அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்!

'............', ம்.... ஆமா, ஓம்-ஓம்! ம்.....

இது?

(1)

கடந்த நூற்றாண்டினதும், இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது. இரண்டுவிதமான உணர்வுகளோடு (ஈழத்தை ஆதாரித்தும், எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத் தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும். இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை. இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடர்ச்சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக் கொள்கிறேன்! இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது. அங்ஙனம் முயன்றால் நிச்சயம் என் கால்கள் சிதறிவிடுதல் தடுக்க முடியாது. எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல் 'ம்' சொல்லும் சோபா சக்தியேதாம்.

இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி, அந்த உளவியலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகர்கள்- என்னிடத்தில் அந்தக் கற்பனை கிடையாது. ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன். எனது வாழ்வும், சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்தக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.

இந்நாவல் குறித்தான மதிப்பீடு, விமர்சனம் என்பதற்கப்பால்-எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்துகொள்வதற்கான நகர்வாகவும், இந்த நாவலை- 'ம்' என்ற, இந்த நாவலை, மிக உன்னதத்தோடு உருவகப்படுத்திக் கொள்வதற்கு ஒருவர் முனைவாரென்றால், இந்த உருவகப்படுத்தலோடு 'ம்' நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார். அப்போ இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அநுபவங்களைச் சுட்டிகளாகக் குறியீடாக விரித்துக் கொள்கின்றன. மனித வாழ்வு, அநுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்கஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது. இந்தப்பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளையுடையது. இது மனிதப் படைப்பாளுமையை வேண்டி அதனூடாக நடந்து செல்கின்றபோது, மிக ஆரோக்கியமான மனித, சமுதாயத்தின் வளர்ச்சியையும்-பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது.

இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து, அது ஏதோவொரு கோசத்துக்காக அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக-குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமை மிக்கவர்களுக்காக, ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக-அவர்களது இருப்புக்காக, எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொல்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிகவுண்மையாக, யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது.

இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக் கொடுமையை, துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை, சமூகச் சிதறலை- சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக, நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை, அதன் நிசத் தன்மையோடு, குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை, தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை, அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் 'ம்'இனது மனிதக் கோசமாகவும், கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.

இந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது!'............'கலைத்துவம் என்பதன் பொருள்?... ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்துக் கொண்டால், நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும். இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும். ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான 'விவாதமாக- கருத்தாடலாக- பெருங்கதையாடலாக எடுத்துக்கொள்தல், அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு (சமூகமாற்றுக்கு) விவாதத்தை நகர்த்தும் என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்து முதல்வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல், அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ- அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான 'பண்பு' மாற்றத்தைக் கோரி நிற்கும்! நாமெதை நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ-அது மற்றவர்களுக்கு மிக, மிக முக்கியமாக விரிவது, வெறும் அறிவு, உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடையமாகக் கொள்ள முடியாது. இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும். இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு கோணத்தில் இந்த நாவலை அணுகப் போகிறோம்.

இந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியலாள ஆய்வாளர்களால், இயக்க-தேசிவாத மாயைக்குட்பட்ட வாசகர்களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ, இலக்கிய விஞ்ஞானத் தன்மையைப் புரியாத கையாலாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே. இங்ஙனம் நமது அரசியல் கையாலாகத்தனத்தை மூடி மறைக்க முனையும் நாம் இவ் வலுப்பெற்ற உணர்வு வெளியைத்தாண்ட முனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப் புரிதல் அவசியம்.


(2)


இதுவொரு வதையைத் தரும் காலம். மனிதர்களின் வாழ்வானது புனைவுகளுக்குள் சிக்குண்டு, புனைவுகளையே வாழ்வாய் வாழ்ந்து துய்க்கும் நிலையாக இன்றைய 21ஆம் நூற்றாண்டை உலகம் தயாரித்தாகிவிட்டது. இந்தப் பொய்யுலகானது மனித உறவுகளைத் தனது பெருவர்த்தகப் பயன்பாட்டுக்கான சங்கதிகளாக்கியபின் எந்தவொரு படைப்புச் சூழலும் மனதர்களை நோக்கிய-மையப்படுத்திய முறைமைகளில் மையங் கொள்ளாது, பொருட் குவிப்பின் வியூகத்துக்கானதாகவே உருவாகிறது. இந்தப் புள்ளியில்தாம் மனிதம் அழிகிறது! இங்கே மானிடர்களின் தேவைகளானது அதிகார மையங்களுக்குக் கட்டுப்படும்-அவற்றைச் செயல் முறைமைகளின் உளப்பூர்வமாக உள்வாங்கப்படும் நெறியாக உருவகப்படுத்தப்படுகிறது. இது சர்வ வல்லமையுள்ள கருத்தியலாக நிறுவப்பட்டுள்ளது.

