VII. விளம்பர விஷயத்தில் புறக்கணிப்பு

47. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரதான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தனி நபர்கள் மற்றும் கட்சிகளின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் விளம்பரப்படுத்த இந்திய சர்க்கார் மிக விரிவான அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது நன்கு தெரிந்த ஒன்றாகும்.

ambd 400 1இந்திய சர்க்காரின் தகவல் துறை அலுவலகம் “இந்தியாவும் ஆக்கிரமிப்பாளரும்” (1935-40 இடையே இந்திய கருத்துப்போக்கு) என்ற தலைப்பில் வெளியிட்ட தொகுப்பு நூலை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட விரும்புகிறேன். அந்த நூலின் தலைப்பு தவறான அர்த்தத்தை அளிக்கிறது.

ஆக்கிரமிப்பாளரோடு அது எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. மாறாக நாட்டின் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கூற்றுகள் மற்றும் செயல்பாடுகளை அது தொகுத்துரைக்கிறது; இந்தியாவின் பெரும்பான்மையினரதும், சிறுபான்மையினரதும் கருத்துக்களை முழுமையாகத் திரட்டித் தருகிறது.

48. இந்த தொகுப்பு நூலின் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் கருத்துகளும் செயல்பாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். மொத்தம் 940 பக்கங்களில், 158 பக்கங்கள் காங்கிரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன; முகமதியர்களுக்காக 85 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இந்து மகாசபையும், இந்து லீகும் தலா 10 பக்கங்களை கைப்பற்றியுள்ளன. லிபரல் பெடரேஷன் 16 பக்கங்கள் பெற்றுள்ளது. சீக்கியர் 6 பக்கங்களும், இந்தியக் கிறித்தவர்கள் 2 பக்கங்களும் பெற்றுள்ளனர்; தாழ்த்தப்பட்ட சாதியினர் 3 பக்கத்தோடு விட்டு விடப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியமளிப்பது என்னவெனில், இந்த மூன்று பக்கங்களும் கூட மிக அற்பமானத் தகவல்களைக் கொண்டவை.

இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்களும், தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த பிரமுகர்களின் அறிவிப்புகளும் முற்றிலுமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். அதாவது மதமாற்றத்திற்கான இயக்கத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். இந்து சமூகத்தை ஆட்டம் கொள்ளச் செய்தது அந்த இயக்கம் என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும். இந்தத் தொகுப்பு நூலில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்த லட்சணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது என்பதற்கு ஒன்றைக் குறிப்பிட்டால் போதும்.

குர்சியாங்கிலுள்ள புனித மேரிக் கல்லூரி ஒரு சமயம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் லட்சியங்களைப் பிரபலப்படுத்தும் பணியை மேற்கொண்டது; அக்காலகட்டத்தை சேர்ந்த பல்வேறு விவரங்களை 507 பக்கங்கள் கொண்ட நூலில் வெளியிட்டது. அந்த அளவுக்கு 1935-40 காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன; அவர்களது இயக்கங்கள் விரிந்து பரந்திருந்தன. என்னைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றி எத்தனை எத்தனையோ கருத்துகளை நான் வெளியிட்ட போதிலும், அவற்றில் ஒன்றுகூட இந்திய சர்க்கார் தகவல்துறை வெளியிட்ட தொகுப்பில் இடம்பெறவில்லை.

