“எனக்கு கவிதை முகம்” தொகுப்பை முன்வைத்து

ஈழத்துக் கவிதைகளின் பிரிநிலை அலகாக எண்பதுகளில் கிளைத்து விரிந்த பெண்களின் கவிதைகளுள்ளன. தீவிரமான பெண்ணிலைவாதச் சிந்தனைகளுடனும் பெண்மொழிப் பிரக்ஞையுடனும் கட்டமைக்கப்பபடும் பெண்களின் கவிதைகள் பொருளாலும் ஆழத்தாலும் தனித்த அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளன. ஆண்மையச் சமூகத்தில் விளிம்பு நிலைக் கூறாக இருக்கும் பெண், கால காலமும் சட்டமிட்ப்பட்ட வாழ்க்கை முறைகளையும், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட அனுபவக் கூறுகளையும் பால்நிலைக் கற்பிதங்களையுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தாள். இந்த வட்டச் சுழற்ச்சியின் மையத்தைத் தகர்த்துக் கொண்டு பெண்களின் படைப்புக்கள் மேற்கிளம்பியிருக்கின்றன.

      வன்முறைகள் உக்கிரம் பெற்ற எண்பதுகளில் பல பெண்கள் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களின் கவிதைகளில் வன்முறையின் ஆறாத காயங்கள் தீவிரமாக வெளிப்பட்டன. கைதுகள், காணாமல்போதல், வன்புணர்ச்சி, சித்திரவதை, விதவையாக்கப்படல் என நீளும் துயர்களின் வலிகளும் பெண்கள், ஆண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும் ஒடுக்கு முறைகளும் கவிதைகளின் பொருள்களாயின. நம்பிக்கையீனங்களும் நிச்சயமின்மைகளுமே பெரும்பான்மைக் கவிதைகளிலும் உள்ளோடிக் காணப்பட்டன. 

      ஊர்வசியின் இடையில் ஒரு நாள் என்ற கவிதை

                  ‘..................................................

                  விடியலில்

                  கருக்கல் கலைகிற பொழுதில்

                  எனக்கு கிடைத்த

                  தற்காலிக அமைதியில்Anar's book

                  நான் உறங்கும் போது,

                  ஒரு முரட்டுத்தனமான

                  கதவுத் தட்டலுக்குச் செவிகள்

                  விழிக்கும் 

                  ……………………………

                  பிறகு

                  கூந்தல் விழுந்து விழுகின்ற வரையில்

                  விசாரணை

                  என்னருகே அம்மாவும்

                  கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட

                  ஒரு அணில் குஞ்சைப்போல
 

                  நீ போய் விட்டாய்

                  நாள் தொடர்கிறது.’

என முடிகின்றது. இக்கவிதை எண்பதுகளின் நெருக்கடி மிக்க சூழலை சித்தரிக்கின்றது. புதல்வர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும் அதன்பின் நிகழுகின்ற ஏனையவர்களின் இருப்பின் நிச்சயமின்மைகளையும் தாய்மையின் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துகின்றது.

      சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை போர்க் காலங்களின் நெருக்கடியை இன்னொரு விதமாகக் காட்டுகின்றது.

                  “தும்பியின் இறக்கையைப்

                  பிய்த்து எறிவதும்

                   தடியையும் பொல்லையும்

                  துப்பாக்கியாக்கி

                   எதிரியாய் நினைத்து

                  நண்பனைக் கொல்வதும்

                   எமது சிறுவரின் விளையாட்டானது

 

                   யுத்த கால இரவுகளின்

                  நெருக்குதலில்

                   எங்கள் குழந்தைகள்

                   ‘வளர்ந்தவர் ஆயினர்’

                   சிவரமணி குழந்தைகளின் இயல்புகளினூடு யுத்தகாலத்தின் மோசமான தாக்கத்தை மொழிகின்றார். யுத்தம் குழந்தைகளின் இயல்புத்தனத்தைப் பறித்தெடுத்துவிட்டு அவர்களை வளர்ந்தவர்களாக்கும் முரணை எழுதுகின்றார்.

