அண்ணாச்சியைச் சொல்லுங்கள் ... அவாள்களைச் சொல்லாதீர்கள் - டெக்கான் க்ரானிகிளின் அங்காடித் தெரு திரைப்பட விமர்சனம்.

பெரு நகரங்களில் தொலைந்து போன சிறு நெஞ்சங்களின் அவலத்தை வெள்ளித் திரையின் வழக்கமான அரிதாரப் பூச்சுகளின்றி சொல்லிய முக்கியமானதொரு திரைப்படம் அங்காடித் தெரு. DeccanChronicleஇதற்கான பல விமர்சனங்கள் அதன் சிறப்பைக் கூறிச் சென்ற போதிலும் கடந்த 04.04.2010 அன்று இது குறித்த தனது விமர்சனத்தை டெக்கான் நாளிதழ் வெளியிட்டது. அதில் அந்தப் படம் பற்றிய விமர்சனத்தின் முடிவில் அதை விமர்சித்திருந்த திரு A S அவர்கள் படத்தில் அந்த தங்கை பாத்திரம் தேவையற்றது என்று கூறியதுடன் அந்த பிராமணக் குடும்பம் பற்றிய காட்சி வலிந்து புகுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அவரின் தனிப்பட்ட கருத்தாகவோ அல்லது அந்தப் பத்திரிக்கையின் கருத்து எனவோ எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் பலர் விமர்சிக்க ஆரம்பித்தவுடன் அது அதை எழுதியவரின் தனிப்பட்ட கருத்து என்பதாக முடிகின்றது.

அதாவது ஒரு திரைப்படத்தில் ஓரிடத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்கு அவர் இப்படித் துடித்துப் போகிறார் என்றால் முழுப்படமும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிட்டு எடுக்கப்பட்டதற்கு அந்தச் சமுதாய மக்கள் துடிக்க மாட்டார்களா?

அவர் அதை சாதாரணமாகக் கூறாமல் பிராமணக் குடும்பம் என்று கூறியது உள் நோக்கமுடையதாகத்தானே தோன்றுகின்றது?

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதுதானே உண்மையாயிருக்க இயலும்.

அதாவது நீங்கள் எந்த சமுதாயத்தைப் பற்றி வேண்டுமானாலும் படம் எடுங்கள், அவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள் அது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை என நாங்கள் வாதாடி வெற்றி பெற்றுத் தரத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவாள்களைப் பற்றி மட்டும் தவறாகக் கூறாதீர்கள் என்ற தொனியில் ஒருவர் எழுதுவதும் அதனை பிரபல நாளிதழ் சரியென்று உணர்வதாலோ அல்லது தங்கள் பத்திரிக்கையின் பெரும்பாலான வாசகர்கள் அவாள்கள்தான் என்பதாலோ வெளியிடுகின்றன.

நாம் அண்ணாச்சிகளுக்காகவோ, அவாள்களுக்காகவோ வாதிடவில்லை, தொழிற் பெருக்கத்தில் மனித மனம் மிருகமாகி தனது சுய நலத்திற்கு எதையும் யாரையும் பழி கொடுக்கும் சூழல் இருப்பதை நமது மக்கள் உணர்ந்திருப்பதாலேயே அங்காடித் தெரு போன்ற படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனாலும் அதிலும் தங்கள்??? சமுதாயத்தைப் பாதுகாக்க முனையும் நபர்களையும் அதைப் பிரசுரிக்கத் தயங்காத பத்திரிக்கைகளையும் நாம் என்ன செய்யப் போகின்றோம். பல காலங்கள் முன்பாக மு வரதராசனார் அவர்கள் சொன்னது போல் அவற்றை நிராகரிக்கும் எண்ணம் நம்முள் எத்தனை பேருக்கு உள்ளது? அந்தப் பத்திரிக்கையை விநியோகிக்க மறுக்கக் கூடிய பிற சமூக விநியோகிப்பாளர்கள் எத்தனை பேர்?