இந்தவொரு மனித்துவ முடக்கமானது இதுவரை ஆரோக்கியமானதாக நம்ப வைக்கப்படுகிறது. இன்றைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனைகளும் சரி அல்லது மனிததுவத்துக்காக எழுதிக்கொள்ளும் குறிப்புக்களும் சரி மனித விகாரங்களை இன்னும் ஆழமாக்குகின்றன. இவற்றுக்கப்பால் எந்தக் கருத்தியலையும் இன்றைய ஆளும் வர்க்கங்கள் விட்டுவைக்கவில்லை. புனைவுக்கும் நிகழ்வுக்குமான தர்க்கவாத அறிவானது சமூகத்தைக் கருத்தியல் தளத்திலிருந்து தாக்குகிறது. அதன் உள்வயப்பட்ட அறிவுவாத ஐரோப்பிய எதிர்ப்பியக்கக் கூறுகள்கூட தமதுவரையில் சில ஆத்மீகத் தேவைகளைக் கோரிக்கையோடும், கொடிபிடித்தலுடன் பெறத் துடிக்கின்ற இந்தச் சூழலின் ஒரு முனையில் 'ம்' நாவலோடு சோபா சக்தி இந்த உலகத்தை எதிர்கொள்ள முனைகிறார்.


ஈழத்தின் அரசியலையும், மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக் கருத முடியாது. இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள். இதன் முதுகினிலிருந்துகொண்டு மனிதவதைகள் குறித்து ஒரு சராசரி மனிதன் தன் அகம் திறந்து பேசுகிறான். இவனிடம் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவையொருவர் தேடுவாரானால் தேடுபவரின் கோட்பாட்டறிவே சந்தேகமானது. இங்கு படைப்பென்பது அராஜகத்துக்கெதிரானவொரு போர்ப்பரணியைக் கட்டி நிற்க்கவில்லை. மாறாக அராஜகத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையைச் சொல்கிறது. தான் உயிர்வாழ்வதற்காகத் தன் நண்பனை, தன் எதிரியை, உறவுகளை அராஜகத்துக்குக் காட்டிக் கொடுக்கும் உயிர்த்திருக்க முனையும் ஒருவனும், எந்தத் தலையுருண்டாலென்ன தனது நலத்துக்காக அனைத்தையும் வளைத்துப்போட முனையும் தந்தையும் ,தமிழ் மக்களின் வாழ்வில் தனிநாடொன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிட்டுமென்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடமைகளை மட்டுமல்ல சரீரப் பங்களிப்புக் கூடச்செய்யும் பேராற்றலை ஞானசீலியாக் காணுவதும்-அதற்காகச் சிறை வாழ்வு, பாலியல் வதை, சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூக சீவியத்தை மக்கள் எதிர்கொண்டேயாகவேண்டிய அரசியற் பொருளியற் சூழலையுருவாக்கிய கட்சி அரசியலையும் அதன் பின்னாலுள்ள வர்க்க அரசியலையும், நலனையும் இதனூடாகத் தோன்றிய ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது பல்வேறுபட்ட அரச-ஆதிக்க ஜந்திரகளாகி மக்களைக் கொல்லும் இழி நிலையைச் சொல்லும் ஒரு பிரதியாகிறது 'ம்'.

இது மக்களின் கையலாக மொழி, மக்களின் பெருவிருப்பான உயிர்த்திருத்தலே இல்லாது ஒழிக்கப்பட்டவொரு சூழலில் மக்கள் அதற்காக இரந்து நிற்கும் இன்றைய அவலத்தைச் சொல்வதற்கானவொரு முனைப்பில் நிகழ்வுகளைப் புனைவதானது தன்னளவில் சமூகத்தின் வழிப்புணர்வோடு மேலெழும் சமுதாய ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.

மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது. இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம். இது இஸ்லாமியர்களாவிருந்தால் தமிழருக்குத் தொப்பி பிரட்டிகளாகவும்- தமிழர்களாகவிருந்தால் சிங்களருக்கு பறத்தமிழன் என்பதுமாய் இனத்துவேசிப்பு கொலுவாச்சி இனங்களை முட்டிமோத வைக்கும் நிலவுடமைக் கருத்துருவாக்கமாக விரிந்துகிடக்கிறது.

மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை, அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது. இதைச் சோபா சக்தி மிகத் தெளிவாகத் தனது நாவலில் பாத்திரங்களின் வெளிகளில் நிறுவ முனைகிறார். பக்கிரிக்கும், நேசகுமாருக்குமான ஒவ்வொரு உரையாடலும் இதைச் சுட்டிக்கொள்கிறது. இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது. தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக் காக்கவும், வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சார மட்டத்தில் நிறுவுகிறது.

இதுவே பாரிய மனித வதைகளைக் கற்பனைக் கெட்டாத வன்கொடுமைகளுடாய்ச் செய்து முடிக்கிறது. இது இரண்டாவது மகாயுத்தத்தில் ஹிட்லரால் செய்யப்பட்டபோக்கோடு சம்பந்தப்பட்டது. இங்கு எல்லோருமே சிறையதிகாரி உடுகம் பொல போலவே வதைகளைச் செய்கிறார்கள். இவர்களது பார்வையில் கட்சியமைப்பு-தாம் விரும்பும், மதிக்கும் தலைவர்-தலைமைக்காக-விசுவாசத்துக்காக எந்தக் கொலைகளையும், எதன்பொருட்டும் செய்யத் தயார்படுத்தப் பட்டுள்ளார்கள். இங்கு மனிதம் தரையில் குற்றுயுராய்க் கிடக்கிறது. 'ம்' அதைப் பாரிய சோகத்தோடு சொல்ல முனைகிறது. இதுதாம் இன்றைய இடர்மிகு நமது மொழியாக சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கீழ் நிலவுகிறது. இதையெந்த விடுதலை, உரிமைக் கோசத்தாலும் மறைத்துவிடத் துடிக்கும் தமிழ்த் தரகு முதலாளியம் தன்னைக் கொலைக்காரப் படையாக விருத்திக்கிட்டுச் செல்கிறது. இது தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் தனது கையிலெடுத்து வைத்திருக்கிறது. மக்களின் அன்றாட சமூக இயக்கத்தையே அது கட்டுப்படுத்துகின்ற வல்லமையை ஆயுதத்துக்கூடாக நிறுவியுள்ளது. இங்கு பெயரளவிலான பூர்ச்சுவா ஜனநாயத் தன்மைகூட இல்லாதொழிக்கப் பட்டு அராஜகத்தை அவசியமான போராட்ட வியூகமாக் கருத்தியற்றளத்தில் பரப்புரையாக்கப்படுகிறது. இதைத் தகர்க்கும் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுப்பதே சோபா சக்தியின் படைப்பாளுமையாகவும் இருக்கலாம்!

வெலிக்கடைச் சிறையில் வருத்தப்பட்டுக் கொல்லப்பட்டவுயிர்களும் அதன்பின்பு தாய்மண்ணிலேயே குதறப்படும் உயிர்களும் தமிழ் பேசுவதால் மட்டுமே கொல்லப்படுவதாக் கருதினால் அது தப்பானது. இங்கு ஒவ்வொரு குழுவினது நலன்களும் முட்டிமோதிக்கொள்கிறது. இந்த முரண்பாடுதாம் தரகு முதலாளியத்துக்கும், நிலவுடமைச் சமுதாயத்துக்குமான முரண்பாடாக வெளிப்படுகிறது. சிங்களச் சமுதாயமானது நிலவுடமைச் சமுதாயக் கட்டுப்கோப்பைப் பேண முனைவதும், தமிழ்ச் சமுதாயமானது தரகு முதலாளியமாகத் தன்னைத் தகவமைத்துக் கப்பல் கட்டுவதும், கடல்கடந்து வியாபாரஞ் செய்வதும் இலங்கை மக்களினங்களில் மிகப் பெரும் முரண்பாடாகத் தோற்றமுறுகிறது. இதுவே இனப் படுகொலைகளைச் செய்வதும் அதனுடாகத் தமிழ் மக்களை வருத்தும் ஆயுதக் குழுக்களாகத் தமிழ்ச் சமூகத்தில் வேறொரு வகையில் தோற்றமுறுகிறது!

