மரங்கள் பேசிக் கொள்கின்றன! ஆம், மரங்களுக்கு இடையில் நிகழும் தகவல் தொடர்புகளைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. அவை எவ்வாறு சமிக்ஞைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன? இதற்கு உதவுவது யார்? பிற மற்றவற்றுடன் மரங்களுக்குச் சக ஜீவி என்ற நிலையில் உள்ள சொந்தம்தான் இதற்குக் காரணம்.

சமீபத்தில் வெளிவந்த ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' என்ற திரைப்படம் பற்றித் தெரியும் அல்லவா? 'ஐவா' (Eywa) என்ற தெய்விகக் கற்பனை கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? அது வெறும் கற்பனை அல்ல. மாறாக, அறிவியல் பூர்வமாக விவரிக்கக்கூடிய சாத்தியமுள்ள ஓர் ஆய்வு விஷயம்தான் அந்தப் பாத்திரம். கனடாவின் சூழலியல் அறிஞரான சூசன் சிமார்டின் (Suzanne Simard) ஏறக்குறைய 30 ஆண்டு ஆய்வுகளின் பலனால் இது உருவானது. பூமிக்கடியில் இரகசியமாக மரங்களுக்கு இடையில் நடக்கும் தகவல் பகிர்வுகளை இந்த ஆய்வுகள் ஆதாரங்களுடன் விளக்குகின்றன.wood wide webஅவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு மரம் வெட்டும் நிறுவனத்தில் அலுவலராகப் பணிபுரிந்தார். பைன் தோட்டங்களில் களைகளை அழிக்க முற்பட்டபோது, அவை மேலும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு அழிவது கண்டறியப்பட்டது. இதன் மூலம் சத்துகளுக்காக மட்டுமே மரங்கள் போட்டி போடுகின்றன என்ற அறிவியல்பூர்வமற்ற நம்பிக்கை தவறு என்று அறியப்பட்டது. அவர் 1997-இல் தன் முனைவர் பட்ட ஆய்விற்காக இந்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்தார்.

கார்பன்-14, கார்பன்-13 ஆகிய கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்திப் பெரிய பைகளில் 'பேப்பர் பிர்ச்', 'டக்லஸ் ஃபர்' செடிகளை ஒன்றாக நட்டு வளர்த்தார். பிறகு அவற்றில் இருந்து வெளிவரும் கதிரியக்கத்தைக் கெய்கர் முல்லர் கவுண்டர் (Geiger-Muller Counter) கருவியைப் பயன்படுத்திப் பதிவு செய்தார். கோடையில் இலை உதிரும் 'பேப்பர் பிர்ச்' செடிகளில் இருந்து சில தகவல் பரிமாற்றங்கள் பூமிக்கடியில் செல்லும் பாதைகள் வழியாகச் செல்கின்றன என்று தெரியவந்தது.

ஆனால், இலையுதிர் காலத்தில் பிர்ச் இலைகள் உதிர்ந்துவிட்டதால், பசுமை மாறா ஃபர் மரத்தில் இருந்து பூமிக்கடியில் கார்பன், பிர்ச் மரத்திற்கு வளங்களாக வந்து சேர்ந்தது. கெவின் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரின் ஆய்வுகள் மூலம், வயது முதிர்ந்த டக்லஸ் ஃபர் மரங்களுக்கு இடையில் தகவல் தொடர்புகள் டி.என்.ஏ (DNA) வரைபட ஆய்வுகள் மூலம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தடிப் பாதைகள், பூஞ்சைகளின் வலைப்பின்னல்கள் ஆகியவை பரஸ்பரம் தொடர்புடைய வலைகள் போலக் காணப்படுகின்றன என்று கண்டறியப்பட்டது.

இந்தப் பூஞ்சைகள் வேறுபட்ட மரங்களின் வேர்களை இணைக்கின்றன. நீர், நைட்ரஜன், கார்பன் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள மரங்களை இவை தயார்படுத்துகின்றன. பூஞ்சைகளின் இலை வலையமைப்பிற்கு 'Wood-Wide Web' என்று பெயரிடப்பட்டது. பூஞ்சைகளின் மைக்கோரைஸா (Mycorrhiza) என்ற பகுதிகளே இந்தப் பகிர்வுகளை மேற்கொள்கின்றன. 1881-இல் போலந்தின் பூஞ்சையியலாளரான பிரான்சிஸ் கானியன்ஸ்கி என்பவர்தான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

வேர்களைப் பற்றிப்பிடித்திருக்கும் வெளிப்புற மைக்கோரைஸா, வேர்களின் செல்களுக்குள் நுழையும் ஆற்றல் உள்ள உட்புற மைக்கோரைஸா என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்த பொதுவான ஒரு வலையமைப்பே 'Wood-Wide Web' என்று அழைக்கப்படுகிறது. இவை மெல்லிய நார்களால் உருவாக்கப்பட்டவை. இவை கிளை கிளையாக மாறி மரங்களின் வேர்களில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.