49. இந்தத் தொகுப்பு அதிகாரப்பூர்வ உபயோகத்திற்காக மட்டுமே உத்தேசிக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால் எனது கருத்தில், இந்தத் தொகுப்பிற்குள்ள மகத்தான முக்கியத்துவத்தை இது எவ்வகையிலும் மாற்றிவிடவில்லை. அரசின் விவகாரங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை பெருமளவுக்கு நிர்ணயிப்பது அதிகாரியின் சிந்தனைப் போக்குதான் என்பது சொல்லாமலே விளங்கும். வகுப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது. எந்த மாதிரியான விவரங்கள் அதிகாரியிடம் முன்வைக்கப்படுகிறதோ அவற்றின் அடிப்படையில்தான் அவருடைய கண்ணோட்டமும் சிந்தனையும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த சிந்தனைப் போக்கைத்தான் இம்மாதிரியான ஒரே தொகுப்பு நூலில் அவர் வெளியிடுகிறார். மேலும், ஒரு சர்க்கார் வெளியீட்டில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு சர்க்கார் அளிக்கும் முக்கியத்துவத்தையே அதற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவமாக அந்த அதிகாரி கருதுகிறார்; பல்வேறு சமூகங்களில் தேவைகளையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கான திசைவழியாகவும் அதை அவர் எடுத்துக் கொள்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் மதிக்கப்பட வேண்டாத, கவலைப்பட வேண்டாத ஒரு சக்தி என்ற எண்ணத்தைத்தான் மத்திய தலைமைச் செயலகத்திலும் மாகாண செயலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சருக்கும் கூட இந்தத் தொகுப்பு நூல்  நிச்சயமாக அளிக்கும்.

இம்மாதிரி பாதிப்பை இந்தத் தொகுப்பு நூல் ஏற்படுத்தியுள்ளது என்பது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து தெளிவாகிறது. அதில் முகமதியர்களைப் பற்றிக் கூறப்பட்டவை அழுத்தம் திருத்தமாக ஆக்கபூர்வமாகவும் இருந்தன; ஆனால் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றிக் குறிப்பிட்டது ஏனோதானோ என்ற தன்மையையே பெற்றிருந்தது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய கொடுமையாகும்; அவர்கள் விஷயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் ஒரு நிலையற்ற, நேர்மையற்ற போக்கால் அவர்களது போராட்டத்தின் மிக நெருக்கடியான கட்டத்தில் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தாழ்த்தப்பட்ட சாதியினர் நடத்திய இயக்கங்களையும் அவர்களின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும் முழுவதுமாக கொடுக்கும் வகையில், தகவல்துறை அலுவலகம் ஏற்கெனவே தான் வெளியிட்ட தொகுப்பு நூலுக்கு அனுபந்தமாக தயாரித்து வெளியிட வேண்டுமென வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

50. கட்சிகளையும் வகுப்புகளையும் பற்றிப் பிரசாரம் செய்யதான் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும், கட்சிகளும் வகுப்புகளும் தான் தாமே தம்மைப் பற்றி பிரசாரம் செய்து கொள்ள வேண்டுமென்றும் சர்க்கார் நிச்சயம் கூறக்கூடும். ஆனால் இங்கு விஷயம் அதுவல்ல. நான் எடுத்துக் காட்டியுள்ளபடி, இந்தப் பிரசாரப் பணியில் சர்க்கார் தன்னை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. இதைச்சர்க்கார் செய்யும்போது, பிரசாரம் செய்யும் விஷயத்தில் எல்லாக் கட்சிகளையும் சமநிலையில் நடத்துவதும், நாட்டில் செயல்பட்டுவரும் இயக்கங்கள் பற்றி சரியான படப்பிடிப்பினை வழங்குவதும் சர்க்காரின் கடமையாகிறது.

VIII. சர்க்காரின் தொழில் ஒப்பந்தங்களில் விலக்கி வைக்கப்படுதல்

51. பொதுத்துறை வேலைகளில் பெரும்பகுதி இலாகா ரீதியாகச் செய்யப்படாமல் ஒப்பந்தங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. சாதாரண காலங்களில் நிலைமை இதுவே. யுத்த காலத்தில் ஒப்பந்தங்கள் முறை மூலம் சர்க்காருக்காகச் செய்யப்படும் வேலைகள் பல நூறு மடங்கு பெருகியுள்ளன. மத்திய பொதுப்பணித்துறை பற்றி மட்டும்தான் இங்கு நான் பேச முடியும். மத்திய பொதுப்பணித்துறையினரிடம் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் பட்டியலில் 1171 பேர் உள்ளனர். இவர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த ஒப்பந்தக்காரர் ஒரே ஒருவர்தான் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