மனிதர்களைத் தினமும் வருத்துவதையும், அவர்களின் மனச் சிதைப்புகளையும், தீராத சோகத்தையும், வேதனைகளையும், வடுக்களையும் சொல்வதற்காகச் சோபா சக்தி எடுத்துக்கொண்ட சொல்நெறி மொழியானது மிகவும் பின் தங்கப்பட்டவொரு இனத்தின் மொழி. அது நிகழ்வுக்கும், புனைவுக்குமான நிஷத்தன்மைகளைத் தர்க்கத்துக்குள் இழந்து போகும் ஒரு மொழியாக மாறாலாம். எனினும் இந்த நெட்டூரங்கள் அடித்துச் செல்ல முடியாத உண்மைகள். இவை குறித்தான சமூகப் பார்வையான இன்னொரு மொழியில் பேசப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இந்தச் சமூகத்துள் இதுவரை வெளிவராதிருக்கும் ஒரு சூழலில் இந்த நாவலது மொழி அவசித்தோடான அவதாரமாகவே உருப்பெறுகிறது. இதை மீறியவொரு எந்தக் கொம்பு முளைத்த மொழியும், படைப்பும் தமிழ்ச் சூழலில் முகிழ்க்க முடியாது. இது அந்தச் சமூதாயத்தில் விருத்தியிலிருந்தே எழுகிறது. இங்கு பாத்திரங்கள் சுதந்திரமாக உலா வருவதற்காகப் பொய்யுருவாகவில்லை. நிலவுகின்ற மகாக் கொடுமையான வாழ்சூழலிருந்தே பாத்திரங்கள் நம்முன் விரிகிறார்கள்.

அவர்கள் நம்மோடு தமது வாழ்வின் கையாலாக சமூக இருப்பைத் தமது சொந்த முகங்களோடு சொல்கிறார்கள். இங்கு ஜேர்மனியப் படைப்பாளி குன்ரர் கிராஸ் அவர்களின் சமீபத்து நாவல் நல்லதொரு உதாரணமாகக் கொள்ளலாம். உலகமகா யுத்தத்தால் அள்ளுண்டுபோன பாசிசச்சூழலுக்கு முகங் கொடுக்க முடியாத மக்கள் உயிர்வாழப் போராடும் கப்பல் பயணமானது கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட வரலாறை அதன் மொழியில் சொல்லும் அந்தப் படைப்பானது 'ம்' நாவல் பேசும் மொழியுடன் நெருங்கிவருகிறது.

(3)

கொடுமைகளைச் சுமக்கும் மனிதர்கள் தமது வலியை, வேதனையைச் சொல்லத்தக்க நேரம் சில வேளைகளில் பின்தள்ளிப் போவதும் அந்த வலியைச் சிலவேளை அடுத்த தலைமுறைதாம் பேசும் நிலையும் வருவதைக் காணுவதற்கு திரு.குன்ரர் கிராசினது கூற்றுச் சரியாகவிருக்கிறது. ஒரு தலைமுறை மிகக்கொடூரமாக யுத்தஞ்செய்து தனது இனத்தையே அழிக்கிறது. அதனால் அந்த இனத்து மக்கள் கடல் கடந்து உயிர் தப்ப முனைகையிலும் அழிவு அவர்கள் தலையில் குண்டுகளாக இறங்குகிறது! ஓ ஆண்டவனே! நம் தலைவிதியைப் பார்த்தியா? இப்படிக் கத்திய அந்த வலி, மரணத்தையும் கொடூரமான மொழியில் சொல்ல வக்கற்றுக் கடலோடு அமிழ்ந்து போகிறது. 'இந்த வலி கிராசிடம் தோற்றுவித்த மர்மமானவுணர்வானது தாய்மையின் உணர்வுபோன்று மீளவும், மீளவும்' நீரின் மீது எழுந்த கூக்குரலை-அன்றெழுந்த மரணவோலம், அன்று ஓலமிடமுடியாத... உண்மையென்பதை மூன்று வரிகளுக்குள் அடக்க முடியாத சிரமத்ததை... வார்த்தைகளின் இயலாமையை உணரும் அவர், மனித அவலத்தை இன்று சொல்லும்போது - கிராசினால் வலியோடு அவ்வோலம் படைப்புக்குள் வந்து சேரும்போது - நமது நாளாந்த இந்த ஓலத்தை, மரணவோலத்தை 'ம்'க்குள் சோபா சக்தி பேசுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. இது அக்கறைக்காகவோ அல்லது சமூகத்தைக் காத்துவரும் மேய்ப்பனர்களாகவோ சொல்லப்படவில்லை. மக்களின் அதிகாரமற்ற, எந்த வலுவுமற்ற பலவீனத்தை அதன் மொழியிலேயே பேசுவதுதாம் 'ம்'!