தொடர்புகள் ஒரே ஒரு மரத்துடன் மட்டும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை. ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த வலையமைப்புகள் ஒரே நேரத்தில் எண்ணற்ற மரங்களின் வேர்களுடன் தொடர்புகொண்டுள்ளன. சிறியதும் பெரியதுமாக ஏராளமான மரங்கள் இருக்கும் ஒரு காட்டில் பெரிய மரங்கள் 'தாய் மரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை மர வலையமைப்பின் (Wood-Wide Web) தொடர்புபடுத்தும் மையங்களாக இயங்குகின்றன.

வனப்பகுதியின் நோய் எதிர்ப்புத் தன்மையின் திறவுகோலாகச் செயல்படும் இவை, இளம் கன்றுகளை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும், வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், சுற்றியுள்ள மரங்களுக்குச் சூழல் அச்சுறுத்தல்களைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதிலும் மைக்கோரைஸா வலைகளைப் பயன்படுத்துகின்றன.

மரங்கள் எவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன? ஒரு மரம் ஆக்கிரமிக்கப்படும்போது முன்னறிவிப்புகள், அழுத்தத்தைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஜாஸ்மோனிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் போன்ற வேதியியல் சமிக்ஞைகள் மூலம் அருகில் இருக்கும் மரங்களுக்கு அது குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன. வேதியியல் சமிக்ஞைகளை ஏற்கும் ஏற்பி மரங்கள் அவற்றைங்கள் வேர்த்தொகுப்புகள் மூலம் கண்டறிகின்றன; நோய் எதிர்ப்பு ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துகின்றன.

ஒருவேளை மரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால், உடனே அவை நோய் எதிர்ப்பு நொதிகளை வேகமாக உற்பத்தி செய்கின்றன. இந்த சமிக்ஞைகளின் செயல்முறை விலங்குகளில் நாடி நரம்புகள் வழியாக நடைபெறும் செயல்களுக்குச் சமமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மரம் வறட்சி, நைட்ரஜன் போன்ற வளங்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும்போது, அது பற்றிய விவரங்களை மைக்கோரைஸா பின்னல்கள் மூலம் மற்றவற்றிற்குத் தெரிவிக்கிறது.

இதன் மூலம் தாய் மரங்கள் அதிக கார்பன் அல்லது சத்துகளை இளம் கன்றுகளுக்கும், அழுத்தத்திற்குள்ளான அக்கம்பக்கத்து மரங்களுக்கும் அனுப்புகின்றன. கார்பன், நைட்ரஜன், நீர், பாஸ்பரஸ் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள மரங்கள் இந்த வலையமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஒரே இனத்தைச் சேர்ந்தவற்றிற்குத் தகவல் பரிமாற்றங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

சூழல் அழுத்தங்களால் ஒரு காட்டில் வாழும் உயிரினங்கள் கஷ்டப்படும்போது, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் அமைப்புகளாகப் பூஞ்சைகளின் மைக்கோரைஸாக்கள் மாறுகின்றன. ஒட்டுமொத்த வனத்தையும் ஒன்றுசேர்த்து அழிவில் இருந்து மீட்கும் தன்மையுடையவையாக, 'சூப்பர் உயிரினமாக' மைக்கோரைஸாக்கள் செயல்படுகின்றன. ஊசியிலை மரங்கள், இலையுதிர் மரங்கள் போன்ற வேறுபட்ட மரங்கள் தங்களுக்கு இடையில் வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும், குறிப்பிட்ட பருவங்களில் தேவையான சத்துகளின் சமநிலையைப் பேணவும் இந்த வலையமைப்புகள் உதவுகின்றன.

பெரியவை முதல் சிறியவை வரை பலவித தகவல் பரிமாற்றங்கள் மூலம், சத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மைக்கோரைஸா வலைகளின் பங்கு மகத்தானது. வனப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மரங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. இது பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். வாகை அல்லது பிற மரங்கள் அடர்ந்துள்ள ஒரு தோப்பை நாம் பார்க்கும்போது இதை நினைவில் கொள்வோம். மரங்கள் அழியாமல் காப்போம்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.