      ஈழத்து பெண்களின் கவிதைகளின் மையமும் இயங்கு நிலையும் தொடரும் வன்முறைகளின் நீட்சியிலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. எண்பதுகளில் தொடங்கி இன்று வரையிலுமாக இப்போக்கு தொடர்கின்றது. 

இனமுரண்பாடுகளால் விளைந்த கொடூர வன்முறைகள் ஒருபுறமிருக்க பெண், பால் சார்ந்து குடும்பத்திலும் புழங்கும் இடங்களிலும் எதிர்கொள்ளும் நெருக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தீவிரம் பெறுகின்றன.

      சங்கரியின் ‘அவர்கள் பார்வையில்’ என்ற கவிதை

            ‘எனக்கு

            முகமில்லை

            இதயமுமில்லை

            ஆத்மாவுமில்லை

            அவர்களின் பார்வையில்

            இரண்டு மார்புகள்

            நீண்ட கூந்தல்

            சிறிய இடை

            பருத்த தொடை

            இவைகளே உள்ளன’ என அமைகிறது. இக்கவிதை பெண் தனது பால் அடையாளம் சார்ந்து எதிர்கொள்ளும் வன்முறையை பதிவு செய்கின்றது. பெண்ணை போகப் பொருளாக ஆண்கள் பார்க்கும் நிலையை யதார்த்த பூர்வமாக சங்கரி காட்டுகின்றார். 

      கல்யாணியின் ‘நான் உயர்ந்தவன்’ எனத் தொடங்கும் கவிதை, இந்த உலகம் ஆணுக்கே உரிதாக உள்ளதையும் ‘ஆண்’ என்ற அடையாளம் அவனைத் தவறுகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விலக்கப்படுவதற்கு ஏதுவாக இருப்பதையும் மிகுந்த ஆதங்கத்துடன் எழுதுகின்றார்.

            ‘நீ யார்?

            வெறும் பெண்

            இந்த விறைப்பைத் தீர்க்கப்

            படைக்கப்பட்டவள் 

            நான்

            உயர்வானவன்

            உன்னதமானவன்

            போற்றப்பட வேண்டியவன்

            நான் ஆண்

 

            கட்டுப்பாடுகள் அற்றவன்

            சந்தோசமானவன்

            என் ஆண் குறி

            விறைக்கக் கூடியது’ என கவிதை நிறைவுறுகின்றது. கல்யாணி, ஆண் சமூகத் தடைகள் இல்லாதவனாக இருப்பதையும், பெண் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதையும் தன்னை எதிர்ப்பால் நிலையில் உள்வாங்கிக் கொண்டு இக்கவிதையினை எழுதியுள்ளார். ஆண் எதிர்ப்பு நிலையின் தீவிரமான போக்கு இந்தக் கவிதையில் வெளிப்படுகின்றது.

      தமிழகப்பெண் கவியான சுகீர்தராணியின் கவிதை ஒன்றை இவ்விடயத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதாக இருக்கும். அவரது ‘இரவு மிருகம்’ என்ற தொகுதியிலுள்ள ‘யோனிகளின்  வீரியம்’ என்னும் கவிதை இவ்வாறு  அமைகின்றது.

            ‘பலகோடி ஆண்டுகள்

            கழிந்தொரு பரிணாமத்தில்

            உபயோகமற்று

            உன் குறி மறைந்து போகும்

            அக்கணத்தில் புரியும்

            உன் சந்ததிகளுக்கு

            எம் யோனிகளின் வீரியம்’

      இந்தக் கவிதையின் வரிகள் ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வீரியமிக்க கவிதையாக வெளிப்படுகின்றது. சுகிர்தராணி பெண்ணுடலை காதலினதும் தாபத்தினதும் நிலைகளனாக மட்டும் காட்டாது எதிர்ப்பின் ஆயுதமாகவும் காட்டுகின்றார். பெண்ணின் மேலெழுகையையும், அவளது இருப்புசார் வலிமையையும் உணர்த்துகின்றார்.

