திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித் தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற முடியாது. இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும் போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால் தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத் தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர். வடநாட்டில் பல கோயில்களைத் திறந்து விட்டு விட்டதாகவும் சில இடங்களில் தீண்டாத வகுப்பினருடன் உயர்ந்த வகுப்பு இந்துக்கள் சமபந்தி போஜனம் செய்ததாகவும், தண்ணீர் அருந்தியதாகவும், தின்பண்டம் தின்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.periyar and mgrதீண்டாதார்க்குப் பூணூல் போட்டு தீட்சை செய்வித்து அவர்கள் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் “சண்டாளத்துவ”த்தைப் போக்க முயற்சித்த திரு. மாளவியா புரோகிதர், ஒரு நிபந்தனையுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குத் தீண்டாதாரை அழைத்துச் சென்றதாகவும் தனது வீட்டிலுள்ள சொந்தக் கோயிலைத் தீண்டாதார்க்காகத் திறந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்தன. வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளையும், புராணங்களையும் உருப்போட்டு உருப்போட்டு மூளையில் சுரணையே இல்லாமல் இருக்கும் மரக்கட்டை வைதீகர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் திரு. பண்டித மாளவியாவே பூணூல் போடுதல், தீக்ஷை செய் வித்தல், கங்கையில் குளிப்பாட்டுதல் ஆகிய ஒரு சடங்குமில்லாமலேயே தீண்டாமையை ஒழித்துவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டவுடன் பத்திரிகைகளெல்லாம் அவரை அளவு கடந்து புகழத் தொடங்கின; வைதீகப் பார்ப்பனர்கள் ஒன்றும் சொல்லுவதற்கு வழியில்லாமல் திகைப்படைந்தனர்.

ஆனால் நாம் மாத்திரம், இவைகளெல்லாம், தீண்டாதார்களை ஏமாற்றித் தனித் தொகுதித் தேர்தல் முறையை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் கண்கட்டி வித்தைகள் என்றே கூறிவந்தோம்.

இந்து மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு இந்துமத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது சுத்த அயோக்கியத்தனம் என்று சொல்லிக் கொண்டே வந்தோம். இத்தகைய நமது அபிப்பிராயம் சிறிதும் குற்றமுள்ள தல்ல என்பதைக் காட்ட திரு. மாளவியாவைப் பற்றித் தற்போது வெளி வந்திருக்கும் செய்தி ஒன்றே போதுமானதாகும்.

“வைதீக மாளவியா தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைந்து விட்டார் என்று புகழப்பட்ட வருணாச்சிரம தரும மாளவியா, களிமண்ணும் கங்கா ஜலமும் எடுத்துக் கொண்டு இங்கிலாந்துக்குக் கப்பலேறிச் சென்ற மாளவியா, பம்பாயைச் சேர்ந்த கல்பதேவி என்னுமிடத்தில் சென்ற 2 - 10 -32ல் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘பழய கருப்பனே கருப்பன்’ என்னும் சங்கதிக்கு வந்து விட்டார். அவர்,

“சம்பந்தி போஜனம், கலப்புமணம் இவைகளைப் பொறுத்த வரையில் ஜாதிக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட வகையினாலோ, குடும்ப சம்பந்தத்தினாலோ இம்முறைகளை அனுசரிக்க முயற்சிப்பது முடியாது காரியம்”

