நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை
விழாவில் நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடவுள் நம்பிக்கை குறித்து பெரியாரின் கருத்துக்களை எடுத்துக்காட்டினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: வேதத்தை முன்வைத்து வேதத்தின் வழிவந்த வந்த மனு சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டு இருக்கிற இந்த ஜாதிய சமுதாயத்தில், ஜாதியை உறுதியாக கட்டிக்காக்கும் ஆணாதிக்கம் (அ) பெண்ணடிமைத்தனம் இவற்றின் மீது கைவைத்து பெரியார் சாஸ்திரங்கள், புராணங்கள், மனு சாஸ்திரங்கள் உட்பட எல்லாவற்றையும் எரித்தார். புரட்சியாளர் அம்பேத்கரும் இவைகளை எரித்தார்.
சாஸ்திரங்களின் அதிகாரங்களை தகர்க்க வேண்டும் (Authority of Shastras) அதுதான் ஜாதியை ஒழிக்க வழி என்று அம்பேத்கர் சொன்னார். கடவுளை எப்படி சமூகம் வைத்திருக்கிறது என்பதை பெரியார் சொல்கிறார்:
கடவுள் என்பது ஒரு விளையாட்டு சாமான். சொர்க்கம், மோட்சம் என்பது ஒரு தின்பண்டங்கள் ஆகும். நரகம் என்பது ஒரு பூச்சாண்டி குழந்தைகளைத் பொறுத்த வரையில் இளம் குழந்தைகள் மூத்திரத்தை மண்ணில் பிசைந்து, கொட்டாங்குச்சியில் இட்லி சுடுவது போல் இதைத் தான் இந்த வயது வந்த தடியர்கள் கடவுள் பெயரால் கடவுளுக்கு திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியதோடு பல வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
சுந்தரவள்ளி
உலகிலேயே பெண்கள் நடத்தும் முதல் நாத்திக விழா என்று பேராசிரியர் சுந்தரவள்ளி தனது உரையில் கூறினார். அவரது உரையிலிருந்து....
உலகத்திலேயே பெண்கள் தலைமையில் நடந்த நாத்திக விழா என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து இருக்கிறோம்.
மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளை தோழர்கள் பெரும் உற்சாகத்தோடு, கடவுள் இல்லை என்ற முழக்கத்தோடு ஊர்வலம் வந்தனர். தமிழ்நாட்டில் தற்போது வலதுசாரிகள் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய இந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ் (ஆளுநர்) ரவி சனாதன பூமி என்று பேசி வந்த நிலையில், அதற்கு பதிலடியாகப் சேலம் கொளத்தூரில் இந்த பெண்கள்
ஒரு பகுத்தறிவு படையை இந்த நாத்திகர் விழாவை திரட்டி இருக்கிறார்கள்.
மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விழாவை ஏன் பெண்கள் நடத்த வேண்டும்? ஏனென்றால் பார்ப்பனியம் பெண்கள் வழியாகத் தான் மூடநம்பிக்கைகளை சடங்குகள் என்ற போர்வையில் கடத்துகிறார்கள். ஆரியப் பார்ப்பனியம் கடுமையான பல நவீன வடிவங்களில் மூடநம்பிக்கைகளுக்கு வலுசேர்க்கிற சடங்குகளை திணிக்கிறது.
கரூரில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சூத்திரர்கள் உருள்வது என்ற சடங்கை இன்னமும் காப்பாற்றத் துடிக்கிறார்கள். பார்ப்பன நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் எச்சில் இலையில் உருள்வது இந்து தர்மம் என்று பேசுகிறார். யாருக்கு அது தர்மமாக தெரிகிறதோ அவர்கள் அதில் உருண்டு, புரண்டு பிரார்த்தனை செய்யட்டும்.
பார்ப்பனர்கள் எப்போதும் இதுபோல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுவது கிடையாது. பார்ப்பான் காவடி தூக்க மாட்டான், அலகு குத்த மாட்டான், பறவைகாவடியில் தொங்க மாட்டான், பார்ப்பான் தீ மிதிக்க மாட்டான். பார்ப்பனர்களுக்கு அடியாட்கள் வேலை செய்யும் சூத்திரர்களை இதுபோன்ற சடங்குகள் வழியாக மூளைச்சலவை செய்து வைப்பார்கள் என்றார் சுந்தரவள்ளி.
