படித்து முடித்த பின் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தால் போதும்! வேறென்ன வேண்டும்? இது தான் நாம் நினைப்பது! ஆனால் வேலை கிடைப்பதற்கு, நாம் படித்திருக்கும் பட்டப்படிப்போ பட்டயப்படிப்போ போதுமா? என்றால் இல்லை! போதாது! அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

எல்லா நிறுவனங்களிலும் பல கட்டத் தேர்வுகள் நடத்துகிறார்கள். அந்தத் தேர்வுகளுக்குச் சிறந்த முறையில் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாமே ஆயத்தப்படுத்துவது என்றால் எப்படி? கொஞ்சம் பார்க்கலாம்.

1. தன் விவரக் குறிப்பு (பயோ டேட்டா) தயாரித்தல்

interviewநீங்கள் யார், உங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் என்ன, நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், உங்களுடைய தனித்திறமைகள் என்னென்ன, விருப்பங்கள் என்னென்ன? தொடர்பு முகவரி ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பயோ டேட்டா தயாரியுங்கள். இந்த பயோ டேட்டா தான் உங்களுடைய முகம்! எனவே இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம் - உங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரியும் எனப் பொய் சொல்லாதீர்கள். பலரும் செய்யும் தவறு - எப்படியாவது வேலை கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தெரிந்தது, தெரியாதது என எல்லாவற்றையும் தெரிந்ததாகப் போட்டிருப்பார்கள். அப்படிச் செய்பவர்கள் நேர்காணலின் போது எளிதாக வடிகட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுவார்கள். வேலை கிடைப்பதற்கு நாள் ஆகிவிட்டாலும் பரவாயில்லை - தவறான தகவலைக் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நினைக்காதீர்கள். அந்த முயற்சி பெரும்பாலான நேரங்களில் தோல்வியில் தான் முடிவடையும். எனவே உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள். பயோடேட்டாவின் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை உங்களுடைய சொந்த வரிகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறருடைய பயோடேட்டாவில் இருந்து எடுத்து எழுதுகிறீர்கள் என்றால், ஒரு முறைக்குப் பல முறை நீங்கள் அந்த வரிகளுக்கு உரிய ஆள் தானா? எனத் தனக்குத் தானே கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் நேர்காணலுக்குப் போகும் போது மறக்காமல் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள்.

2. ஆப்டிடியூட் தேர்வு

தேவைக்கு அதிகமான அளவில் நேர்காணலுக்கு ஆட்கள் வரும்போது நிறைய நிறுவனங்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வை வைக்கின்றன. ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் பெயர் தான் நமக்குப் புதியதே தவிர, இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நமக்குப் பழையவை தாம்! ஆமாம்! நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கணக்குத் தான் பெரும்பாலும்!

  • '4 பேர் சேர்ந்து ஒரு வீட்டை 40 நாட்களில் கட்டினால் 3 பேர் அதே வீட்டைக் கட்ட எத்தனை நாட்கள் ஆகும்?'
  • 'ஒரு தொடர்வண்டி ஒரு கி.மீ நீளமுள்ள பாலத்தை 50 நொடிகளில் கடந்தால், அவ்வண்டியின் எவ்வளவு வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது'
  • 'இரண்டு நாணயங்களைச் சுண்டி விடும் போது தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?'

என்பன போன்ற கேள்விகள் தான் அங்கு கேட்கப்படும். இக்கேள்விகளைத் தயாரிப்பதற்கென்றே பல புத்தகங்கள் கிடைக்கின்றன. நீங்கள் பழைய புத்தகக் கடைகளில் கூட அப்புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். ஆர். எஸ். அகர்வால் எழுதிய 'குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்' என்னும் புத்தகம் பலரும் வாங்கும் புத்தகம். அப்புத்தகத்தைப் படித்தாலே போதுமானது.

சில நிறுவனங்களில் இவ்வகைக் கணக்குகளோடு சேர்த்து விடுகதைகளையும் தேர்வில் வைத்திருப்பார்கள். எளிமையான விடுகதைகளாகத் தான் இருக்கும்.