      ஆண்மையச் சமூகத்தில், பெண் தன் உடல் சார்ந்து குரல் எழுப்புவது தமிழ்க் கவிதைக்கு புது வகையிலான பரிமாணத்தை கொடுக்கின்றது. முலை, யோனி, காமம், தாபம், சுயபுணர்ச்சி, மாதவிடாய் என பெண்கள் கூறுவதற்கே மறுக்கப்பட்ட பெண்களுக்குரியதான வார்த்தைகள் பெண்களின் கவிதைகளில் தீவிர உணர்வுகளுடன் வெளிப்படுகின்றன.

      பெண் மொழி என்பது பெண்ணுடலை கொண்டாடுதலோ ஆணுக்கெதிராக குரலெழுப்புவதோ மட்டுமல்ல பெண்ணின் இருப்பில் அர்த்தத்தையும் அவளின் எல்லையற்ற வெளியையும் கோரி நிற்கும் மொழிப்பிரக்ஞை. இந்தப் பிரக்ஞையுடனேயே சமகால ஈழப் பெண்களின் கவிதைகளை அணுக வேண்டும்.

      அனார் சமகாலத்தில் கவிதைகள் எழுதும் முக்கியமானவர். இவரின் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முதற் தொகுதியான ‘ஓவியம் வரையாத தூரிகை’ மூன்றாவது மனிதன் (2004) வெளியீடாகவும் இரண்டாவது தொகுதியான ‘எனக்கு கவிதைமுகம்’ காலச்சுவடு (2008) வெளியீடாகவும் வந்துள்ளன.

      அனாரின் ‘எனக்கு சவிதை முகம்’ கவிதைத் தொகுதி அவரின் முதற் தொகுப்பிலிருந்து அவரை முதிர்ச்சி மிக்க கவிஞராகக் காட்டுகின்றது. மொழிக் கையாள்கையிலும் பொருட்செறிவிலும், உணர்த்துதலிலும் தனித்தன்மை பெற்றிருக்கின்றது. இத்தனித்துவமே இத்தொகுப்பு கவிதைகளின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகின்றது.

      தொகுதியிலுள்ள முதற் கவிதையான “மண்புழுவின் இரவு” என்ற கவிதை

            ‘நீளமான நூலாய் தெரிகின்றது இரவு

            நான் தனித்த மண்புழு

            சிறுகச் சிறுக நீளுகின்றேன்

            தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை’ என முடிகின்றது. 

      கவிதை பெண்ணின் உயிர்ப்பை அழகியல் சார்ந்த தருணங்களினூடாக கட்டுறுப்புச் செய்கின்றது. பெண்ணின் தவிப்பையும், அவாவையும் கூறுகின்றது எனினும் இக்கவிதையின் மேற்காட்டப்பட்டுள்ள இறுதி வரிகள், விடுதலையை அவாவி நிற்கும் பெண்மனப் பிரதிபலிப்பாக  வெளிப்படுகின்றன. இரவை நீளமான நூலாகககாண்பதும்; பகலை நீளமான வெள்ளை நூலாகக் காண விளைவதும் புதுமுறை அனுபவத்தின் முகங்கள். பெண்ணை மண்புழுவாகக் காட்டுவது அனார் கையாளும் சமூக வாழ்வியல் சார் குறியீட்டு உத்திக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மண்புழு விவசாயத்திற்கு உதவும் ஒரு உயிரியாகும். ஆயினும் அதனது அருவருப்பான தோற்றம் எல்லோராலும்; புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகின்றது. இவ்வாறே சமூக முன்னேற்றத்திலும் அசைவியக்கத்திலும் பெண் பங்காளியாக இருக்கின்றாள். ஏனினும் ‘ஆண்மை’ என்ற சொல்லின் மாயப் புனைவுருவாக்கம் அவளை இரண்டாம் நிலையாக சிறுமைப்படுத்தும் போக்கை மிகவும் யதார்த்த பூர்வமாக அனார் வெளிப்படுத்துகின்றார்.

