சென்ற 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய​ நாட்களில் வீசிய​ ஒக்கி புயல் குமரி மாவட்ட​ மீனவ​ மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரிதும் சீர்குலைய​ செய்துள்ளது.மீனவ​ கிராமங்களில் அழுகுரல்கள் இன்றும் கேட்டு கொண்டு தான் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள்.

fisherwoman 640

வெள்ளம் போன்ற​ பேரிடர் காலங்களிலும், சுனாமி வந்த சமயத்திலும் மீனவர்கள் செய்த​ மீட்புபணிகளும் செய்த​ சேவைகளும் மிகவும் மகத்தானவை. ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது எங்களுக்காக​ ஒருத்தரும் வரலையே என்கிற​ வேதனையில் இன்று மீனவர்கள் இருக்கிறார்கள்.

பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக​ இருக்கும் நபர்களை இழந்திருக்கிறார்கள். கடலுக்குச் சென்ற​ நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே இன்னும் தெரியவில்லை.பாதிக்கப்பட்ட​ குடும்பங்களோடு பேசும் போது நம் கண்ணில் இரத்தக் கண்ணீரே வருகிறது.

ஆனால் மீனவர்கள் பலியானதற்கு ஒக்கி புயல் தான் காரணமா என்றால் இல்லை என்பது தான் பதில். மீனவர்களின் மரணத்திற்கு பின்னால் இருப்பது நம் அரசுகளின் பாசிச​ முகமே. அரசுகளோடு சேர்ந்து கொண்டு நம் இந்தியச்​ சமூகமும் தன் கோர​ ​ முகத்தைக் காட்டி மீனவர்களை படுகொலை செய்தது. ஆம்! நடந்திருப்பது ஒர் இனப்படுகொலை. இந்த​ இனப்படுகொலைக்கு பின்னால் இருக்கும் காரணிகளைப் பற்றி பேச​ வேண்டியது மிக​ அவசியமான ஒன்று.

முதலில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட​ குமரி மண்டலத்தில் காணப்படும் அரசியல் மற்றும் சமூகநிலையைப் பற்றி பார்ப்போம். பாதிக்கப்பட்ட​ மீனவ​ கிராமங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற​ ஊடகவியலாளர் ஒருவர் கூறும் போது மீனவ​ கிராமங்களைத் தவிர​ இம்மாவட்டத்தின் இதர​ பகுதிகளில் கடலில் உயிருக்கு போராடும் மீனவர்களைப் பற்றி யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை என்றார். இது தான் குமரி மாவட்டத்தின் கள யதார்த்தம். தன் மாவட்டத்தைச் சேர்ந்த​ மீனவர்கள் பாதிக்கப்படும் போது கூட​ அதனைப் பற்றிய​ சிறிய​ கவலை கூட​ கொள்ளாமல் இருக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதற்கு பின்னால் இருப்பது சாதி வெறி மற்றும் மத​ வெறி.

குமரி மண்டலத்தில் என்று ஆர்.எஸ்.எஸ் சக்திகள் வலுப்பெற​ ஆரம்பித்ததோ அன்றே அப்பகுதி ​ மக்களிடையே சாதி வெறியும் மத​ வெறியும் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டது. வெறுப்பை மூலதனமாக்கி அரசியல் வெற்றிகளைப் பெறுவது ஆர்.எஸ்.எஸின் பாணி. ஆகையால் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த​ குழந்தையான பிஜேபிக்கு கணிசமான ஒட்டு வங்கி​ இம்மண்டலத்தில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

 2014 நாடாளுமன்ற​ தேர்தலில் பிஜேபிக்கு எம்.பி பதவியைக் கொடுத்து பொன்னாரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தது கன்னியாகுமரி தொகுதி. 2016 சட்டமன்ற​ தேர்தலில் பிஜேபியால் குமரி மண்டலத்தில் வெற்றி பெற​ முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றது.பிஜேபியின் மாநில​ தலைவரான தமிழிசையும் இப்பகுதியைச் சேர்ந்தவரே. குமரி மண்டலத்தில் பெரும்பான்மையாக​ இருப்பது நாடார்கள்.இவர்களின் ஆதரவால் தான் குமரி மண்டலத்தில் பிஜேபியும் அதன் தாயான ஆர்.எஸ்.எஸ்-ம் உயிர்ப்போடு இருக்கிறது.

இதில் ஒர் ஆறாத​ வடு என்னவென்றால் குமரி உட்பட​ தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக​ இருக்கும் நாடார்கள் மீனவர்களுக்கு ஆதரவாக​ போராட்டங்களை மேற்கொண்டிருந்தால் பல​ மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டிருப்பார்கள் என்பது நிசர்சனமான உண்மை. ஆனால் இவர்களை மீனவர்களுக்கு ஆதரவாக​ செயல்படாமல் தடுத்தது இவர்களின் சாதி வெறி. இந்த​ சாதி வெறிக்கு உரம் போட்டு வளர்ப்பது அங்கேயிருக்கும் ​ சங்பரிவாரங்களே.

