கம்மாளர், நாடார், தீயர், புலையர் தாழ்ந்த ஜாதி இந்துக்களாம்

திருவாங்கூர் அரசாங்கம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஒப்புக்கொண்டு, அந்தப்படி கவனித்து உத்தியோகம் நியமிக்க ஒரு பப்ளிக் சர்விஸ் கமிஷன் என்ற இலாக்காவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக் கமிஷனுக்கு கொடுத்த அதிகாரப் பத்திரத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்னும் மூன்று மத வகுப்புகளும், இந்துக்களில் மேல் ஜாதி இந்துக்கள், கீழ்ஜாதி இந்துக்கள் என்று இரண்டு ஜாதி வகுப்பு களும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

periyar 314அப்படி ஏற்படுத்திய ஜாதி வகுப்புகளில் பார்ப்பனர்களையும், நாயர்களையும் மேல் ஜாதி இந்து வகுப்பிலும், கம்மாளர், நாடார், ஈழவர் புலையர் என்பவர்களைக் கீழ் ஜாதி இந்து வகுப்பிலும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த அக்கிரமம் ஒரு சுதேச அரசர் ஆட்சிபுரியும் நாட்டில் இருந்து வருகின்றது. இந்தக் கொடுமையான இழிவை ஒழிக்காமல், ஒழிக்க முயற்சிக் காமல் என்ன சுயராஜ்ஜியம் வேண்டி இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் விஸ்வப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்மாளர் வகுப்பார்களும், க்ஷத்திரியர் என்று சொல்லிக்கொள்ளும் நாடார் வகுப்பாரும், சுதேசச் சமஸ்தானத்தில் தீண்டப்படாதவர்களாய்க் கருதப்படுவது மிக மிக அக்கிரமமான காரியம் என்றே சொல்லுவோம்.

இதுமாத்திரமல்லாமல், இந்தக் காரணத்துக்காக இவர்களுக்கு சில உத்தியோகங்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால் திருவாங்கூர் சட்டசபை அங்கத்தினர்கள் இந்தக் கொடுமையை நீக்கி, கிரமமான முறையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய முன் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

(குடி அரசு துணைத் தலையங்கம் 30.06.1935)

குடி அரசு தேசத்திலும் அடக்குமுறை

ஸ்பெயின் தேசமானது, குடி அரசை ஒழித்து முடி அரசு ஆக்கிக் கொண்ட நாடாகும். அங்கு குடி அரசு இருந்தும் அடக்குமுறை தாண்டவமாடுகின்றது. ஒரு அரசியல் குழப்பத்தின்போது 65 பேர்களை குற்றம் சுமற்றி விசாரித்து அதில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 36 பேருக்கு ஜன்ம தண்டனையும், 7 பேருக்கு 12 வருஷத் தண்டனையும் விதித்து, 18 பேர்களை விடுதலை செய்து விட்டார்களாம். அக்குழப்பத்தில் 3500 பேர் மாண்டார்களாம். எனவே அன்னிய ஆட்சி ஒழிந்து, சுயராஜ்ஜியம் வந்து விட்டால் தர்ம ராஜ்ஜியம் ஆகிவிடும் என்று கருதுவது வடிகட்டின அறியாமையே ஆகும். அரசியல் மாற்றத்திலோ, கிளர்ச்சியிலோ யோக்கியமானதொரு கொள்கையை விரும்புவது தான் அறிவுடைமையாகுமே ஒழிய, ஒரு ஜாதியையோ, ஒரு தேசத்தையோ விரும்புவதும், வெறுப்பதும் பழயகால கையில் வலுத்தவன் கொள்ளை அடிக்கப் பார்க்கும் சூட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

(குடி அரசு கட்டுரை 30.06.1935)

கடவுள் கருணை

சென்ற வருஷம் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிட பல மடங்கு அதிகமான ஐம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும் பல கோடி ரூ. பொருள் நஷ்டமும் நடந்தது. மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷாவரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்ப லாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம். எனவே கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும் ஜீவகாருண்யத்தையும், கருணையையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணத்தை ஆஸ்திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை.

('சந்தேகவாதி', குடி அரசு செய்தி விமர்சனம் 30.06.1935)