      தொண்ணூறுகளின் பிற்கூற்றில் அனார் கவிதை எழுதத் தொடங்கியவர். அவரின் கவிதைகள் சிக்கலற்ற வெளிகளையும் புழங்கும் இடங்களையும் கோரி நிற்பவை, காதலை உன்னதமாகக் கொண்பாடுபவை, போரின் நெருக்கீடுகளையும் குறுக்கீடுகளையும் முகங்களாகக் காட்டுபவை. போர் என்பது அகத்திலும் புறத்திலும் நிகழும் போர். தீராத காதலும் தாபமும் கவிதைகளின் அடிச்சரடாக உள்ள போதும் அவற்றினடியாக மேற்கிளம்பும் எல்லையற்ற துயரமும் ஏக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பவை.

      கனவின் இழைகளாலும் வர்ணங்களாலும் கட்டமைக்கப்பட்ட மொழி அனாருடையது. மெல்லிய கீற்றாகத் தெரியும் ஒளி அசைவையும் தன் வஸீகரமொழியின் சேர்க்கையால் வலுவூட்டுகின்றார். புறநிலை யதார்த்தத்தை மேவிய அகநிலைசார் அனுபவநெகிழ்ச்சியே அனாரின் அதிக கவிதைகளிலும் மேலோங்கியிருக்கிறது. அவரின் கவிதைகளின் புனைவு சார்ந்த வெளியின் உச்ச நிலை இயங்குதலானது கவிதையின் சாத்தியங்களை ஒவ்வொரு அலகுகளாகத் திறந்தபடியிருக்கினறன. காட்சிப்படிமங்களினூடாக மென்னுணர்வு சார்ந்த அனுபவங்களை விரித்துச்செல்கின்றன. இவ்வாறான முன்மொழிவுகளுடாகவே அனாரின் கவிதைகள் பற்றிய அனுபவவெளிக்குள் பிரவேசிக்க முடிகின்றது.

      ‘பிச்சி’ என்னும் கவிதை பாலுணர்வுப் பகிர்வு சார்ந்த கவிதையாகும். ஆணின் பாலியல் மேலாண்மையை உள்வாங்கிக்கொண்டு கவிதை விரிந்து செல்கிறது. இந்தக் கவிதையிலுள்ள

            ‘அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள்

            ஆதி மந்திரமாய் உறைகின்றன’

 

            ‘பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை

            புலன்களை ஸ்பரிசிக்கின்றது’

            போன்;ற வரிகளில் ஆதி மந்திரம் எது என்பதும் பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை எது என்பதும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. ஆண்வழிச் சமூக அமைப்பில் ஆணே பெண்ணின் பாலுணர்வுகளையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்றான். ஆண் பெண்னை தன் மோகத்திற்கான பாத்திரமாக கையாளும் விதத்தை மேலுள்ள கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. இது நீண்ட நெடுங்காலமாக பால்நிலை விதியாக தொடர்வதை ஆதிமந்திரம், பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை போன்ற சொற்களில் வெளிப்படுகின்றது. இன்னொரு விதத்தில் ஆதிமந்திரம், இசை போன்றவை பெண்னை வசியப்படுத்தும் ஆண் தந்திரத்தை குறியீடாக உணர்த்துகின்றன. இதனை உறுதிசெய்வது போலவே

            ‘கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென

            பத்து விரல்கள்’ என்னும் வரி அமைகின்றது.

 இவ்வரிகளைத் தொடர்ந்து வரும்  

            ‘காற்றின் அதிர்வுகளில்

            பளிச்சிடுகின்ற மயக்க இழைகள்

            விரிகின்றன ஒவ்வொன்றாய்

            குளிர்ந்து..................’. என்கிற வரிகளும் வசியப்படுத்தலுக்கான வினையாற்றுதலை முன் நிறுத்துகின்றன.

            அனார், தன் கவிதைகளில் சொற்களை உரிய விதத்தில் அர்த்தப் பாங்குடன் பயன்படுத்துகின்றார். இயற்கை அவரின் கவிதைகளில் புதுப்புது வகையிலாக அர்த்தம் கொள்கின்றது பெரும்பான்மைக் கவிதைகளும் இவ்வாறமைபவையே. இயுற்கையின் மாற்றங்களை, பருவமாற்றங்களை புதிர்களை, புதுமைகளை வாழ்வியற் கூறாக படிமமாக்குகின்றார். இது அனார் கருதும் அர்த்தங்களிலிருந்தும் வாசகனுக்கு மேலும் அர்த்தங்களை கண்டடைவதற்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

            ‘நேர்த்தியாக வளர்க்கப்பட்ட புற்தரையில்

            குருவிகள்

            நீர்த்துளிகளில் ஜொலிக்கும் சூரியனைக்                                                                                        கொறிக்கின்றன.’

