உலகத் தமிழர்கள் இடத்தாலும், தொழிலாலும், சாதியாலும், சமயத்தாலும், பொருளியல் ஏற்றத்தாழ்வுகளாலும் பிரிந்திருந்தாலும், மொழியால் ஒன்றுபடுகிற குணம் மிகுதி. இந்தக் குணம் பல இனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், தமிழினத்தில் மேற்கூறிய காரணங்களால் பிரிவு பாராட்டி, பிரிந்து கொள்கிற பண்பு அதிகமாக நடைமுறையில் இருக்கிறது. எனவே ‘தமிழால் ஒன்றுபடுவோம்’ என்று அறிஞர்கள் உரக்கப் பரப்ப வேண்டிய தேவை தமிழினத்தில் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் மொழிக்கு அடுத்தபடியாக அல்லது முதற்படியாகவே ஒன்று தமிழினத்தில் நிலவுகிறது என்றால், அது திருக்குறள் மட்டுமே. ஒரு மொழிக்கு இணையாக வைத்துப் போற்றிக் கொள்ளக்கூடிய அளவில் பெருமை பெற்ற நூல் ஒன்று இருக்கிறதென்றால் உலகிலேயே திருக்குறள் ஒன்று மட்டுமே!

இலக்கிய ஒப்பீட்டாய்வின் வழியாகவும், மொழி பயன்படுத்தும் சொற்களைக் கையாளும் முறை இவற்றின் வழியாகவும், இதன் காலம் இன்றைக்கு 2054 ஆண்டுகள் என அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனாலும், இது அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவர் கைகளிலும் பரவலாகப் பயன்படுத்தத்திற்கு வந்தது இருநூறு ஆண்டுகளாகத்தான்! கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக உலகமெல்லாம் ஐரோப்பியர் சென்றனர். ஆப்பிரிக்காவிற்குக்கூட அந்நாட்டு நீக்ரோக்களிடையே மதம் பரப்பினார்.

நீக்ரோ மக்களிடையே ஒரு புகழ் பெற்ற பாடல் உண்டு. அதில் மதம் பரப்ப வந்தவர்களின் கொடுமையைப் பற்றி சில வரிகள் உண்டு.

“அவர்கள் மதம் பரப்ப வந்தார்கள்

 அவர்கள் கையில் பைபிள் இருந்தது.

 அவர்கள் மதம் பரப்பி முடித்தபோது

 எங்கள் கையில் பைபிள் வந்தது.

 இந்த நாடே அவர்கள் கைக்குப் போனது.”

அந்த வகையில் வல்லாண்மை கொண்ட மதம் பரப்புநர்கள் தமிழ்நாட்டிற்கும் வந்தனர். திருக்குறளைக் கண்டனர். பைபிளைக் கீழே வைத்துவிட்டுத் திருக்குறளை எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் பரப்பினர். திருக்குறளின் சிறப்பை அவர்கள் உணர்ந்திருக்காமல் இது நடந்திருக்காது. பைபிளைப் பரப்ப கிறித்துவ மதம் துணையிருந்தது.

திருக்குறள் எந்த ஒரு மதத்தின் துணையுமின்றி பொதுமாந்த அறவொழுக்கத்தை மட்டுமே கொண்டிருந்ததால் அவர்கள் வேறுபாடின்றி, அதைப்பரப்ப முன் வந்தார்கள். எனினும் ஐரோப்பியரின் அறிவு நேர்மையை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

குசராத்தி மீதும், இந்தி மீதுமே பற்றுக் கொண்ட காந்தியடிகள் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதே திருக்குறளை மூல மொழியில் படிக்கவேதான் என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியிலுள்ள நூல்களையெல்லாம் இருட்டடிப்புச் செய்வதும், மொழி பெயர்ப்புச் செய்து கொண்டு மூலநூல்களை அழிப்பதும், இவை தங்களின் நூல்களிலிருந்துதான் தோன்றின என்றும், தங்கள் நூல்கள்தாம் இவற்றிற்கெல்லாம் மூலம் என்றும் இழிவுபடுத்துவதுமான செயல்கள் இந்நாட்டில் நடைபெற்றன. தமிழினத்தின் அடையாளத்தைக் காக்கக் கூடிய நூல்கள் மூன்று. தமிழ் மொழியைக் காக்கும் தொல்காப்பியம், தமிழரின் கலைப்பண்பாட்டைக் காக்கக்கூடிய சிலப்பதிகாரம், அறவொழுக்கத்தைக் கற்பிக்கும் திருக்குறள் ஆகியவையே அவை. வேதத்திலிருந்துதான் திருக்குறள் உருவாக்கப்பட்டது என்று கூறி திருக்குறளின் பெருமையை இழிவுபடுத்தும் போக்கு பரிமேலழகர் காலத்திலேயே தொடங்கி விட்டது.