சமீப​ உதாரணம், திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலின் நாடார்களின் குலத்தொழிலான பனையேறும் தொழிலைக் கூறி நாடார்களை இழிவு செய்து விட்டதாக​ சில​ நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் கிளப்பிய​​ வதந்தியால்​ நாடார்கள் பலர் உணர்ச்சி பிழம்பாக​ மாறி ஸ்டாலினுக்கு பல​ விதங்களில் எதிர்ப்பைக் காட்டினார்கள். ஸ்டாலின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.நாடார் சங்கங்களின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இது வதந்தி என்று நீருபணம் செய்யப்பட்ட​ பின்பு தான் அவர்களின் எதிர்ப்பு அடங்கியது. ஒர் வதந்திக்கு பலியாகி எதிர்ப்பை காட்ட​ தெரிந்த​ இவர்களுக்கு தங்கள் பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடும் போது அவர்களுக்கு ஆதரவாக​ ஒர் சிறிய​ குரலைக் கூட​ எழுப்ப மனம் வரவில்லை என்பது கசப்பான உண்மை.

சாதி வெறியைப் போலவே மத​ வெறியும் மக்களின் மனசாட்சியை கொன்று மீனவர்களை பலி கொடுத்தது. சில​ தினங்களுக்கு முன் பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து பேசுகையில் ஒர் கருத்தைக் கூறினார். அதாவது அங்கே மாற்று மதத்தினரும் கடவுள் மறுப்பாளர்களும் கடை வைத்திருப்பதால் இந்த​ தீவிபத்தை அவர்கள் நடத்தியிருப்பார்கள் என்பது தான் அவர் பேசிய​ பேச்சின் கருத்து.தமிழகத்தை கலவர​ பூமியாக​ மாற்ற​ வேண்டும் என்கிற​ வஞ்சக​ எண்ணம் நிரம்பிய​ ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட​ கருத்துக்களை கூற​ இயலும். தமிழிசையும் பொன்னாரும் வெளிப்படையாகவே தென் மாவட்ட​​ மக்களிடையே மத​ வெறியைத் தூண்டி வருகிறார்கள்.

இதுவும் மீனவர்களுக்கு நேர்ந்த​ கொடுமைக்கு பெரிதும் காரணம். தன் பகுதியை சேர்ந்த​ மீனவர்கள் உயிருக்காக​ உதவிக்குரல் கேட்கும் போது அவர்களுக்காக​ போராடாமல் அவர்களை மத​ அடிப்படையில் வேறுபடுத்தி ஒடுக்கினார்கள் இப்பகுதி மக்கள்.

மக்கள் சாதி,மதம் இவற்றை கடந்து போராடியிருந்தால் இன்று பல​ மீனவர்கள் நம்மிடையே உயிரோடு மீட்கப்பட்டிருப்பார்கள், பல​ குடும்பங்கள் இப்படி நிலைகுலைந்து போயிருக்காது. உடன் இருக்கும் இருக்கும் மனிதர்களே சாதி,மதம் கொண்டு சக​ மனிதர்களை ஒடுக்குவது இந்திய​ சமூகத்தில் காணப்படும் மிகப் பெரிய​ தீமை.

ஊடகங்களுக்கும் மீனவர்களின் இனப்படுகொலையில் பங்கு உண்டு. ரஜினியும் கமலும் தும்மினால் கூட​ அதை வைத்து பல​ வாரங்கள் விவாதங்கள் வைக்கிறது இந்த​ ஊடகங்கள். ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் அதை தேசிய​ பிரச்சனையாக​ மாற்றுகிறது ஊடகங்கள். ஆண்டாள் பிரச்சனையை வைத்து பல நாட்கள்​ விவாதிக்கிறது ஊடகங்கள். ஆனால் மீனவர்கள் கொத்துக் கொத்தாக​ மடியும் போது அதை கண்டும் காணாமலும் இருந்து கள்ள​ மவுனம் காத்தது ஊடகங்கள்.

சமூக​ வலைத்தளங்களில் கொடுக்கப்பட்ட​ ​ அழுத்தம் காரணமாக​ தமிழக​ ஊடகங்களில் சில​ இப்பிரச்சனையில் காலம் கடந்தாவது கவனத்தை காட்டினாலும் ஆங்கில ஊடகங்கள் இந்த​ பிரச்சனையை கண்டு கொள்ளவேயில்லை. சர்வதேச​ பிரச்சனையாக​ மாற்றியிருக்க​ வேண்டிய​ மீனவர்களின் பிரச்சனையை வெறும் உள்ளூர் பிரச்சனையாக​ மாற்றி அதை நீர்த்து போகச் செய்ததலில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

சில நூறு பேர்களுடன் காணாமல் போன மலேசிய​ விமானம் பற்றிய​ செய்தி இந்திய​ ஊடகங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. ஆனால் பல​ ஆயிரக்கணக்கான சொந்த​ நாட்டு மீனவர்கள் காணாமல் போன​ செய்தி இந்திய​ ஊடகங்களில் கடைசி இடத்தில் கூட​ வரவில்லை.