                              (எட்டமுடியாத அண்மை)

 

            ‘பசுமையின் உச்சமாகி நான் நிற்கின்றேன்

            வேர்களின் கீழ் வெள்ளம்

            இலைகளின் மேல் ஈரம்

            கனவு போல பெய்கின்ற உன்மழை’

                              (மின்னல்களைப் பரிசளிக்கும் மழை)

 

            ‘விடிந்தும் விடியாத

            இக்காலைக் குளிரில்

            முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்

            கோள் மூட்டுகின்றது

            பெயர் தெரியாத ஒரு காட்டுப் பூச்சி’

                              (எனக்கு கவிதை முகம்) 

      இவ்வாறு பல வரிகளில் இயற்கையைத் தன் கருத்தேற்றத்திற்கான கூறாக அனார் பயன்படுத்துகின்றார். வெறுமனே அழகியற் சொற்களாக இவ்வரிகள் இருக்காது பொருள் மிகுந்தவையாக முதன்மை பெறுகின்றன.

      அனாரின் ‘அரசி’ என்ற கவிதையும் ‘நான் பெண்’ என்ற கவிதையும் பிற பல கவிதைகளிலிருந்தும் மாறுபடுபவை. இவை பெண்ணின் இருப்பின் அர்த்தத்தை நிறுவ விழைகின்றன. அரசி கவிதை “குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்’ என்ற கவிதையில் முன் நிறுத்தும் ‘அந்தப்புரத்தின் அரசி’க்கு நேர்மாறானவளாக காட்டப்படுகின்றாள். அந்தப் புரத்தின் அரசி, குரல் என்னும் திராட்சை ரசத்தினால் கட்டுண்டு போகிறவளாக இருக்க ‘அரசி’ கவிதையில் வரும் அரசி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான பிரகடனங்களை முன்மொழிபவளாகவும் தனது, ‘பெண்’ என்னும் அடையாளத்தை ஓங்கியறைந்து வெளிப்படுத்துகிறவளாகவும் இருக்கின்றாள். 

            ‘உன் கனவுகளில்

            நீ காண விரும்புகிறபடியே

            நான் அரசி

            அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு

            சவால் விடும் பேரரசி

            அடி பணிய அல்ல

            கட்டளையிடப் பிறந்தவள்’

                              (அரசி) 

      ஏனத் தன் குரலை உயர்த்தும் போது ஆண்கள், பெண்களைக் காண விரும்பும் ‘இல்லத்தரசி’ என்ற பதத்தை கேள்விக்குட்படுத்துகின்றாள்;. தன்னைப் பேரரசியாகப் பிரகடனம் செய்கின்றாள். இக் கவிதையின் இறுதி வரிகள்           

            ‘கைகளிரண்டையும்

            மேலுயர்த்திக் கூவுகின்றேன்

            நான்

            நான் விரும்புகிறபடியான பெண்

            நான் எனக்குள் வசிக்கும் அரசி’ 

      என முடிகின்றன. இவு;வரிகள் பெண்ணின் சமூக விடுதலைப் பிரகடனத்தை ஒலிக்கின்றன. ஆண்களால் பெண்களுக்கெனத் தீட்டி வைக்கப்பட்டிருக்கும் சட்டங்களை தகர்த்து ஒலிக்கும் குரல், தன்னைத் தீர்மானிக்கும் ஆதார சக்தியாக தன்னை வெளிப்படுத்துவது. சமூகத் தடைகள் மிக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் இக்குரல் ஆழ்ந்த கவனிப்பிற்குரியது. பர்தாக்களை விலத்தி நிமிரும் குரலாக வெளிப்படுகின்றது.