சில எடுத்துக்காட்டுகள்:

  • ஒரு கூடையில் 3 வெள்ளைப் பந்துகள், 3 பச்சைப் பந்துகள், 3 சிவப்புப் பந்துகள் உள்ளன. நீங்கள் இரண்டு பந்துகளை எடுக்கும் போது அவை இரண்டுமே சிவப்பாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
  • ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக ஓடி வருபவரை முந்துபவர் எத்தனையாவது இடத்தில் ஓடுவார்?

என்பன போன்ற எளிமையான கேள்விகள் தாம் இருக்கும். வேறு சில நிறுவனங்களில் ‘வெர்பல்’ எனப்படும் ஆங்கிலம் அறி தேர்வு நடத்துவார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்து அதற்கான அர்த்தம் என்ன என்பதற்கு 4 விடைகள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றுள் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன.

இந்தத் தேர்வில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தேர்வு மிக எளிதாகத் தான் இருக்கும்; ஆனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நாம் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 40 கேள்விகளை ஒரு மணிநேரத்தில் முடிக்கச் சொல்வார்கள்.; சில நிறுவனங்களில் 60 கேள்விகளை 1.5 மணிநேரத்தில் எழுதச் சொல்வார்கள். எனவே, எளிமையான கேள்விகள் தானே கேட்கிறார்கள், நாம் பள்ளியில் படித்ததைத் தானே கேட்கிறார்கள் என்று தயாரிக்காமல் வந்து விடக் கூடாது. ஒழுங்கான தயாரிப்பு இல்லை என்றால் நேரப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்வீர்கள். எனவே, இந்தத் தேர்வுக்குத் தினமும் ஒரு மணி நேரமோ, இரண்டு மணிநேரமோ ஒதுக்கிப் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இவ்வகைத் தேர்வுகளில் 'பாஸ் / பெயில்' என்பதெல்லாம் கிடையாது. இந்தத் தேர்வுகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் - அதிக எண்ணிக்கையில் வந்திருப்போரை வடிகட்டி எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமே! எனவே நீங்கள் எவ்வளவு நன்றாகத் தேர்வு எழுதியிருந்தாலும் உங்களுடன் தேர்வு எழுதும் சக போட்டியாளர்கள் உங்களை விட நன்றாக எழுதியிருந்தால் நீங்கள் வடிகட்டப்படலாம். இதை மறந்து விடாதீர்கள். எனவே, ஆப்டிடியூட் தேர்வில் கூடிய வரை அதிக மதிப்பெண் எடுக்க முயலுங்கள்.

ஒரு நிறுவனத்திற்கு உங்களுடைய பயோ டேட்டாவை அனுப்புகிறீர்கள். அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்து, ஆப்டிடியூட் தேர்வு எழுதக் கூப்பிடுகிறார்கள் என்றால்,

  • அந்த நிறுவனத்தில் உங்களுடைய உறவினர்களோ கல்லூரி சீனியர்களோ வேலை பார்க்கிறார்களா என்று பாருங்கள். அப்படி யாராவது இருந்தால், அவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆப்டிடியூட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் ஏதும் கிடைக்குமா? என்று விசாரியுங்கள்.
  • அப்படி யாருமே இல்லாத சூழலில், இணையத்தில் சென்று 'நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஆப்டிடியூட் தேர்வுக்கான முந்தைய தாள்களைத் தேடுங்கள்.

இப்படித் தேடி எடுத்து அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்பத் தயாராகுங்கள். வெறுமனே கண்மூடித்தனமாக, ஒரே புத்தகத்தையோ ஒரே ஒரு இணையத்தளத்தையோ பின்பற்றாதீர்கள்.

3. நேர்காணல்

இந்தச் சுற்று தான் ரொம்ப முக்கியமான சுற்று. இங்குத் தான் நீங்களும் நிறுவன அதிகாரிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். எனவே நல்ல உடை உடுத்தி நேர்காணலுக்குச் செல்லுங்கள். இங்கு நினைவில் கொள்ள வேண்டியவை:

சரியா நேரத்தில் செல்லுங்கள்:

சரியான நேரத்திலோ முடிந்தால் அதற்கு முன்னதாகவோ நேர்காணலுக்குச் செல்லுங்கள். கடைசி நிமிடத்தில் கிளம்பாதீர்கள்; போக்குவரத்து நெருக்கடி போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் அதுவே உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். சரியில்லாத மன நிலையுடன் நேர்காணலில் இருப்பதே பாதித் தோல்வியைக் கொடுத்து விடும்.

