இழிவை ஒழிக்க வழி
 
இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும், பேத முறைகளையும் ஒழித்து, ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்கு கிறது எனலாம். இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.

ஏனெனில், இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந் திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமைகளை எங்களுக்கு வழங்குங்கள், எங்களுக்குப் பட்டம், பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது. இப்பொழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர் களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.

நம்மையும், நம் இனத்தையும், நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய தினம் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய தானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து, மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப்படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம். ஆனால், போராட்டம் நமக்குப் புதியதல்ல - யாராவது கூறட்டும் - இந்த நாடு எக்காலத் திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.

முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய - திராவிடர் போராட் டம், தேவர் - அசுரர் போராட்டம் தானே! இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள் தான் என்ன? அவையும் ஆரிய - அரக்கர் போராட்டம் தானே! கந்த புராண கந்தன் - சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும், இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான்; அதாவது ஆரியமதம் - புத்த மதம்; பிறகு இந்து - முஸ்லிம்தான். ஆகவே, மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும், நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.

சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர் கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ! இன்று மட்டும் அல்ல; எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை உண்டாக்கி சத்தி யாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ, கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை.

நாம் பாடுபடும் மக்கள்; நாம் உழைப்பாளிகள்; நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம்பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா! நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம்; செய்கிறோம்; அவை களைக் காப்பாற்றியும் வருகிறோம். அப்படியிருந்தும் நம்முடைய நிலைமை என்ன? நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா? இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஏமாந் தோம்.

ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல்வாக்கும், மதிப்பும், பெருமையும், நம்பிக்கையும் பெற்றது. ஆயினும், இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும், ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர், வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை. உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன் என்றும், பார்ப்பன தாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும், அவர்கள் கூப்பிடுவதுகூட இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.

எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது! மணிக்கு நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத் தில் பறக்கிறான், மணிக்கு 4 மைல் போன சேதி, மணிக்கு 4000 மைல் பேசுகிறது, மற்றும் பேசும்படம், ரேடியோ முதலிய அதிசயங்கள், அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன! நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும், ஆராய்ச் சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு, சாம் பலைப் பூசி, எலும்பை அணிந்து, கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப்பாலுள்ள லண்டன், நியூயார்க், பெர்லின், பாரிஸ், டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா - அதைச் செய்வதனையல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்? அந்த அறிவைப் பெற வல்லவா முயல வேண்டும்.

காலத் திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது; பெரிய புராணம், ராமாயணம், கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும் இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச புராணங்களைக் குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம், கீதை படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி, கீதையை ஒரு மதநூல் என்பதை விட, ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம். ஒரு பக்கத் தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும், மற்றொரு பக்கத்தில், நானே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி, சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால், அதை தவறு, பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம்.

இந்த நாட்டு அறிவாளிகள், பக்தர்கள், புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும், அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும், பேச வருகின்றனரே, கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம் வரையில், உனது வருஷ வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில்களின் வருஷ வரு மானம் 2ஙூ கோடி ரூபாய். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால், அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால், இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா? இதைச் சொன்னால் பொல்லா தவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத, ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள், அநியாயமான காரியங்கள், இவைகளைச் சரியா என்றும், இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம் என்றால் முதலில் உங்க ளுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.

உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றனர். பிறர் தயவினால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில் சாமியாகவும், ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி, சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு, மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள், ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரசார நிலையமாகவும், ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபன மாகவும் ஆகி விடுகிறது. இப்படித் தானே இருக்கிறது இவர்கள் (ஆஸ்திகர்கள்) முன்னேற்றம்! இவர்களுக்குத் துணையாக உள்ளவை தானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும், எப்படியாவது நம் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி ஒழிக்கப்பார்ப்பது தானே, இவர்கள் வேலையாகி விட்டது.

ஆதலால், இம்மாதிரியான எதிர்ப் பிரசாரங்களாலும், போலிச் செய்திகளாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை, நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும், நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது.

கொசு உண்டாவ தற்கு மூலகாரணமான சாக்கடைகள், அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக் கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோ கிதம், கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள்.

----------------

17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழகத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 23.12.1944
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It