      அரசி கவிதையின் இன்னொரு ஆக்கப் பிரதியாகவே’நான் பெண்’ என்னும் கவிதையுள்ளது. இது பெண்ணை இயற்கையின் பேருருவாக காண்கின்றது.

                            ஒரு கட்டாறு   

                            ஒரு பேரருவி 

            ஓர் ஆழக்கடல்

            ஓர் அடைமழை

            நீர் நான்

            கரும் பாறை மலை

            பசும் வயல் வெளி

            ஒருவிதை

            ஒரு காடு

            நிலம் நான்

            நானே ஆகாயம்

            நானே அண்டம்

            எனக்கென்ன எல்லைகள்

            நான் இயற்கை

            நான் பெண்’

                        (நான் பெண்)

 

      இக்கவிதையில் இயற்கையின் அனைத்து வடிவமாகவும் அனார், பெண்ணைக் காண்கிறார். மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியா புதிர் நிரம்பிய இயற்கையாக பெண்ணை பரிமாணம் கொள்ள வைக்கின்றார். இப்பரிமாணம் பெண், உலகின் உள்முகச் சக்தியாக எப்போதும் விளங்கும் விதத்தை கொள்வதாக அமைகின்றது.

      இத்தொகுப்பிலுள்ள ‘மேலும் சில இரத்தக் குறிப்புக்கள்’ என்ற கவிதை ஏனைய கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றது. பிற கவிதைகளிற் பலவும் ஆண், பெண் எதிர்பால் உறவு நிலையை மையப்படுத்தியேயுள்ளன. ஆனால், இக்கவிதை தாய்மையின் அடித்தளத்திலிருந்து வளர்ந்து கோபுரமாகின்றது. வன்முறைகளின் வடுக்களை மானிடப் பெருந்துயராகக் காட்டுகின்றது. 

      கவிதையின் ஆரம்பவரி பெண்ணின் உடலியல் இயற்கையாக இருக்கும் மாதவிடாய் பற்றிய இயல்போடு தொடங்குகின்றது. மாதந்தோறும் குருதி காண்கின்ற போதும் குழந்தையின் விரலில் குருதி காணும் போது ஏற்படும் அதிர்ச்சியையும் வலியையும் தாங்கமுடியாத தாய்மையின் உணர்வு நிலையிலிருந்து காட்டுகின்ற போதும், இந்த உணர்வு நிலை தன்குழந்தை என்னும் நிலை கடந்து வன்முறையாலும் போராலும் இறக்கும், வலியுறும் உயிர்களுக்கான கருணையின் கண்ணீராகப் பீறிடுகின்றது.

      அனாரின் பிற கவிதைகளில் இல்லாத துயரத்தின் வலியும், இயலாமையின் கண்ணீரும் மனக்குலைவின் சிதறல்களாய்த் தெறிக்கின்றன.

            ‘வன்மத்தின் இரத்தவாடை

            வேட்டையின் இரத்த நெடி

            வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்

            கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்

            சாவின் தடயமாய்

            என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது’

      என முடியும் ’மேலும் சில இரத்தக்குறிப்புக்கள்’ கவிதை தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தின் சாட்சியாக நிற்கின்றது. வன்கல்வி, சித்திரவதைகள் என்றாகிவிட்ட எமது காலத்தின் முகப் பிரதிபலிப்பாக இருக்கின்றது.

      அனாரின் ‘எனக்கு கவிதை முகம்’ தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலை முன் நிறுத்துபவை. ஆண், பெண் உறவின் ஆதார ஊற்றாகக் காதலும் காமமும், தாபமும் கலந்து உருப்பெறும் கவிதைகள் என இவற்றை வரையறை செய்யமுடியும். ஆயினும் அனார் இருவகையாக தன் உணர்வுகளை காதல் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார். முதலாவது கேள்விகளோடு ஆணையும் அவனது காதலையும் எதிர்கொள்வது. இரண்டாவது, தனணுணர்வு நிலையில் குழைந்து ஆணையும் அவனது காதலையும் கேள்விகளற்று ஏற்றுக்கொள்வது. இவ்விரு தன்மைகளுடனும் வெளிப்படும் இக்கவிதைகளில் பெண்ணின் துயரையும் அவளது மறுக்க முடியா மேன்மையையும் பதிவு செய்கின்றார்.