அலைபேசிகளை அமைதியாக்குங்கள்:

நேர்காணல் அறைக்குள் போவதற்கு முன், உங்கள் செல்போனை அமைதி நிலை ('சைலன்ட்')க்குக் கொண்டு வந்து விடுங்கள். இல்லாவிடில் முக்கியமான தருணத்தின் போது தேவையில்லாத அழைப்புகள் வந்து அதுவே உங்களுக்குத் தொல்லையாக அமையலாம்.

பயோடேட்டா ரொம்ப முக்கியம்

கையோடு உங்கள் பயோடேட்டாவை எடுத்துச் செல்லுங்கள். கையில் இருக்கும் பயோடேட்டாவில் உங்களுடைய லேட்டஸ்ட் தகவல்கள் அனைத்தும் இருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

  • நேர்காணலின் முதல் கேள்வி பெரும்பாலும் 'உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்பதாகத் தான் இருக்கும். அக்கேள்விக்குத் தயாராகச் செல்லுங்கள்.
  • நேர்காணல் என்பது தேர்வு இல்லை; நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல் தான். வந்திருப்பவர் - நம்முடைய நிறுவனத்திற்கு ஏற்றவரா, வேலைக்கு ஏற்றவரா, வந்திருப்பவரை வைத்து வேலை வாங்க முடியுமா, நீண்ட காலம் நம்மோடு இருப்பாரா என்பனவற்றையே நிறுவனங்கள் சோதிக்கின்றன. எனவெ, எந்தக் கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி விடாதீர்கள். நீங்கள் சொல்வது பொய் என்று தெரிந்து விட்டாலே உங்களைப் பெரும்பாலும் நிராகரித்துவிடுவார்கள்.

ஏன்? ஒரு வேலைக்காகப் பொய் சொல்லத் தயங்காத நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாளை அலுவலகத்திலும் பொய் சொல்லத் தொடங்குவீர்கள். அது அலுவலகத்தின் நிர்வாகத்தையே குலைத்து விடும். தவிர்க்க முடியாத நேரங்களில், உண்மையை மறைக்கலாம்; தப்பில்லை. ஆனால் பொய் சொல்லக்கூடாது.

திரும்பவும் சொல்கிறேன், நேர்காணல் என்பது கேள்விகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு இல்லை. நீங்கள் சொல்லும் முதல் பதிலில் இருந்து தான் அடுத்த கேள்வியே கேட்பார்கள். எனவே ஒவ்வொரு பதிலையும் கவனமாகச் சொல்லுங்கள். பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பதில் சொல்லாதீர்கள். நேர்காணலின் போது உங்கள் பொழுதுபோக்கு என்ன என்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் உங்களுடைய பொழுது போக்கு என்னவோ அதைச் சொல்லுங்கள். உங்களுடைய பொழுதுபோக்கு படம் பார்ப்பதாக இருக்கலாம். அது அவ்வளவு நல்ல பதில் இல்லை என நினைத்துக் கொண்டு, 'புத்தகம் படிப்பது' என நீங்கள் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நேர்காணல் நடத்துபவர், 'என்னென்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீர்கள்? இலக்கியமா? வரலாறா?, தமிழா? ஆங்கிலமா?' என அடுத்துக் கேட்கும் கேள்விகளில் வசமாக மாட்டிக்கொள்வீர்கள். எனவே, எக்காரணம் கொண்டும் தவறான பதில்களைக் கவர்வதற்காகச் சொல்லாதீர்கள்.

உண்மையைச் சொல்லுங்கள்:

நேர்காணல் நடத்துபவர், 'தமிழக அரசியல்' பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதைச் சொல்லுங்கள். எல்லாம் தெரியும் என்று சொல்லி மாட்டிக்கொள்வதை விட, 'பத்துக்கு நாலு மார்க் போடலாம் சார்' என்று சொல்லும் பதில் மேலானது.

நேர்காணல் நடத்துபவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்:

நேர்காணல் நடத்துபவர், அடிப்படையான சில கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொண்டே வருகிறார் என்றால், அவருக்கும் அடிப்படை தான் தெரியும் எனத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். உங்கள் நிலை அறிந்து கூட, அவர் அடிப்படையான கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.