இந்திய​ அரசு மீனவர்கள் மீது நடத்திய​ ​ இனப்படுகொலையை ஊடகங்களும் பொது சமூகமும் வேடிக்கை பார்த்தது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் மடிந்தத​ற்கும் காணாமல் போனதற்கும் மத்திய​ பிஜேபி அரசு, மாநில​ அதிமுக​ அரசு இவை இரண்டுமே இவ்விகாரத்தில் மிக​ அலட்சியமாக​ நடந்து கொண்டது தான் காரணம். இவைகள் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் மீட்டிருக்க​ முடியும், ஆனால் மீனவர்கள் மடியட்டும் என்று இவர்கள் செயல்பட்ட​ விதமும் காட்டிய​ அலட்சியமும் மீனவர்கள் மீது நடத்தப்பட்டது ஒர் இனப்படுகொலையே என்று உறுதியாக​ கூறுகிறது.

புயல் வருவதை பற்றி அரசு முன்கூட்டியே மீனவர்களுக்கு தெரிவிக்கவில்லை. மீனவர்களின் உயிர்களைச் சிறிதும் மதியாமல் மீட்பு பணிகளை செய்வதில் அரசுகள் அலட்சியம் காட்டியது.நூறு நாட்டிகல் மைல்களையும் தாண்டி மீன்பிடிக்க​ச் செல்வது தான் குமரி மாவட்ட​ மீனவர்களின் வழக்கம். ஆனால் நம் அரசுகள் அனுப்பிய​ மீட்புபடைகள் வெறும் 50 நாட்டிகல் மைல் வரைதான் பெயரளவில் தேடுதல் நடத்தின. பல நாட்களாக​ உயிருக்கு போராடிய​ மீனவர்களைத் தேடி வந்து காப்பாற்றியது சக​ மீனவர்கள் தான்.அரசு அனுப்பிய​ மீட்புபடைகள் ஏதுவும் மீனவர்களை மீட்கவில்லை. மத்திய​ மாநில​ அமைச்சர்கள் காட்டிய​ திமிர் அவர்கள் மீனவர்களை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதை காட்டியது. பிரதமர் மோடி புகைப்படத்திலேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது அராஜகத்தின் உச்சம். மீனவர்கள் மீதான​ அலட்சியத்தின் மூலம் இந்திய​ அரசு மீனவர்கள் மீது ஒர் இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது.

மத் திய​ அரசுக்கும் மாநில​ அரசுக்கும் தங்கள் அபயக்குரல் கேட்க​ வேண்டும் என்பதற்காக​ பல​ அறவழிப் போராட்டங்களையும் செய்தார்கள் மீனவர்கள். மீனவர்களின் அபயக்குரல்கள் தங்கள் செவிகளில் விழுந்தாலும் செவிடர்களைப் போல் இருந்தார்கள் மத்திய​ அரசும் மாநில​ அரசும்.

சங்கராச்சாரியார் முன்னால் ஒட்டு மொத்த​ அரசு நிர்வாகமும் மண்டியிட்டு விழுந்து கிடக்கிறது.ஆனால் மீனவர்கள் மரணத் தின் விளிம்பில் நின்றால் கூட​ அவர்களுக்கு உதவாமல் அலட்சியம் காட்டுகிறது அரசு நிர்வாகம். நம் நாட்டு அரசு நிர்வாகத்தை கையில் வைத் திருக்கும் இந்துத்துவவாதிகளின் பார்வையில் மீனவர்கள் என்பவர்கள் சூத்திரர்கள். மீனவர்கள் மீது காட்டப்பட்ட​ அலட்சியத்திற்கு இதுவே காரணம்.

மேலும் சாகர் மாலா திட்டத்தின் படி மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்ட​ வேண்டும் என்பதால் இந்திய​ ஏகாதிபத்தியம் ஒக்கி புயலை பயன்படுத்தி மீனவர்கள் மீது இனப்படுகொலையை நடத்தியிருப்பதாக​ சமூக​ போராளிகள் பலர் கருதுகிறார்கள்.

இந்துத்துவவாதிகளின் கையில் இருந்து என்று நம் நாட்டு அனைத்து நிலைகளிலும் விடுதலை பெறுகிறதோ அன்று தான் ஒடுக்கப்பட்ட​ மக்களுக்கான விடுதலையும் உரிமையும் சாத்தியமாகும்.

Pin It