திருநெல்வேலி சைவர்களின் கையாயுதமாயிருந்து கொண்டு பார்ப்பனப் பிரசாரஞ் செய்து கொண்டிருக்கும் “லோகோபகாரி” என்னும் பத்திரிகையானது, தனது சூன் 12ஆம் நாள் பத்திரிகையில், “குடிஅரசி”ன் கூற்று என்னும் தலையங்கத்தில், திருடர்க்கழகு திருநீறடித்தல் என்று குடி அரசில் எழுதியிருப்பதால், “குடிஅரசு” பகிரங்கமாக மன்னிப் புக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிறது.

நாம் இதுவரை எவ்விதத் தப்பிதமும் செய்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய சமயம் நேரவில்லையானாலும், தவறுதல் என்று தோன்றினால் மன்னிப்புக் கேட்க எப்பொழு துமே தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகச் சிறிதும் விளங்கவில்லை. அதாவது “திருநீறு” என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடு வது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால், “திருடர்க்கழகு திருநீறடித்தல்” என்பது நன்றாய் விளங்கும். இல்லாவிட்டால் மூடர்க்கழகு என்றாவது விளங்கும்.

எப்படி எனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவது கடவுளின் அருளைப் பெறவாம். அதை இடு கின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிர மக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய் கைலாயம் சித்தித்துவிடும் என்பதே யாகும்.

இதற்கும் ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற “பிரமோத்திர காண்டம்” என்னும் சாத்திரத்தில், ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும் கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்துகொண்டே இருந்து, ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத் தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும், அந்த சண்டாளன் அதை அறிந்து, அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக்கொன்று அப்பிணத்தைச் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்துவிட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை, அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப்பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்திற் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து, அந்தப் பார்ப்பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்துக் கைலாயத்திற்குப் பார்வதி இடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து இவன் மாபாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க, நீங்கள் கைலாயத்திற்கு எப்படிக் கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவ கணங்கள், இந்த பார்ப்பான் மீது சற்று திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்திற்கு அருகனானதினால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், இதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் பார்த்து, “இந்தப் பார்ப்பான் ஒருநாளும் திருநீறு பூசவில்லை.

ஆதலால் இவனுக்கு மோட்சமில்லை” என்று சொல்லி வாதாடி, சிவகணமும், எமகண மும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பனன் உயிருடன் இருக்கும் வரை மகா பாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடு காட்டில் இவன் பிணத்தை எரித்து விட்ட போது மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின் மீது நடந்துவந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதன் காலில் பட்டிருந்த அந்த சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால் அவனுக்குக் கைலாயத்தில் இடம்கொடுக்க வேண்டிய தாயிற்றென்று சொல்லி, எமனைக் கண்டித்தனுப்பிவிட்டு பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால், திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து, நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாத்தி ரத்தின் அடுத்த அத்தியாயத்தில் அத்திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு அந்த முறைப்படி இட்டால் இதில் எழுதக்கூடாத மகா பாதகங்கள் செய்வ தினால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்றும், அவன் பிதிர்கள் செய்த பாவங்கள்கூட நீங்கி,  நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதியிருக்கின்றது.

இவை “பிரமோத்திர காண்டம்” 14ஆவது, 15ஆவது அத்தியாயத்தில் உள்ளன. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.

தவிர, நாம் முன் எழுதியதற்காக வருத்தமடைந்த, திரு. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் வேளாளன் திருநீறு பூசினால்தான் மோசட்த்திற்கருகனென்றும், மற்றவன் பூசினால் அருகராகாரென்றும் கருதிக் கொண்டிருப்பவர். உதாரணமாக, திருநெல்வேலி ஜில்லா முதலாவது சுயமரி யாதை மகாநாட்டில் திருநீறு பூசிய யாவரும் கோவிலுக்குள் போகலாம் என்ற தீர்மானம் வந்த காலத்தில், 2000 பேர் உள்ள கூட்டத்தில் ஆட்சேபித்தவர் இவர் ஒரே ஒருவராவார்.

ஆகவே, “திருடர்க்கழகு திருநீறடித்தல்” என்று எழுதிய விஷயத்தில், இவருக்குச் சிறிதுகூட கோபம்வர நியாயமே இல்லை. ஒரு சமயம் “லோகோபகாரி”க்கு மனவருத்த மிருக்குமானால், அது திருடர்க்கு அல்லது மூடர்க்கு என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தால் ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கறோம்.

- ஈ.வெ.ரா.

(“குடிஅரசு”, 15.6.1930)

Pin It