என்று பேசியுள்ளார். இதிலிருந்த திரு. மாளவியா புரோகிதரின் மனப்பான்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதிக் கட்டுப்பாடு அதாவது வருணாச்சிரம தர்மம் இருக்கும் வரையிலும் தீண்டாமை ஒழியும் என்று பகுத்தறியும் மூளையையுடைய எவராவது ஒப்புக் கொள்ள முடியுமா? இன்று நமது நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் துவேஷிப்பதற்கும், ஒரு வகுப்பினர்க்கு மற்றொரு வகுப்பினர் கொடுமை செய்வதற்கும் காரணமாயிருப்பது பாழும் ஜாதிக்கட்டுப்பாடு, அதாவது வருணாச்சிரம தருமம் என்பதை கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூட மறுக்க முன் வரமாட்டார்களே. உயர்ஜாதி இந்துக்கள் தாம் வசிக்கும் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று நினைப்பது ஜாதி அகங்காரமல்லவா? அவர்கள் தம்முடன் சமத்துவமாக உட்காரக் கூடாதென்று நினைப்பதும், பள்ளிக்கூடங்கள், காப்பி கிளப்புகள் முதலியவைகளில் தம்முடன் சமமாக உட்கார்ந்து படிக்கவோ சாப்பிடவோ இடந்தராமலிருப் பதற்கும் காரணம் அர்த்தமற்ற ஜாதிக் கட்டுப்பாடு அல்லவா? ஆகையால் ஜாதிக் கடுப்பாட்டை வைத்துக் கொண்டால் ஜாதி உயர்வு தாழ்வை அப்படியே வைத்துக் கொண்டால் வருணச்சிரம தருமம் என்னும் அர்த்தமற்ற கொள்கையை ஒப்புக் கொண்டால் எப்படித் தீண்டாமை அடியோடு போக முடியும் என்று யோசனை செய்து பார்க்கும் படி கூறுகின்றோம்.

உண்மையிலேயே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் சாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் சாதிக்கட்டுப்பாடும், வருணாச்சிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப் பட்டாக வேண்டும். இவைகளை நிறைவேற்றச் சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் எங்கும் நடைபெற வேண்டும். தீண்டாதார்கள் மக்கள் எல்லாம் வைதீகப் பார்ப்பனர்களின் வீட்டு மாப்பிள்ளைகளாகவும், மருமக்கள் களாகவும் வேண்டும். வைதீகப் பார்ப்பனர்களுடைய மக்களும் தீண்டாதார் கள் வீட்டு மாப்பிள்ளைகளாகவும் மருமக்கள்களாகவும் ஆக வேண்டும். இவ்வாறே ஒவ்வொரு சாதிகளும் தமக்கு மேற்பட்ட சாதிகளுடனும், கீழ்ப்பட்ட சாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். இப்படியே “பஞ்சமர்” முதல் “பார்ப்பனர்” வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரையிலும் ஜாதிகள் ஒழியாது தீண்டாமையும் ஒழியாது.

இன்று இக்காரியங்களுக்குத் தடையாய் இருப்பன இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச சாஸ்திரங்களும், அவைகளைப் படித்து விட்டுச் சொந்த புத்தியில்லாதிருக்கும் திரு மாளவியா போன்ற மண்ணு ருண்டைகளுமே யாகும்.

ஆனால் இந்த திரு. மாளவியா பண்டிதர், தீண்டாதார்களுக்குக் கோவில் பிரவேசம் அளிக்க வேண்டும் என்றும், குளம், கிணறு, நடைபாதை, பள்ளிக்கூடம் முதலியவைகளில் சமத்துவம் அளிக்க வேண்டும் என்று மாத்திரம் பேசுகிறார். இதன் பொருட்டுத் தென்னாட்டிற்கும் பிரசாரம் பண்ணவரப் போகிறாராம். அவர் தென்னாட்டிற்கு வருவாரானால் கட்டாயம் அவமானப்படுவார் என்று மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறோம்.

சாதிகள் ஒழியாமல் - சாதி கட்டுப்பாடுகள் அழியாமல் - வருணாச்சிரம தருமம் மாளாமல் - திரு. மாளவியா சொல்லும் தீண்டாமை ஒழியப் போவ தில்லை; ஒரு சமயம் சட்டத்தின் மூலம் கோயில் பிரவேசம் மற்றும் பொது ஸ்தாபனங்களில் சம உரிமை முதலியவைகளை ஏற்படுத்தாமலும் அதனால் தாழ்த்தப்பட்டார்க்கு எள்ளத்தனையும் நலங்கிடைக்கப் போவதில்லை. உயர்ந்த வகுப்பினர் என்பவர்கள் வாயில்லாப் பூச்சிகளாகிய அவர்களை இன்னும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தவே முன்வருவார்கள் என்பது திண்ணம்.