பரிமேலழகர் திருக்குறளுக்குச் சிறந்ததொரு உரையை எழுதப் புகுந்து அதன் கருத்துகளை ஆரியச் சார்பாகத் திரித்து உரையை எழுதி விட்டார் என்பது தெளிந்த தமிழறிஞர்களின் கருத்து. பரிமேலழகர் முதல் நாகசாமி வரையிலுள்ள ஆரியம்சார் அறிஞர்களுக்கெல்லாம் இதே முயற்சிதான். அவர்கள் சேற்றை வாரிப் பூசுவதும், அதைத் தமிழறிஞர்கள் தூய்மைப்படுத்துவதுமே காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த வல்லாண்மை முயற்சிகளினின்று திருக்குறளைக் காத்துக் கொள்வதும் அதன் பெருமைகளையும் தனித்தன்மைகளையும் மீட்டுக் கொள்வதும் நம் கடமையாக இருக்கிறது. அதன் பெருமைகளைத் தமிழினம் முழுவதுமாக உணர்ந்து கொண்டுள்ளதா என்பதும், உணர்ந்து பின்பற்றுகிறார்களா என்பதும் ஐயத்திற்குரியது. அதைப் போற்றுகிற அயலவர்கள் அளவிற்குத் தமிழர்கள் அதைப் போற்றிக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

கிறித்துவ, இசுலாமியத் தமிழறிஞர்கள் திருக்குறளைப் போற்றிக் கொள்கிற வகையில்கூட ஆரிய மதத்தினர் போற்றுவதில்லை. மாறாக இழிவையே அள்ளித் தெளிக்கிறார்கள்.

திருக்குறளை இந்தக் காலத்திற்குத் தக்கவாறு அதனை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் அதைக் காத்துக் கொள்வதும் காலத்திற்குத் தக அதுகூறும் அறவாழ்வைப் பின்பற்றுவதுமே தேவையாகும்.

தமிழ்நாட்டில் எண்ணற்ற திருக்குறள் அமைப்புகள் தோற்றுவிக்கப் பெற்று, பல்வேறு நோக்கங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றிணைக்கும் முயற்சியில் `திருக்குறள் பேரவையம்’ என்ற ஒரு பேரியக்கத்தை நாம் கூட்டியிருக்கிறோம்.

திருவள்ளுவம் காட்டியிருக்கிற அறநெறியே தமிழ்நாட்டிற்குரிய வாழ்க்கை நெறியாக இருக்க முடியும் எனப் பேரவையம் கருதுகிறது.. தனி மாந்த வாழ்க்கை நிலைகள் மட்டுமின்றி குமுக வாழ்க்கை நிலைகளுக்கும், உலகியல் நிலைகளுக்கும் அறநெறியே சிறந்த வாழ்வியல் நெறி எனப் பேரவையம் பறைசாற்றுகிறது..

அறநெறி என்பது,

* பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவது

* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது

* இரந்துண்டு வாழாதிருப்பது

* ஈதல் இசைபட வாழ்வது

* வாய்மை நெறி ஏற்பது

* கல்வி விழுச்செல்வம் என ஒழுகுவது

* மக்கள் பண்பு கொள்வது

* ஒப்புரவு அறிந்தேற்று அறனிழுக்காது வாழ்வது

* ஆள்வினையும் ஆன்ற அறிவும் பெறுவது

* குடி செய்து வாழ்வது

மேற்கூறப்பட்ட 10 நெறிகளோடு ஒழுகுவதும்.. ஆரிய வர்ணப் பாகுபாட்டை மறுப்பதும்.. சாதியக் கூறுபாடுகளைப் புறந்தள்ளுவதும்.. சமய வழிபாடுகளை ஏலாது மறுப்பதும்.. திருக்குறள் பேரவைய உறுப்பாண்மைக்குரிய அறநெறிமுறை. எனவே அவற்றைப் பரப்புவதும்.. அப்படியான திருக்குறளை அனைவருக்கும் இனங்காட்டுவதும் திருக்குறள் பேரவையத்தின் அடிப்படை நோக்கமாகும்.

முனைவர் மா.பூங்குன்றன், திருக்குறள் பேரவையம்

Pin It