காய்கறிகளில் உடல்நலத்துக்கான சத்துகள் அடங்கியிருப்பதை விஞ்ஞானம் தான் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குள் மூடநம்பிக்கைகளையும் ஜாதியையும் பார்ப்பனர்கள் திணித்தார்கள். வீடுகளில் ‘திருஷ்டி’ கழிக்க பூசணிக்காய் கட்டினா லும் அந்த வீடுகள், அதற்கான விபத்து பாதிப்புகளிலிருந்து தப்புவதில்லை. ஆனாலும், மூடநம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து ‘ஈஷா’ சத்குரு வெளியிட்ட கருத்து இது:

கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில் வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்க விடும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?

சத்குரு: “உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திக் கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மகா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும் போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம்.  எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடு கின்றன. நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாச்சாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்து விடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதை தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்து விடுகிறது. குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதுவும் இல்லை. பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும், புத்துணர்வும் சமநிலையும் அதிகரிக்கிறது. இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற் கான ஒரு வாய்ப்பாக பூசணிக் காயைப் பயன்படுத்துகிறார்கள்” என்று கூறியிருக் கிறார் சத்குரு.

எதிர்மறைச் சக்திகளை விரட்டும் சக்தி பூசணிக்காய்க்கு இருக்கிறதாம். அது வீட்டைக் காக்கும் என்றால், சியாச்சின் பனிப் பாறையில் “பூசணிக்காய்”களை கட்டி வைத்து, இராணுவத்தினரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமே! பாதுகாப்புக்குச் சென்று பனிப் புயலில் சிக்கி, இராணுவத்தினர் பலியாக வேண்டிய அவசியமில்லையே!

வீட்டுக்கு வாங்கிய வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏலம் போவதை பூசணிக்காய் தடுத்து நிறுத்தியதா? பூசணிக்காய் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழவில்லையா? மூடநம்பிக்கைகளுக்கு இப்படி ஒரு விளக்கமா?

Pin It