மற்றவர்கள் இந்துக்கள், முகமதியர்கள், சீக்கியர் ஆவர். எல்லா சமூகத்தினரும் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்தமுறை இருக்குமாறு அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்காரின் ஒப்பந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கையுடன் ஒப்படைக்கக் கூடியவர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே உள்ளனர். ஏற்கெனவே இந்து, முகமதிய, சீக்கிய ஒப்பந்ததாரர்களிடம் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த பலர் சிப்பந்திகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விளைவு என்னவெனில், இந்து, முகமதிய, சீக்கிய ஒப்பந்தக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துவரும் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

52. அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சாதியினரிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களைச் சேர்த்துக் கொள்வதில் கஷ்டம் எதுவுமில்லை. ஆனால் முக்கியமானது என்னவெனில், அவர்கள் ஒப்பந்த வேலையைப் பெறுவதைச் சாத்தியமாக்குவதுதான். சர்க்கார் ஒப்பந்தப் பணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு விதிகள் உள்ளன:-

(1) எந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி மற்றவர்களைவிட மிகக் குறைவாக இருக்கிறதோ அவரது ஒப்பந்தப் புள்ளி ஏற்றுக்கொள்ளப்படும்.

(2) ஆனால் அதேசமயம் மற்ற எல்லாவற்றையும் விட குறைவான ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது சர்க்காருக்கு கட்டாயம் இல்லை.

53. எனவே ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு ஓர் ஒப்பந்த வேலை அளிக்கப்படுமா இல்லையா என்பது பொறுப்பில் உள்ள அதிகாரி தமது உசிதப்படி முடிவு செய்வதற்கு அவருக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்த விஷயம் இது. ஆனால் தமது உசிதப்படி முடிவு செய்வதற்கு ஓர் அதிகாரிக்குள்ள இந்த அதிகாரம் ஒரு தாழ்த்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் என்பது நடக்காது. அவருடைய ஒப்பந்தப்புள்ளி மற்றெல்லாவற்றையும் விட குறைந்ததாக இருக்கலாம். வகுப்பு குரோதத்தின் காரணமாக அந்த அதிகாரி அதை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.

“எல்லாவற்றையும் விடக் குறைந்ததை ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் அவருக்கு இல்லை” என்ற இரண்டாவது விதியின்படி அவர் நடந்து கொள்ளலாம். அவருடைய ஒப்பந்தப்புள்ளி எல்லாவற்றிற்கும் குறைவானதை விட அதிகமாக இருந்தாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அவ்வாறு செய்யமாட்டார். அவர் இரண்டு விதிகளில் முதல் விதியைச் சார்ந்து நிற்பார். எப்படியாயினும் தாழ்த்தப்பட்ட சாதி ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தப் புள்ளிகளை நிராகரிப்பதை அவர் நியாயப்படுத்த முடியும்.

54. வகுப்புக் குரோதத்திற்கு எந்தப் பரிகாரமும் நிச்சயமாக இல்லை. என் மனதில் படும் ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். மிகவும் குறைந்த ஒப்பந்த புள்ளியை விட 5 சதவிகிதம் அதிகமாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி இல்லாது இருந்தால், மற்ற எல்லாவற்றையும் விடக் குறைந்தது என்று கருதி அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று விதியைத் திருத்தலாம் என்பது என் கருத்தாகும். இதன் காரணமாக அரசுக்கு நஷ்டம் ஏற்படக் கூடும். நிதி இலாகா இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய சலுகையால் எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது பற்றி எனக்குக் கருத்து எதுவும் இல்லை. எனினும் ஒன்று மட்டும் நிச்சயம். ஒட்டகத்தின் முதுகை உடைப்பது போன்று அது பெரும் சுமையாக இருக்காது.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் III)

Pin It