இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி...

 பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்' போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்து காட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்தி கேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார்.

இச்செயல்களால் கொந்தளித்துப் போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணிவேலை வெட்டிக் கொன்றனர். அந்தப் பழியை துரைசாமி மீதே போட்டு, சிறையில் தள்ளினர். சட்டப் போராட்டம் நடத்தி, துரைசாமியை மீட்டார் பெரியார். வெளியே வந்து, தன் நண்பர் மணிவேலின் பெயரிலேயே ஆதிக்கவாதிகளுக்கு மரண அடி கொடுத்தார் துரைசாமி. மாதிரிமங்கலத்தில் ஊரும் சேரியையும் இணைப்பதென்று முடிவெடுத்தார். முதற்கட்ட மாக 10 தாழ்த்தப்பட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, ஊர்த்தெருவுக்கு மத்தியில் மந்தக்கரை என்ற பகுதியில் குடியமர்த்தினார். சமத்துவபுரங்களை தவிர்த்துவிட்டு, இப்படியொரு வரைபடத்தை இந்தியாவில் இன்றும் எங்கும் பார்க்க முடியாது. ஆனால், 60-களிலேயே இதை அதிரடியாக நிகழ்த்திக் காட்டினார். அந்தக் குடியிருப்புக்கு தனது நண்பர் மணிவேல் பெயரைச் சூட்டினார்.

மறுநாள் காலையில் ஊர் கூடி எதிர்க்க, கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோரை ஆயுதங்களோடு நிற்க வைத்துவிட்டு, "வீடில்லாத ஏழைகள் இங்கே குடியேறியதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. யாராவது எதிர்த் தாலோ, எதாவது செய்தாலோ இவர்களுக்காக சிறைக்குப் போவதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை’’ என்று எச்சரித்தார். என்ன செய்வதென்றே தெரியாமல் கலைந்தது கூட்டம். பாதுகாப்புக்காக சில நாட்களே மணிவேல் நகர் வாசலிலே தூங்கினார் துரைசாமி. அதுநாள் முதல் அவர் 'என்.டி.சாமி' என்றாகி விட்டார்.

அடுத்து, 1962-இல் ஊராட்சி மன்றத் தலைவராகி, காவிரி நகர், காமராஜர் என்ற புதிய நகர்களை உருவாக்கி, அதில் கன்னி யம்மன் தெரு, மேட்டுத்தெரு காலனி மக்களை அங்கு குடியமர்த்தினார். மாதிரி மங்கலத்தில் தனியார் உதவியோடு பள்ளிகளைத் தொடங்கி, பின்னர் அதை அரசே ஏற்று நடத்தும்படி செய்தார். அங்கு பெரும்பாலா னோர் படித்திருக்கி றார்கள். என்.டி.சாமியின் வீட்டுத் திருமணத்தில் தாய்மாமன் சீர், தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டிலிருந்து வந்தது. 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம் அங்கிருந்து... 1978-லேயே என்.டி.சாமி மறைந்துவிட்டார். ஆனால், இப்போதும் மாதிரிமங்கலத்தில் நாவிதர், வண்ணார், ஆதிதிராவிடர், வன்னியர், இஸ்லாமியர் சமூகங்கள் ஒன்றாக அருகருகே வசிக்கிறார்கள். அவர்களுக்குள் எந்தவித பேதமும், மோதலும் இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் செத்த மாடு தூக்குவதோ, பறை அடிப்பதோ இன்றும் கிடையாது.

- ர.பிரகாசு முரசொலியில் எழுதியது.