விரிவாக்கங்களைப் பதிலாகச் சொல்லாதீர்கள்:

சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் நேர்காணல் நடக்கிறது. 'OOPs' என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்; அதற்கு 'Object Oriented Programming' என்று விரிவாக்கம் சொல்லக்கூடாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 'SPB' என்பவர் யார்? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால் 'S.P. பாலசுப்பிரமணியம்' என்றா சொல்வீர்கள்? அவர் ஒரு பாடகர், பல படங்களில் நடித்திருக்கிறார், இசையமைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்வீர்கள் அல்லவா? அதே போல் தான் நேர்காணலும்! விரிவாக்கங்களை மட்டும் பதிலாகச் சொல்லவே கூடாது.

ஒரு வரி / ஒரு வார்த்தை பதில்கள் - கூடவே கூடாது:

முன்னரே சொன்னது போல, நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல். ஒரு வரி பதில்களோ, ஒரு வார்த்தை பதில்களோ அந்தக் கலந்துரையாடலை நீர்த்துப் போக வைத்து விடும். கூடியவரை விரிவான விளக்கங்களைக் கொடுக்க முயலுங்கள்.

நிறுவனம் பற்றித் தெரிய வேண்டும்:

நீங்கள் எந்த நிறுவனத்திற்குப் போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் மதுரைக்குப் போகும் வண்டியில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் வந்து உட்கார்பவர், 'தம்பி - எந்த ஊருக்குப் போறீங்க' என்கிறார். மதுரைக்கு என்கிறார்கள். 'என்ன விசயமா?' என்கிறார். தெரியாது; அப்பா போகச் சொன்னார் என்கிறீர்கள். எத்தனை நாள் மதுரையில் இருப்பீர்கள் என்கிறார்; தெரியாது என்கிறீர்கள். கேள்வி கேட்பவர் 'பையனுக்கு விவரம் போதாது' என்று கொஞ்ச நேரத்தில் பேசாமல் ஒதுங்கிக்கொள்வார். இதே போல் தான் நேர்காணலும்! நேர்காணல் எடுப்பவர் 'ஏன் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்கீங்க', 'எங்க நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்' என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார். எனவே நிறுவனத்தின் பெயர், அவர்களுடைய முக்கிய தொழில், தலைவர் பெயர், தலைமையிடம், குறிக்கோள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளுக்கு எவ்வளவு புதுமையாகப் பதில் சொல்ல முடியும் என்று யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடினமான கேள்விகள் சில:

  • நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?
  • வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?
  • இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?
  • இன்னும் மூன்று ஆண்டுகளில் என்னவாக விரும்புகிறீர்கள்?
  • எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் ('பாண்டு') இருக்கிறது. அதற்கு ஒத்துக்கொள்கிறீர்களா?

போன்ற கேள்விகள் பல இடங்களில் கேட்கப்படும். நண்பர்களுடன் இணைந்து இக்கேள்விகளை எப்படி எதிர்கொள்ளலாம்? என்று முடிவு செய்யுங்கள். பொய் சொல்லக்கூடாது; ஆனால், உண்மையை மறைக்கலாம் என்னும் விதி இங்கும் பொருந்தும். மறந்து விடாதீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி:

நேர்காணலின் முடிவில், 'நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று பல இடங்களில் கேட்பார்கள். அதற்கும் தயாராக இருங்கள். நீங்கள் போகும் நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து அதைப் பற்றிய கேள்வியோ உங்கள் வேலை பற்றிய கேள்வியோ கேட்கலாம். முடிந்தவரை எதிர்மறைக் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.

  • நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கு முன் ஏதாவது படித்து வர வேண்டுமா?
  • உங்கள் நிறுவனம் பல நாடுகளில் இருக்கின்றதே! பல நாடுகளை நிர்வகிப்பது கஷ்டமான வேலையாக இருக்குமே! எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

நாளும் பயிற்சி - நிறைவில் வெற்றி

இப்போது நாம் பார்த்த அனைத்தையும் தினமும் பார்க்க வேண்டும். அடுத்த வாரம் தானே நேர்காணல் இருக்கிறது; அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மந்தமாக இருந்து விடக்கூடாது. முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியைத் தரும். மறந்து விடாதீர்கள். 

Pin It