      அனாரின் சில கவிதைகள் ஒத்த அனுபவத்தின் வேறுவிதமான சாயல்களோடுள்ளன. ஒரு கவிதையை படிக்கும் போது இன்னொரு கவிதை நினைவில் வந்து வாசிப்புக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளமை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏடுத்துக் காட்டாக தணல்நதி, வரு(ந்)த்துதல் ஆகிய இரு கவிதைகளையும் காட்டலாம். ‘தணல் நதி’ என்ற கவிதையின்

            ‘ஓர் முத்தத்தைப் பற்ற வை

            எரிந்து போகட்டும் என் உயர்க்காடு’ என்னும் வரிகளும்  

            ‘குளித்து ஆறவிடு என்னை

                              குமுறட்டும் தனிமை

            மங்கிப் போய்ச் சாகட்டும் பகல்’ என்னும் ‘வரு(ந்)த்துதல்’ கவிதையிலுள்ள வரிகளும் ஒத்த அனுபவத்தின் இருவேறான சொல்லடுக்கு முறையாகவேயுள்ளன. 

      தனிமையையும் ஆற்றாமையையும் எழுதிச் செல்லும் அனார், தன் அகநிலை அனுபவங்களின் திரட்சியாகவே தன் கவிதைகளைத் தருகின்றார். ஆவரின் கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் படிக்கும் போது வாசகனின் மனம் இன்னொரு மாற்றுப் பிரதியை கோரி நிற்கின்றது. இந்த மாற்றுப்பிரதி கவிதை சார்ந்த அனுபவமாக மட்டுமல்லாமல் வாசகனின் மனதில் எழும் கேள்விகளாகவும் உருக்கொள்கின்றது. கேள்விகளும் அதனோடு ஒட்டிய வாசிப்பு அனுபவமும் அனாரின் அக நிலைசார் அனுபவங்களுக்கு அப்பாலாக விரிந்து கிடக்கும் துயரங்களிலும் வலிகளிலும் தொங்கிக் கிடக்கின்றன. 

      மொத்தமாக முப்பத்து மூன்று கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை காதல் கவிதைகள் என பெருங்கூறாகவும், பெண்ணியப்பொருள்சார் கவிதைகளாகவும், வாழ்வியல்சார் இருப்பைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் எனவும் வகையீடு செய்ய முடியும். காதல் கவிதைகளிலும் பெண்ணியச் சிந்தனை உள்வாங்கப்பட்டுள்ள போதும், நான் பெண், அரசி, பெண்பலி போன்ற கவிதைகள் தனித்துவமானவை, நுண்ணாய்வுக்குட்படுத்த வேண்டிய இக்கவிதைகள் பெண்ணுடலின் மீதான ஆக்கிரமிப்பை கேள்விக்குட்படுத்துகின்றன. பெண்ணின் சுயாதீன இருப்;புக்காகக் குரல் எழுப்புகின்றன.

      ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’, ‘எட்டமுடியாத அண்மை’, ‘வெயிலின் நிறம் தனிமை’, ‘கோமாளியின் கேலிப் பாத்திரம்’, ‘மாற்ற முடியாத வலி’, ‘வெறித்தபடி இருக்கும் கனவு’, ‘பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி’ போன்ற கவிதைகள் பாடுபொருளின் வேறுபாடுகள் காரணமாக தனித்துத் தெரியும் கவிதைகளாகும்.

‘எனக்கு கவிதைமுகம்’ தொகுதி அனாரின் கவிதா ஆளுமையை வெளிப்படுத்துன்கின்றது. சொற்தேர்விலும் படிமப்படுத்துதலிலும் அவருக்குள்ள தேர்ச்சியையும் நுண்ணுணர்வையும் அறியமுடிகின்றது. முன்னுரையில் சேரன் குறிப்பிடுவது போல’ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கின்றார் அனார்’, என்பது கவனிப்புக்குரிய கூற்றாகவேயுள்ளது.

Pin It