ஜெசி
மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து...
இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் "பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது.
சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport) பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார்.
கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றி விடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார்.
ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத் தான் பெண்மயில்கள் கருவுறுகிறது என்று பேசி இருக்கிறார். பசுமூத்திரத்தில் தங்கம் இருக்கிறது, வெயில் காலங்களில் கிடைக்கும் பசுமூத்திரங்களில் தங்கம் அதிகம் கிடைக்கிறது. குளிர் காலங்களில் கொஞ்சம் குறைவுதான். இப்படி பல அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் வளர்க்கும் கருத்தியலை அறிவியல் என்ற பெயரிலே நீதிபதிகளே பேசுகிறார்களே.
நிறைய சாமியார்கள் பேசுகிறார்கள், இவற்றில் எதை உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்வது என்று ஒரு ஆசானிடம் போய் கேட்கிறார்கள்.
ஆசானின் பதில் "மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்பதனால் நம்பாதீர்கள், பிரபலமாக இருக்கிறது என்பதனால் நம்பாதீர்கள், உங்கள் புனித நூல்களில் இருக்கிறது என்பதனால் அதை நம்பாதீர்கள், நீங்கள் மதிப்பு வைத்திருக்கும் தலைவர் பேசுகிறார் என்பதனால் நம்பாதீர்கள், நீங்கள் வியக்கும் தலைவர் பேசுகிறார் என்றால் நம்பாதீர்கள், ஏன் நானே சொன்னாலும் நம்பாதீர்கள், உங்களது பொது புத்திக்கு (common sense) இயல்பான அறிவுக்கு சரி என்று சொன்னாலும் நம்பாதீர்கள், தர்க்கரீதியாக உங்களுக்கு அது உண்மை என்று தோன்றினாலும் நம்பாதீர்கள் என்றார் அந்த ஆசான். அந்த ஆசான் தான் புத்தர். புத்தருக்கு பிறகு பெரியார் வந்தார். உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள் என்று மக்களைச் சிந்திக்க செய்தார்.
ஆசிரியர் சிவகாமி
எதற்காக இந்த நாத்திகர் விழா? சில ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக இயக்கங்கள் எதிர்வினையாற்ற ஆட்சி எதிர்வினை ஆற்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்திக் கொண்டிருப்பதால் கடந்த சில வருடங்களாக பகுத்தறிவு நிகழ்ச்சிகளை, கடவுள் மறுப்பைப் பிரச்சாரம் செய்வதில் தொய்வு இருந்தது. இந்திய சமூகம் ஜாதிகளால் கட்டமைக்கப்பட்டது ஜாதி பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கி காப்பாற்றி வைத்திருக்கிறது மதங்கள் ஜாதியையும் பெண்ணடிமை தனத்தையும் காப்பாற்றுகின்றன.
இந்த பார்ப்பன வேத மதமான இந்து மதம் கடவுளை மனம் உருகி வழிபடுவதை விடவும் சடங்குகளுக்கே முக்கியத்துவம் தரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் வீட்டில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளில் இருந்து சமூகத்தில் நடக்கும் பெரிய விழாக்கள் வரை சடங்குகள் செய்வதன் மூலமே மதங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. சடங்குகளால் தான் கடவுள் உயிர் வாழ்கிறார்.
அம்பேத்கர் கூட ஒழுக்கத்திற்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தராத சடங்குகளை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று சொல்கிறார்.
தந்தை பெரியாரும் பெண்கள் கல்வி கற்பதற்கு இடம் தராதவையாக மதங்கள் இருக்கின்றன பெண்கள் சுதந்திரம் பெறுவதற்கு அருகதை அற்றவர்கள் என்று மதம் கூறுகிறது. எனவே அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். எனவே பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும்.
- பெ.மு. செய்தியாளர்