periyar mgrஇந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள் ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான்களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆன பிரபுக்கள் மற்ற நாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வருகின்றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். அதுபோலவே வியாபாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்து வருகின்றன.

விவசாயத்துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமான இயற்கை நீர் பாசான வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்கரா, சிலர் லக்ஷம் ஏக்ரா - பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத் துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திர மான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது என்பதை தேச முற்போக்கில் கவலை கொண்டவர்கள் யோசிக்கத்தக்கதேயாகும்.

முதலாவது, இந்தியாவின் மேல்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத் தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங் கள் சில வகுப்பு மக்களுக்கே உரியதாகவும் அனுபவிக்கத் தக்கதாகவுமான சமூக அமைப்பு முக்கியமான காரணமாகும்.

அதாவது, வருணாச்சிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில்- இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இரண்டாவது, ஒரு வகுப்பு மக்கள் அதாவது 100க்கு 90 பேர்களுக்கு மேலாகக்கொண்ட சமூக மக்கள் அவர்களது வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மேல் பெறமுடியாத நிபந்தனைக்குள்ளாக்கி வைக்கப்பட்டதுடன், அவர்கள் கையில் தங்கள் வயிற்றுக்கு வேண்டிய ஆகாரத்தின் அளவுக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வைத்திருக்க உரிமை யில்லாதவர்களாக்கப் பட்டிருக்கின்றது என்பது இரண்டாவது காரணமாகும். இந்த உண்மைக்கு ஆதாரம் மனுதர்ம சாஸ்திரத்தில் நன்றாய்க் காணலாம்.

அதாவது, “சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராமண னுக்கு ஆபத்தாக முடியும்”; “சூத்திரன் பொருள் வைத்திருந்தால் பிராம ணன் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.

“சூத்திரன் பொருளை பிராமணன் எப்படிவேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்”.

“அடிமையான சூத்திரன் பொருள் வைத்திருக்க உரிமை உடையவனல்ல”என்கின்ற அனேக ஆதாரம் இந்து மத தர்ம சாஸ்திரங்களில் இருக் கின்றன. (இங்கு சூத்திரன் என்பதற்கு பொருள் தொழிலாளிகள் என்பதே யாகும். )

இந்த மாதிரியான திட்டங்களை ஏற்படுத்த ஆதாரமாயிருந்தது வருணாச்சிரம தர்மமேயாகும்.

வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ 100ல் ஒருவர் ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும் வருணமுறை தவரி பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களானாலும் கூட அந்தப் பணமானது மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது “சூத்திரன் செல்வத்தை பிராமணன் எந்தவிதத் திலானாலும் கொள்ளை கொள்ளலாம்” என்கின்ற தர்மப்படி “சூத்திரன்” செல்வத்தை கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக்காரணத்தாலேயே “சூத்திரர்கள்” என்கிற வகுப்பினரில் 100-க்கு 75-பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது.

இவை ஒருபுறமிருந்தாலும், இன்று பொருளாதாரக் கஷ்டத்தையே பெரும்பாலும் எடுத்துச் சொல்லி அதை நிவர்த்திப்பதற்காக இந்தியாவுக்கு சுயராஜியம் வாங்கித் தருகின்றதாய்ச் சொல்லும் அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்களும் இந்த வருணாச்சிரம முறையை அடிப்படையாகக் கொண்டதான சுயராஜியமேதான் வேண்டும் என்று சொல்லி அதற்காகவே பாடுபட்டு வருகின்றார்.

இதற்கு உதாரணம் வேண்டுமானால் அவர் அவ்வப்போது பேசி யிருக்கும் பேச்சுகளும் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயங்களுமே போதுமானதாகும்.

முதலாவது திரு.காந்தி அவர்கள் தன்னை ஒரு வருணாச்சிரம தர்மி என்றும், இந்தியாவில் வருணாச்சிரம தர்மம் குறைந்ததாலேயே அன்னிய ஆக்ஷி ஏற்பட்டதென்றும், அதனால் வருணாச்சிரம தர்ம ஆக்ஷியை ஏற்படுத்தவே தான் பாடுபடுவதாகவும் பல தடவைகளில் தாராளமாய் வெளிப்படையாய் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்தப்படியே சொல்லியும் வருகின்றார். ஆனால் இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படலாம். அது என்ன வென்றால், திரு. காந்தியவர்கள் வருணாச்சிரம தர்மத்தைப் பற்றிப் பேசும்போது தனது “வருணாச்சிரம தர்மம் வேறு” என்று சொல்லி வருகின்றதால் அது வேறாயிருக்கலாம் என்று கருதி இருக்கலாம். அது எப்படியிருந்த போதிலும் அதாவது ஜாதி உயர்வு, தாழ்வு சம்பந்தமான காரியம் எப்படியிருந்த போதிலும், வித்தியாசம் இருக்க வேண்டும் என்ப திலும், அவனவனுடைய பரம்பரைத் தொழிலையே அவனவன் செய்ய வேண்டுமென்பதிலும், அவர் சந்தேகத்திற்கு இடம் இருக்கும் படியாகக் கூடப் பேசாமல் தெளிவாகவே ஜாதி பாகுபாடுகளும் சுதர்மமும் (அதாவது அவனவன் குலத்தொழிலும்) கண்டிப்பாய் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லுகின்றார். (இது அவர் எழுதியிருக்கும் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் கூட இருக்கின்றது. 18-ம் அத்தியாயம் 41 முதல் 48 வரை உள்ள சுலோகங்கள்.)

