பிரிட்டனின் இந்தத் தலைமுறையின் மிகக் கொடிய கொல்லும் நோயாக ஈரல் நோய் கருதப்படுகிறது. இருதய நோய், பாரிசவாயு நோய் ஆகிய இரண்டு நோய்களை விட, மது அருந்துவதால் அதிகப் பாதிப்பை ஈரல் நோய் உண்டாக்கும். ஈரல் நோயினால், (குறிப்பாக Cirrhosis of Liver) ஏற்படும் மரணம் இன்றைய தலைமுறையில், வரும் 10 - 20 ஆண்டுகளில் பெருமளவில் இருக்கும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் அச்சப்படுகிறார்கள்.   

இத்தகைய ஈரல் பாதிப்பு உடல் எடை கூடுவதாலும், மிதமிஞ்சிய மது அருந்துவதாலும், Hepatitis என்ற ஈரல் கிருமித் (Infection) தொற்றினாலும் ஏற்படலாம் எனத் தெரிகிறது. எனவே இதற்காக ஒரு ஈரல் நோய் சம்பந்தப்பட்ட நிபுணரை நியமித்து,  ஈரல் நோய் பாதிப்பையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தவிர்ப்பதற்கான வழிமுறையை வகுக்க ஆவன செய்யப்படும் என்று பிரிட்டன் அமைச்சர் தெரிவிக்கிறார்.

பிரிட்டனில் இருதய நோய் மற்றும் மூளை பாதிப்பினால் உண்டாகும் பாரிச நோயினாலும் வருடத்திற்கு 86,000 பேர் இறக்கிறார்கள் என்றும், ஈரல் நோயினால் 7000 பேர் இறக்கிறார்கள் என்றும் தெரிகிறது. ஈரல் நோய் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 1970 லிருந்து ஐந்து மடங்கு உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு லூயிஸ் ரைம்ஸ் என்பவரின் 24 வயதேயான மகள் ஸ்டேசி, மது மொடாக் குடியினால் கடுமையாக ஈரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவர் தினமும் 5 லிட்டர் மது அருந்தும் அளவுக்கு அடிமையாகியிருந்தார். இவரது அவல நிலையைப் பிரதிபலிக்கும் புகைப்படம் வெளியிட்டு மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நான் ஒருமுறை லண்டன் சென்றிருந்த பொழுது, பல இடங்களில் மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளில் குடிக்காதே என்றால் அங்குள்ள நடைமுறைக்கு சரிவராது என்ற எண்ணத்தில், 'Drink Moderately' என்றிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.

குடியினாலும், ஈரல் நோய் பாதிப்பினால்  மக்கள் மடிவதைப் பற்றிய அக்கறை நம் எல்லோருடைய (No drinks at any circumstances) மனத்திலும் ஏற்படவேண்டும். அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It