடமாக்கியுள்ளது. ஈராக்கிய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, போதிய மருந்துகள், இன்றியமையாத பொருட்களின்றி தவித்து வருகிறார்கள். தலிபான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக இது போன்ற நெருக்கடிகளை ஆப்கானிஸ்தான் சமூகமும் அனுபவித்து வருகிறது.

பாலஸ்தீனியர்களின் நிலையும் அமெரிக்காவின் நிலைப்பாடுகளால் கவலைக்கிடமாக உள்ளது. சில இனக்குழுக்களிடையே திடீரென ஆயுத நடவடிக்கைகள் எழுவதன் பின்னணியை இதன் மூலமாகப் புரிந்து கொள்ளலாம். இட்லரின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான யூதர்கள் பல காலம் அனுதாபம் கோரி நின்றனர். ஆனால், அவர்களே இன்று பாலஸ்தீன பூர்வகுடிகள் மீது இனவெறியோடு கொடூரத் தாக்குதல்களை நடத்துகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடுக்கும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு, அமெரிக்கா பல வழிகளிலும் ஆதரவு வழங்கி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகின் பல்வேறு இனக்குழுக்களும் இது போன்ற தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வகையில் தென்பகுதியில் சிங்கள இனவெறி, அங்கு தமிழர் அமைப்புகள் ஆயுதம் ஏந்த வழிவகுத்தது. காலிஸ்தான் கோரிக்கையுடன் அணிதிரண்ட சீக்கியர்களை ஒடுக்க, இந்திய அரசு முழு பலத்தையும் பயன்படுத்தியது.

சோவியத்தின் சிதைவு, உலகின் நிலையான தன்மையை செப்பனிட முடியாத விளைவை ஏற்படுத்தியுள்ளது. சோவியத்தின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா தன்னைத் தானே உலக போலிசாக நியமித்துக் கொண்டது. அய்.நா.வின் முக்கியத்துவத்தை, அதிகாரத்தைக் கூட அமெரிக்கா அலட்சியம் செய்கிறது. இருப்பினும் ஏகாதிபத்தியத்திற்கு தன் ஆயுத தளவாடங்களை தயாராகப் பராமரித்து வைத்திருக்க வேண்டுமெனில், ஓர் எதிரி அவசியம். இஸ்லாத்தையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் ஜார்ஜ் புஷ் எதிரியாக்கினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி, லட்சக்கணக்கான ஒன்றுமறியாத முஸ்லிம்களை அமெரிக்கா இது காறும் கொன்று குவித்துள்ளது.

பயங்கரவாதமும் மதமும்

ஆன்மீக இயல்புகள் கொண்ட மதங்களிலிருந்து பயங்கரவாதம் உருவாகுமா? பயங்கரவாதம் எந்த ஒரு சமூகத்தையாவது, பிரதிநிதித்துவப் படுத்துகிறதா? உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட மனக்குறை, அதிருப்தியின் விதைகள் தான் மெல்ல பயங்கரவாதமாக உறுப்பெற்றுள்ளது. ஜிகாத்துக்கு அர்த்தம் வன்முறையா? நாம் மென்மையான, மிதவாத நாடென்பதால் தான் இங்கு பயங்கரவாதம் உள்ளதா? இது போல நம் மனங்களில் ஏராளமான தவறான கற்பிதங்கள் படிந்துள்ளன. உலகத்தில் இன்று எல்லா மதங்களும் இத்தகைய வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இவர்களில் எவறும் இந்த மதத்தின் கோட்பாடுகளின் படி நடப்பவர்கள் அல்லர்.

மதத்தைப் பரப்பவா சிலுவைப் போர்களில் கிறித்துவ மன்னர்கள் ஈடுபட்டார்கள்? இஸ்லாத்தைப் பரப்பவா ஜிகாத்களை முஸ்லிம் மன்னர்கள் செய்தார்கள்? தர்மயுத்தங்கள் இந்து மதத்தைப் பரவலாக்கவா நடத்தப்பட்டன? மதங்கள் தொடர்புடைய எந்தப் போரும் மதத்தைப் பரவலாக்க முடியாது. மன்னர்களின் அனைத்துப் போர்களும், அவர்களது சாம்ராஜ்ஜியத்தின் எல்லை விரிவாக்கம் தொடர்புடையவையே.

இஸ்ரேல் இன்றும் தனது எல்லையை விரிவாக்க பாலஸ்தீனத்தை அழித்தொழித்து வருகிறது. அய்.நா. அவையின் அனைத்து தீர்மானங்களையும் அவமதித்த இஸ்ரேலுக்கு, அமெரிக்கா எல்லாவித உதவிகளையும் நல்கியது. அரேபிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்த, இஸ்ரேலில் தனது படைத் தளத்தை அமைத்தது அமெரிக்கா. அந்தப் பகுதியில் பல தேசங்களில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளை கவிழ்த்து, பொம்மை அரசுகளை நிறுவி தனது கப்பல்களில் எண்ணெயை நிரப்பி வருகிறது. மேலும், செப்டம்பர் 9/11 தாக்குதல் அமெரிக்காவிற்கு அனைத்து வாசல்களையும் திறந்துள்ளது. உலகத்தில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டே இந்தியாவையும் தனது பிடிக்குள் கொண்டுவர அமெரிக்கா துடிக்கிறது.

பயங்கரவாத செயல்களுக்கு யார் பொறுப்பு? பயங்கரவாதம் என்பது மதம் சார்ந்ததா? அது ஒரு சமூகத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறதா? பொதுவாக பயங்கரவாதம் என்பது அரசியல் சார்ந்த இயங்குதலே. பல்வேறு மக்கள் சமூகங்களையும், மதங்களையும் சார்ந்தவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆதிக்கம் செலுத்தக் கூடிய சமூகங்களின் அழுத்தத்தினால்தான் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இஸ்ரேல், காஷ்மீர், அமெரிக்க மேலாதிக்கத்திட்டங்கள் ஆகியவை இணைந்து தான் இஸ்லாத்தை வன்முறையின் குறியீடாக சித்தரித்துள்ளது. இந்துத்துவாவின் வளர்ச்சி, சிறுபான்மையினர் மீதான பெரும் வன்முறை சம்பவங்களாகப் பரவியுள்ளன. நீதித்துறை பல சந்தர்ப்பங்களில் செயலற்று நிலைகுலைந்து, குடிமைச் சமூகத்தைப் பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.இன் தொடர் பிரச்சாரங்களால் இந்திய சராசரி மனம் கூட, இஸ்லாம் வன்முறையுடன் தொடர்புடைய மதம் என நம்புகிறது.பயங்கரவாத செயல்கள் தான் குஜராத் படுகொலைக்கு இட்டுச் சென்றதா? அல்லது குஜராத் படுகொலைகள் தான் -முஸ்லிம்கள் பழிவாங்கும் செயலான மும்பை வெடிப்புகளாக உருமாறியதா? கோத்ரா பயங்கரவாதம் தான் குஜராத் படுகொலையாக மாறியது என நாம் நம்ப வேண்டும் என நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனõல், கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் விஷயம் புலப்படும். அவர்கள் திட்டமிட்டு மிகப் பெரும் படுகொலை நிகழ்வுக்கு சாதகமாக கோத்ரா சம்பவத்தை முன்னிறுத்தினார்கள். ஆனால் இந்தப் படுகொலை திட்டம் வெகுமுன்பே தீட்டப்பட்டது. இந்துத்துவா தொடர்ந்து தன் திட்டங்களை நிறைவேற்றும் எதிரிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இது தான் அவர்களின் மூல திட்டம்.


Pin It