இவை ஒரு பக்கம் இருந்த போதிலும் சமீபத்தில் அவர் பரோடா சமஸ்தானத்தில் பேசிய போதும் இந்தக் கருத்தையே வற்புறுத்திப் பேசிக் காட்டியிருக்கின்றார்.

அதாவது, “கிராம வாசிகள் செருப்புத் தைத்தல், ஆடு,மாடு மேய்த் தல் முதலிய தொழில்களைச் செய்ய வேண்டும், அவர்கள் பெட்டிகளில் அதிகப் பணம் வைத்திருக்கக் கூடாது. அவர்கள் பம்பாய் வியாபாரிகளைப் போல் (வைசியர்களைப்போல்) பணக்காரர்களாக இருக்க நினைக்கக் கூடாது” என்று பேசி இருக்கின்றார். ஆகவே இப்போது திரு.காந்தியவர் களால் கேட்கப்படும் சுயராஜியம் என்பது இந்திய மக்களின் பொருளாதார நிலைமையை எப்படி முன்னுக்கு கொண்டு வரக்கூடியதாகும்? என்பது யோசிக்கத்தக்கது.

நிற்க, நமது நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமா யிருப்பதற்கு மற்றும் சில காரணங்களும் உண்டு.

அதாவது நமது ஜனங்களின் மத தத்துவமே இவ்வுலக வாழ்க்கை “பொய்” என்பதும் “மாய்கை” என்பதும், செல்வத்தை மோட்சத்தில் இடம் பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்து கொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதான எண்ணங்கள் செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன. அன்றியும் பாடுபடுகின்ற மக்களுக்கு தங்கள் மதக்கடமை, ஜாதிக்கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் “ஜன்ம கர்மத்தின்” பயன் என்றும் எண்ணும் எண்ணங்களையேப் புகுத்தப் பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன. இவை தவிர நமது நாட்டு தர்ம ஸ்தாபனங்கள் ஏராளமான செல்வங்களை தன்னுடையதாக்கிக் கொண்டு அவைகள் மக்களுக்குப் பயன்படாமல் வீணாக்கப்படுகின்றன.

சாதாரணமாக சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு ரூபாய் இருக்குமோ, அதில் 4-ல் ஒரு பங்குக்குக் குறையாமல் இம் மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துக்கள் தர்ம ஸ்தாபனங்களாய் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கு என்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம் நாம் செலுத்தும் வரித் துகைக்குக் குறையாத தென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டு விடுகின்றன. அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துக்கள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துக்கள் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றது.

இவை ஒருபுறமிருக்க இராஜாக்கள் என்றும், ஜமீன்தாரர்கள் என்றும் ஏற்பட்டக் கூட்டங்கள் அனுபவிக்கும் பொருள்கள், மற்றும் அவர்கள் நகை, பொக்கிஷம், புதைத்து வைத்திருப்பது முதலிய செல்வங்களின் அளவு நூற்றுக்கணக்கான கோடி என்றே சொல்லலாம்.

இவ்வளவும் தவிர இந்திய மக்களின் வருமானம் என்பதோ அவர்கள் தங்களது தொழில் முறைகளை சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதை குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படிக் குறைந்ததுமாக இருப்பதுடன் மனிதனுடைய தேவைக்கும் போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால் ஒருவித நஷ்டத்தை அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே, இத்யாதி காரணங்களால் நாட்டின் பெரும்பாகமான மக்கள் ஏழைகளாக - தரித்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால் அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல் மக்களுடைய மதியீனத்தையும், பகுத்தறிவற்ற தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக்கடைகளை மூடி விடுவதாலும் பொருளாதாரத் துறையை சரிப்படுத்தி விடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணையமானதோ, அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லி விட முடியாது.

இந்தியாவின் பொருளாதாரத் துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாச்சிரம முறை ஒழிய வேண்டும்.இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும். மூன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

இவைகளை யெல்லாம் மறைத்து வைத்துக் கொண்டு - இந்தத் துறைகளில் எல்லாம் புகுந்து அழிக்க வேலை செய்யாமல் இருந்து கொண்டு இருப்பதுடன், வருணாச்சிரம தர்மத்தையும் புராண மரியாதையையும் பலப்படுத்திக் கொண்டு பொருளாதாரத்துறை சீர்படுத்துவதற்குச் சீமைக்குப் போய் “வெள்ளைக்காரனிடம் வியாபாரம் பேசப் போகின்றேன்” என்று சொல்லுவது அடியோடு அர்த்தமற்றதும், நாணையமற்றதுமாகுமா? அல்லது இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 13.09.1931)

Pin It