மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.

மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்

மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990) மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள் (Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.

மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.

மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.

இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.

- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்

(பூவுலகு அக்டோபர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)

Pin It