தீண்டாமை ஒழிவதற்காக “இன்னொரு முறை பட்டினிகிடக்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் திரு. காந்தியடிகளும் இதே கொள்கையுடையவர் தான் என்பதை நாம் இப்பொழுது கூறவேண்டிய தில்லை. நமது “குடி அரசு” வாசகர்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த விஷயமாகும். ஆகையால்தான் திரு. காந்தியார், திரு. மாளவியா போன்ற வர்களின் ஆதிக்கத்தில் உள்ள ‘காங்கிரஸ்” சபையில் மதப் பாதுகாப்பையும் ஜாதிப் பாதுகாப்பையும், சாஸ்திரப் பாதுகாப்பையும், நாகரீகப் பாதுகாப்பை யும் திட்டங்களாக அமைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் முன்பே பல தடவைகள் விளக்கிக் கூறப்பட்ட விஷயமாகும். ஆகையால் தற்போதைய கொள்கையையுடைய காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கும் வரை யிலும் திரு. காந்தியார், திரு. பண்டித மாளவியா போன்றவர்கள் காங்கிரசைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் வரையிலும் - ஜாதியோ, வருணாச்சிரம தருமமோ; ஜாதிக் கட்டுப்பாடோ, தீண்டாமையையோ ஒழிவதற்குச் சிறிதும் வழியேயில்லை யென்று சத்தியமாகக் கூறுவோம்.

இது நிற்க, இனி, திரு. மாளவியா அவர்களும் திரு. காந்தி அவர்களும் சொல்லுகிறபடியாவது, கோயில்களிலும் குளம் கிணறு நடைபாதை பள்ளிக் கூடம் முதலியவைகளிலுமாவது தீண்டாதார்க்குச் சமவுரிமையளிக்க நமது நாட்டு வைதீகர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்கின்றோம். தமிழ் நாட்டில், இப்பொழுதே எங்கும் பகுத்தறிவற்ற மண்ணுருண்டைக் கூட்டத்தார், “மதம் போச்சு, சாஸ்திரம் போச்சு, பழக்க வழக்கம் போச்சு” என்று கூச்சலிட ஆரம் பித்து விட்டார்கள். சில தினங் களுக்கு முன் (2 - 10 - 32) தஞ்சையில் வாயள வில் வைதீகம் பேசும் வக்கீல் பார்ப்பனர்கள் கூடிய வருணாச்சிரம தர்மக் கூட்டத்தில் தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும் விஷயத்தைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அக்கூட்டத்தினர், கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூரில் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டித்தும், கள்ளிக் கோட்டை சாமொரின் அவர்கள் குருவாயூரில் கோயிலைத் தீண்டாதார்களுக்குத் திறந்து விடா மலிருந்த செய்கையைப் பாராட்டியும் தீண்டாமையை ஒழிக்க முயலுவதும், கோயில் பிரவேசமளிக்க முயலுவதும் இந்து மத ஆகம, வேத, புராண சாஸ்திரங்களுக்குப் பொருத்தமுடையதல்ல வென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றியிருக்கின்றார்கள். இன்னும் கோயில் பிரவேசத்தின் பொருட்டுச் சென்னைச் சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற அனுமதியளிக்கக் கூடாது என்று கவர்னர் வைசிராய் முதலியவர்களை வேண்டிக் கொள்ளுவதாகவும் தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.

மற்றொரு வைதீகராகிய திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் அரசாங்கமே கவனம் செலுத்திவரும் சுதேச முஸ்லிம் சமஸ்தானமாகிய ஹைதராபாத்திற்குப் போய் தீண்டாமை விலக்குக்கு எதிர் பிரசாரம் பண்ணுகிறார். ஹைதராபாத்தில் சென்ற 30 - 9 - 32ல் கூடிய வக்கீல்களில் மகாநாட்டில், திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தலைமை வகித்துப் பேசும் போது,

“சமூக, மத சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்தார் தலையிடக்கூடாது” என்றும்,

“இந்து மதமும், இஸ்லாம் மதமும் கடவுளால் வெளியிடப் பட்ட மதமாதலால் இவைகளில் சட்டத்தைப் புகுத்துவது சரியாகாது” என்றும் வைதீகப்பிரசாரம் பண்ணியிருக்கிறார். திரு. ஆச்சாரியார் இந்து மதத்துடன் மதத்தையும் சேர்த்துக் கொண்டு பேசியது முஸ்லிம் மதத்தைப் பற்றி அவருக்குள்ள கவலையைக் காட்டவா? அல்லது ஹைதராபாத் அரசாங்கத்தாரை ஏமாற்றவா? என்று கேட்கின்றோம்.