இவற்றை நாம் செய்ய மாட்டோம் என்ற காரணத்தினால்தானே அவர்கள் இன்று நமது தமிழ்மண்ணில் தங்கள் மனம் போன போக்கில் எழுதிக் கொண்டும் பரப்பிக் கொண்டும் திரியும் சூழல் உள்ளது. இதில் வேடிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால் எண்பதுகளின் இறுதியில் திரு.பாரதிராஜா அவர்கள் "வேதம் புதிது" என்று பெயர் வைத்தவுடனேயே பற்றிக்கொண்டது நெருப்பு. மாண்பமை தணிக்கைத்துறையின் மூலமாக அந்தப் படம் வெளி வரத் தடை போட அவர்களால் முடியும், முடிந்தது என்பதுதான் வரலாறு. அன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் மத்திய தணிக்கைத் துறை மூலமாக அந்தப் படம் வெளிவர பாரதிராஜாவே படாத பாடுபட வேண்டியிருந்தது. அன்றைய முதல்வரும் கூட அதற்கு வக்காலத்தாக மூதறிஞர் ராஜாஜி இருந்திருந்தால் அந்தப் படத்தைப் பாராட்டியிருப்பார் என்று குறிப்பிட்டதாக நினைவு. பாரதிராஜா என்பதால் முதல்வர் தலையிட்டு படம் வெளிவந்தது. அதுவே ஒரு சாதாரண இயக்குனராகவோ, புதுமுக இயக்குனராகவோ இருந்திருந்தால் அவர் இன்னேரம் காணாது போயிருப்பார்.

கருத்தம்மாவில் கள்ளிப்பாலை உபயோகித்துப் பெண் குழந்தைகளை அழிக்க நினைக்கும் சமூகமாகத் தங்களைக் காட்டும் போதிலோ, பல படங்களில் தங்களை வன்முறையாளர்களாக அல்லது அரிவாளால் நியாயம் பேசும் சமூகமாகக் காட்டும்போதோ அந்தச் சமுதாயம் தங்களைப்பற்றிய விமர்சனம் என்று கொதிக்கவில்லை, கொள்ளைப்புற வழியாகத் தடைகளையிடவில்லை.. இன்றும் அண்ணாச்சிகளின் சமுதாயம் தங்கள் சமுதாய செல்வந்தர்களின் மீதான தாக்குதல் என்று அதை எடுத்துக் கொள்ளவில்லை.. எந்தப் போராட்டத்திலும் குதிக்கவில்லை.. தமிழகத்தில் அவர்கள் இல்லாத ஊர்களே இல்லாத நிலையில் அப்படியொரு போராட்டம் அவர்களுக்கு பெரிய காரியமல்ல எனும் நிலையில் அவர்கள் அமைதியாயிருப்பது அந்தச் சமுதாயத்தின் பெருந்தன்மை, நாகரீகம்.

ஆனால் இப்படியெல்லாம் பெருந்தன்மையாய் பெரும்பான்மைச் சமூகங்கள் இருப்பதால்தான் சிறுபான்மைச் சமுதாயம் ஆட்டமாய் ஆடுவதும் அவர்களின் கருத்துக்களை அவர்கள் சார்ந்த அச்சு ஊடகங்கள் சிரமேற்கொண்டு பரப்புவதும் தொடர்கின்றது. நமது எதிர்வினையற்ற தன்மையால்தான் இவர்கள் இன்னும் பெரும்பான்மை மக்களை ஆட்டிப் படைக்கின்றனர். ஆகவே நண்பர்களே அண்ணாச்சிகளையோ மற்ற சமூகத்தவரையோ நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. ஆனால் மேன்மைதங்கிய அவாள்களை உள்ளது உள்ளபடி விமர்சிக்க உரிமையில்லை என்பதுதான் உண்மை.

-ரெ.கா.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)


Pin It