போரை நிறுத்துமாறு எந்தக் கோரிக்கையும் இந்தியா, இலங்கையிடம் வைக்கவில்லை. அத்துடன் கடல் பகுதியில் சிங்கள கப்பல் படைக்கு உளவு வேலை பார்த்து, விடுதலைப் புலிகள் படகுகளையும், கப்பல்களையும் அழிப்பதற்கு உதவி வருகிறது என்ற செய்திகள் வெளி வந்துள்ளன.

தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இப்போது வெளிவந்துள்ள அந்த ஏட்டில் (நவம். 21, 2008) அண்மையில் ராஜ பக்சேயின் தூதராக அவரது சகோதரர் பசில் ராஜபக்சே டெல்லியில் மன்மோகன் சிங்கை சந்தித்தது பற்றியும், சென்னையில் முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் பற்றியும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம்:

தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பி யமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந் துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின் படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது. வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற் கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்து மாறு, இந்தியா இதுவரை எந்த திட்டவட்டமான கோரிக்கையையும், இலங்கையிடம் முன் வைக்கவில்லை என்றே, சிறீலங்கா பிரச்சினையைக் கவனித்து வருவோர் கூறுகின்றனர்.

உண்மையில், கொழும்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பேட்டி அளித்த பசில் ராஜபக்சே, “விடுதலைப் புலிகளை முற்றாக நசுக்குவதற்கு, இந்தியா எவ்வளவு அதிகம் உதவ முடியுமோ, அந்த அளவு உதவிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 800 இலங்கை ராணுவத்தினருக்கு காடுகளில் போராடுவது பற்றியும், போராளிகளை எதிர்கொள்வது பற்றியும் இந்தியா பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த பிப். 2007-இல் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை ராணுவத்துக்கான, பெரும் அளவிலான பயிற்சி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது”

(A major part of training of Srilanka Armed forces is carried out in India) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கப்பல்படையின் உளவுத் துறை, கடல் பகுதிகளில் உளவு வேலைப் பார்த்து, இலங்கை கப்பல் படைக்கு பல ரகசிய தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. (இந்திய கடல் பகுதியில் ராடார் கருவியை அமைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் சென்னையில் அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ராடார் கருவி இப்படி உளவு சொல்வதற்குத்தான் பயன்படுகிறது. - ஆர்) இந்திய கப்பல் படை தந்த தகவல்களினால் இலங்கை கப்பல் படை விடுதலைப் புலிகளின் படகுகளையும், கப்பல்களையும் அழித் துள்ளன. அவர்களுக்கு வந்த ஆயுதங்கள் அழிக்கப்பட் டுள்ளன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய கட லோரக் காவல்படை அதிகாரிகளும், இலங்கை கப்பல் படை அதிகாரிகளும் சந்தித்து, இது தொடர்பான அழித் தொழிப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர்.

இது தவிர, இந்தியாவும், இலங்கையும் ‘பாதுகாப்பு கூட்டுறவு உடன்பாடு’ ஒன்றை உருவாக்கியுள்ளன. இரு தரப்பினரும் அதில் கையெழுத்திடும் நிலை வந்தபோது, கடைசி நேரத்தில் அய்க்கிய முன்னணி ஆட்சி, கூட்டணிக்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால், கையெழுத்திடாமல் தள்ளிவைத்துள்ளது. “அரசியல் தீர்வு” என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் ராணுவ உதவிகளை வழங்கி வரும் இரட்டை கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது - என்று அந்த ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் எழுதியுள்ளார்.

Pin It