இன்னும் வைதீக பார்ப்பனர்களுடைய பிடிவாதத்தை அறிய வேண்டு மானால் சில நாட்களுக்கு முன் ஒரு பிரபலமான தமிழ் தினசரி ஒன்றில் பார்ப்பன கனபாடி ஒருவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் உள்ள சில விஷயங்களைக் கவனித்தால் உண்மை விளங்கும். அவை:-

“ஒரு வகுப்பாரது நோக்கத்தை நிறைவேற்ற இன்னொரு வகுப்பாரது உணர்ச்சி பாதிக்கப் படலாகாது. நமது தேசத்தவர் “ஹிந்துக்கள்” என ஒரு வழிப்பாடாய் அழைக்கப்பட்டாலும், வெவ்வேறு வகுப்பிற்குரிய வாழ்க்கையையும் உடையவர்களாகவே இருக்கின்றனர். ஒரு வகுப்பாரைப் புண்படுத்திப் பட்டினிகிடந்து ஒன்றைப் பெறுவது சிலாக்கிய மல்ல”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, தற்போதிருக்கும், ஜாதி வித்தியாசங்களும், பழக்கவழக்கங்களும் மாற்றுவதும் மாற்றுவதற்கு முயலுவதும் சரியல்ல என்பதே வைதீகர்களின் எண்ணம் என்பதை உணரலாம். ஆகவே, இனி திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்தாலும் அதை எந்த வைதீகரும் ஆதரிக்கப் போவதில்லையென்பதையும் இப்போழுதே நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். மேலும்,

“உத்சவ காலங்களில் சுவாமி ஊர்வலம் வருவதும், உத்சவ முடிவில் நடக்கப்படும் ரதோத்சவமும் தாழ்ந்த வகுப்பினருக்குக் காட்சி கொடுக்கவே யென்பதை யாவரும் அறியலாம். ரதோத்சவ காலங்களில் தீண்டாதார்கள் என்பவர்களைத் தீண்டலும் தகும் என்பது வைதீகர்களது கொள்கை. எனவே தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் சமஉரிமை கொடுத்துச் சகோதரர்களாகவே பாவிக் கின்றனர். இப்பொழுது புதிய வழியில் அவர்களைக் கோவில்களில் புகுந்து வணங்கச் செய்ய வேண்டுமெனத் தலைவர்கள் முயலுவதைக் கண்டு வைதீகர்களாகிய நாங்கள் வருந்துகிறோம்.”

என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு கோயில் பிரவேச விஷயத்தில் வைதீகர் கொண்டுள்ள மனப்பான்மையை அறியலாம்.

மேற்கூறிய பல விஷயங்களையும் உதாரணங்களையுங்கொண்டு, திரு. மாளவியா பண்டிதர் பிரசாரம் பண்ணப் போவதாகக் கூறும் போலித் தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்தைக் கூட ஆதரிக்க எந்த வைதீகரும் தயாராயில்லை என்பதை அறியலாம்.

ஆகவே யாரும் திரு. காந்தியோ அல்லது, திரு. மாளவியாவோ, அல்லது காங்கிரசோ செய்யும் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தைக் கண்டு ஏமாற வேண்டாம், தீண்டாமை ஒழிப்புப் பிரசாரம் பண்ணும் காங்கிரஸ் பார்ப்பனர்களை “ஜாதிகளை அழிப்பதற்கும் ஜாதிக்கட்டுப்பாடுகளை அழிப்பதற்கும், காரணமாக இருக்கும் கலப்பு மணத்தையும் சமபந்தி போஜனத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா” என்று கேட்டால் அவர்களுடைய குட்டு வெளிப்பட்டுப் போகும். சமபந்தி போஜனத்திற்கு அனேகர் ஒப்புக் கொண்டாலும், கலப்பு மண விஷயத்தை ஒப்புக் கொள்ளத் துணிய மாட்டார்கள். இதற்கு நமது நாட்டு பார்ப்பனர்கள் சிலர் மனப்பூர்வமா ஒப்புக் கொண்டாலும், திரு. மாளவியா போன்ற வைதீகர்கள் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகையால் எல்லோருக்கும் இந்து மதப்பிரசாரம் பண்ணும் காங்கிரசிடமும் அதன் பிரச்சாரகர்களிடமும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.10.1932)

Pin It