எல்லை மீறும் புகழ்ச்சியாளர்களிடம், எச்சரிக்கை தேவை!

அண்ணா நூற்றாண்டில் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை கலைஞருக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்திருப்பது மிகச் சிறப்பான - மகிழ்ச்சியான முடிவு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. நீண்ட நெடிய திராவிடர் இயக்க வரலாற்றில் பயணித்த மூத்த தலைவர் கலைஞர்; பள்ளிப் பருவத்திலே அவர் தொடங்கிய கொள்கைப் பயணம் - பேச்சாளராக, எழுத்தாளராக, நாடக நடிகராக, போராளியாக தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டு வளர்த்த உழைப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முதுமையிலும் தொடர்கிறது.

தமிழகத்தின் சமூக வரலாற்றோடு இணைந்து நிற்கும் பெரியார் விருது பெறும் முழுத் தகுதியும் பெற்ற முதன்மையான தலைவர். பெரியார் எனும் பெரும் புரட்சியாளர் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர்; சுயமரியாதைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்; அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினம் அவரால் தலை நிமிர்ந்தது.

உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியது. ஆனாலும் பெரியார் தொடங்கிய அந்த சுயமரியாதை புரட்சிப் பயணம் - இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பது உண்மை. இடையூறுகளும், முட்டுக்கட்டைகளும் பின்னடைவுகளும் சவால்களாக வந்து நிற்கின்றன. இந்த நிலையில் சிலைகளும், விருதுகளும், பாராட்டுகளும், பெயர் சூட்டல்களும், பெரியாரின் சுயமரியாதை உணர்வுகளை ஊட்டக் கூடிய குறியீடுகளே தவிர, அவைகளே சமூக மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. இவை எல்லாம் கலைஞர் அறியாதவை அல்ல.

பெரியார் உருவாக்கிய சுயமரியாதைப் புரட்சி தமிழகத்தில் உருவாக்கியுள்ள தாக்கம் எத்தகையது என்ற கேள்விக்கு சரியான சமூகத்தைப் பற்றிய மதிப்பீடும், மாற்றங்களைப் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. சென்னையில் பெரியார் திடலில் கி.வீரமணி, சமூகநீதி வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் - பெரியார் உருவாக்கிய மாற்றத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

"இன்றைக்கு உங்களால் போற்றப்படுகிற தலைவனாக இருக்கிறேன்; உங்களால் அன்பு பாராட்டப்படுகிற தலைவனாக இருக்கிறேன்; ஆனால் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு நான் வருவதற்கு காரணம், நம்முடைய கருத்துகள், பகுத்தறிவு எண்ணங்கள், பெரியாரால் போதிக்கப்பட்ட அந்தச் சுயமரியாதைச் சுடரொளி. அதுதான் இன்றைக்கு என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது."

பார்ப்பனிய வர்ணாஸ்ரம சதியின் கொட்டத்தை அடக்கி, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் வேர் பிடிக்கக்கூடிய அளவுக்கு, மண்ணை பக்குவப்படுத்தியதுதான், பெரியாரின் மகத்தான சாதனை; இது சாதாரணமான புரட்சி அல்ல.

இந்தப் பின்னணியில் சில கசப்பான உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற விருது வாங்கும் விழாவில், பெரியார் விருது பெற்ற கலைஞருக்குப் புகழாரம் சூட்டுவதில் சில தலைவர்கள் கடுமையான போட்டிக் களத்தில் நின்றதை நாட்டு மக்கள் பலரும் தொலைக்காட்சியில் பார்த்தனர். அந்தப் புகழரையாளர்கள் உதிர்த்த மொழிகள் சமூகத்தைப் பற்றிய புரிதலோ, கவலையோ இல்லாமல் புகழ்ச்சியையே கேலிக்குரியதாக்குவதாக இருந்தன என்பதை நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

ஒரு தலைவர் தனது புகழுரையில், பெரியாரைவிட கலைஞர் உயர்ந்து நிற்கிறார் என்றும்; பெரியார் உயர்சாதிக்காரர், கலைஞரோ மிகவும் பின்தங்கிய சாதிக்காரர். எனவே பெரியாரைவிட கலைஞர் மிஞ்சி நிற்கிறார் என்றும்; இலக்கியப் படைப்புகளில் அண்ணாவையும் கலைஞர் மிஞ்சியவர் என்றும் பேசினார்.

மற்றொரு தலைவரோ, கலைஞருக்கு விருது வழங்கக்கூடிய போதுமான தகுதி பெரியாருக்கு இல்லை என்ற பொருளில் - பெரியார் விருது கலைஞருக்குப் போதுமானது அல்ல; பெரியார் விருதையும் தாண்டி நிற்கும் விருது கலைஞர் விருதாகவே இருக்கும் என்றும், கலைஞருக்குத் தகுதியான விருது கலைஞர் விருதாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் பங்குக்கு பேசினார்.

பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விடக் கூடாது என்ற ஒரே கவலையோடு கலைஞரைப் பாராட்டத் துடித்த கருஞ்சட்டைத் தலைவர் - அண்ணாவைவிட, சிறந்த தலைவர் கலைஞர் என்றும், இதை பெரியாரே கூறியுள்ளார் என்றும், இன்னும் ஒரு படி மேலே போனார். இப்படி எதார்த்தங்களுக்கு மாறாக - கலைஞரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் புகழ்ச்சி வியாபாரிகள் - ஏற்கனவே கலைஞரை வசைமாறி பொழிவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் தான் என்பதும் கலைஞர் அறியாதது அல்ல! இந்த அதீத புகழுரைகளால் கலைஞர் மனம் குளிர்வார் என்று, இவர்கள் கருதுவதே - கலைஞரைப் பற்றி இவர்கள் மிக பலவீனமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது.

இவற்றுக்கும் கலைஞரின் பெரியார் திடல் உரையிலேயே பதில் இருக்கிறது. "நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானை இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம்... ஆனால் எதிர்காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும் போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை" என்று கலைஞர் அருமையாக படம் பிடித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலே இருந்தாலும் கூட - தமிழ்நாட்டில் இன்று கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி, மூடநம்பிக்கைகள், கட்டை பஞ்சாயத்துகளுக்கு எதிரான சமூகப் புரட்சியை கலைஞர் நடத்திட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். தங்கபாலு போன்றவர்கள் - சமூகநீதிக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள்.

ஆனால், பெரியார் இயக்கத் தலைவர்களோ, பாராட்டுப் பத்திரங்களை வாசிப்பதற்கு மட்டுமே துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பெரியாரையும் - அண்ணாவையும் மிஞ்சிய சாதனையாளர்கள் எவருமே இருக்கக் கூடாது என்று நாம் கூறவரவில்லை; அத்தகைய சாதனையாளர், புரட்சியாளர் வருவதுதான் பெரியார் - அண்ணா கொள்கைக்கான வெற்றியாக இருக்க முடியும். ஆனால், சமூகத்தில் அந்த நிலை வந்து விட்டதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. பெரியார் விருது பெற்றுள்ள கலைஞரின் பார்வைக்கு நாம் கவலையுடன் சில பிரச்சினைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

தமிழக கிராமங்களில் - சாதி வெறியும் தீண்டாமையும் தலை விரித்தாடுகிறது. இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள் தொடருகின்றன; தீண்டப்படாத மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்படுகிறது; சாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு இல்லை; சாதி வெறிக்கு கட்சித் தடைகள் ஏதுமில்லை; ஆதிக்கசாதியினர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சாதி வெறியில் ஒரே அணி தான். சாதி வெறிக்கோ, தீண்டாமைக்கோ, துணை போகும் கழகத்தினர் மீது - சாதி ஒழிப்பு பேசும் கழகங்கள் நடவடிக்கை எடுத்தாலே கிராமங்களில் பாதி சாதிக் கலவரங்கள் நின்று போகும் வாய்ப்பு உண்டு!

தி.மு.கழகம், இதை ஏன் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி. தமிழ்நாட்டில் - மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுகின்றன. பெரியாரைப் பற்றி இந்து முன்னணி - பா.ஜ.க. - மேடைகளில் எச்.இராஜா போன்ற பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெரியார் இயக்கங்களின் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். கோவையில் - இயக்குனர் சீமான் பேசிய பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் பெரும் கலவரத்தை நடத்தினர்.

சென்னைக்கு அருகே உள்ள போரூரில் தொடர்ந்து பெரியார் பிரச்சாரக் கூட்டங்கள் மதவெறியர்களால் குலைக்கப்படுகின்றன; மத வெறி சக்திகளுக்கு காவல்துறை ஆதரவாகவே செயல்படுகிறது. பெரியார் திராவிடர் கழகம் - மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. திராவிட இயக்க தமிழர் பேரவை - தி.மு.க.வின் ஆதரவு அமைப்பு தான். அந்த அமைப்பின் சார்பில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, காவல்துறை மறுத்து விட்டது; அதற்கு காவல்துறை கூறிய காரணம் தான் விசித்திரமானது.

சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் இருப்பதாலும், அதே பகுதியில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தங்கியிருப்பதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எழுத்து மூலம் பதில் தந்துள்ளது. மீண்டும் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல் துறை எழுத்துப்பூர்வமாக அண்ணா நூற்றாண்டு விழாவுக்கும் அனுமதி மறுத்துள்ளது.

அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றுமாறு - அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசாணை இன்னும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் - பஜனை மடங்களாகவே காட்சி அளிக்கின்றன. தமிழ் நாட்டில் அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான 20000 பதவிகள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இப்படி ஒரு அவலம் தொடருகிறது. இப்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வேலை வாய்ப்புகளை - தனியார் துறையில் மட்டும் தான் பெற முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகளில் தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்காகவே அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு தனியார் துறை இடஒதுக்கீட்டையே கைகழுவ முடிவு செய்துவிட்டது. அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஓடி விட்டன. அரசு சார்பில் - எந்த எதிர்ப்பும் வரவில்லை.

பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உ.பி.யில் ஆட்சி நடத்தும் முதல்வர் மாயாவதி கூட மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை, சட்டப்பூர்வமாக்கியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 17 ஆண்டுகாலமாக சிறையில் வாடிவரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர், தங்களின் விடுதலையை கோரி நிற்கிறார்கள்.

ராஜிவ் கொலையில் நேரடி தொடர்புடைய பலரும் மரணமடைந்து விட்டனர். வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு சட்டரீதியான நியாயங்களும், மாநில அரசுக்கு உரிமைகளும் இருந்தும்கூட கலைஞர் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்ற கேள்வியை வேதனையுடன் எழுப்புகிறோம்; கலைஞர் ஆட்சியிலே இவர்களுக்கு விடிவு கிடைக்காவிடில் - வேறு எந்த ஆட்சியில் கிடைக்க முடியும்? இதைப் பரிசீலிப்பதற்கு - தகுதியுள்ள ஒரே ஆட்சி கலைஞர் ஆட்சி தானே? அன்று தூக்கில் தொங்கிய மலேசியா கணபதிக்கு குரல் கொடுத்த கலைஞர், தோழர் தியாகு - புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை, தூக்குத் தண்டனையிலிருந்து, காப்பாற்றிய கலைஞர், இன்று, பெரியார் குடும்பத்தின் பிள்ளை பேரறிவாளனுக்கு, நளினிக்கு - தோழர்களுக்கு பரிவு காட்ட வேண்டாமா? • தமிழ்ச் செல்வன் - படுகொலைக்கு கண்ணீர் கவிதை வடித்து, உள்ளத்தின் உணர்வுகளை வெளிக்கொட்டினார் கலைஞர்.

பார்ப்பன சக்திகள் உடனே மிரட்டின. அவர்கள் எதைச் செய்தாலும் மிரட்டவே செய்வார்கள். எந்தச் சூழலிலும் அவர்களின் ஆதரவுக் கரம் கலைஞரை நோக்கி நீளப் போவது இல்லை. ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசு - அவர்களின் ராணுவத்துக்கு உதவிட - இந்தியாவின் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ள செய்தி அம்பலமாகியுள்ளது. எம்.கே. நாராயணன் - 'இந்து' ராம் - சுப்ரமணியசாமி - ஜெயலலிதா - இல.கணேசன் - இராம. கோபாலன் என்ற பார்ப்பன வட்டம், ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக, தங்கள் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி வரும் நிலையில், கலைஞர் ஆட்சி, மவுனம் காக்கலாமா? உண்மையான வன்மையான கண்டனத்தை எழுப்ப வேண்டாமா?

• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

• அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் 'இதயத்தில் தைத்த முள்ளாகவே' மாறிவிட்டது.

• எல்லாவற்றிற்கும் மேலாக பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் பெரியார் விருது பெற்ற பிறகும் - கலைஞர் - பெரியார் நூல்களை நாட்டின் பொதுச் சொத்தாக அறிவிக்கத் தயங்கலாமா? பெரியாரை - தனி உரிமையாக்கும் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த வரலாற்றுக் கடமையை ஆற்றத் தவறலாமா? என்று கேட்கிறோம். - இப்படி எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன.

சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சியின் கொள்கை முடிவாலும், நிர்வாக முடிவாலும் செயல்படுத்தக் கூடியவைகள் தான். மக்கள் நலத் திட்டங்களில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது இந்த ஆட்சி; அதை எவரும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய ஆழமான சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது முன்னுரிமைக்குரிய செயல்பாடு அல்லவா? இந்தப் பிரச்சினைகளில் கலைஞர் உரிய கவனம் செலுத்தி செயல்படும்போது, கலைஞருக்கு கிடைத்த பெரியார் விருது பெருமையுறும், கலைஞர் மேலும் பெருமை பெறுவார். கலைஞரின் புகழ் வரலாற்றில் பதிந்து நிற்கும். நிலைத்த புகழ் செயல்களில் தான் அடங்கியிருக்கிறது. மேடைப் புகழ்ச்சியாளர்களின் புகழாரங்களில் அல்ல என்பது கலைஞருக்கு தெரியாத ஒன்றா?

Pin It