'ஆனையிறகிலும் பனாக்கொடையிலும் பெரியவன்தாம் அடிப்பான், இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான். இதைதாம் சுவாமி 'அதிகாரத்தைப் பரவலாக்குவது!' என்று சொல்வது. இப்படிப் பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடிவிட்டார்.' -பக்கம் 154-'ம்'

'மாதா (ராதா) தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப் போனான். பக்கிரி 'பக்கிங் வெப்பொன்ஸ்' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலைத் தன் கையால் பற்றி மெல்லப் புறத்தே தள்ளிவிட்டார். எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்து அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள். 'பக்கம்:158-'ம்'

என்னயிது? வெலிக்கடையில் நம்மைக் கொன்றொழித்தார்கள். கண்களைத் தோண்டி ஊரவிட்டார்கள், கைகளைத் தறித்து எறிந்தார்கள். வயிற்றைக் கிழித்துக் குடலால் மாலை அணிவித்தார்கள். இவர்கள் சிங்கள இனவெறியர். ஆண்டாண்டு நம்மைக் கொல்வதால்தாம் நாம் உயிர்த்திருப்பதற்காகப் போராடப் போனோம். ஆனால் சிங்கள இனவாதிகளைப் போலத்தானே தமிழனும் காரியமாற்றுகிறான். பக்கிரியையும் மற்றவர்களையும் நாம் வெலிக்கடையில் பறி கொடுக்கவில்லை. மாறாகத் தாயகத்தின் மடியில்- தமிழிச்சியின் மடியில் பறிகொடுத்தோம்.

இது என்ன?,இதன் நோக்கமென்ன??

சிங்கள அரசின் காட்டுமிராண்டிப் படுகொலைகளால் சிதைவுற்ற அதே தமிழ் உடல்கள்- தமிழ் அராஜகத்தால் அதற்குக் கொஞ்சமும் குறையாது அதே பாணியில் அழிந்தன, சிதைந்தன! அப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை. அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது. அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்!, எதன் பெயராலும்.

இங்கு, மனித இருப்புக்கும் இன்றைய நவீன பல்தேசியக் கம்பனிகளின் அரசியலுக்குமுள்ள பல்வேறு வகையான கண்ணிகளையிந்த 'ம்' நாவல் ஆராய்கிறது. 71 இல் ஜே.வி.பி. சிறையிலிருந்து மாவோவினைப் படித்துக் கொண்டிருக்க- மாவோவின் ஆயுதங்கள் வெளியில் சிறைக்காவலாளிகளின் கைகளில் இருக்கிறது. அதிகாரம் எந்தத் திசையிலிருந்தாலும் அது தனது வியாபகமான ஆற்றலை இந்தப் பூமிப்பந்தின் அனைத்துப் பாகத்திலும் படரவிட்டுள்ளது. அது உடுகம் பொலயாக, மாதா (ராதா), ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் (ஞானப்பிரகாசம்) போன்று உலகெல்லாம் விரிந்து கிடக்கிறது. இங்கே மக்களின் மொழி 'ம்' ஆகிவிடுகிறது. இது ஒருவகையில் சர்வதேச மொழியும்கூட.

உடுகம் பொல: சிங்கள இனவாத சிறையதிகாரி!

மாதா: தமிழீழ விடுதலைப் போராளி!

ஜெயக்குமார்: சிங்கள அரசின் தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!

இவர்களுக்கிடையில் வித்தியாசம் மனிதவுணர்வுகளுள்கூட இல்லை! இவர்கள் அதிகாரத்தைச் சுவைக்கும் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியள்.

தனி மனிதனை விடுவிக்கும் நோக்கமானது இன்று மலினப்பட்டுக்கிடக்கிறது. அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து இந்த மனிதனை எங்ஙனம் காத்து விடுவிப்பது? இதுதாம் 'ம்' நாவலூடாக வியாபித்திருக்கும் பிரச்சனை. இதை நோக்கமாகவும்- கருவாகவும் எடுத்துக்கொண்டு இவ் நாவல் முன்வைக்கும், நம் விழிகள் முன் விரியவிடும் கதை மாந்தர்கள் அனைவருமே நம்மிலொருவராக எழுகிறார். இந்த எழுச்சி நம் உணர்வில் தெறித்து உதிர்ந்து விடாது நம் மன வெளியெங்கும் அலையலையாய் எண்ணங்களை உருவாக்கி நம்மில் கலக்கிறது. நாம் நமது இயலாமையைக் கண்டு அஞ்சுகிறோம். அஞ்சுவதூடாக நமது கையறு நிலையை உணர்வு பூர்வமாக உள்வாங்கி ஆவேசமடைவதில் இந்த நிலை மிகப் பெரும் மனித எழுச்சியைத் தோற்றுவிக்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் எவ்வளவு நாணயத்தோடு நம்மோடு உறவாடுகிறதோ அதே உண்மையோடு 'ம்' நாவல் தன் மொழியை எங்களோடு பகிர்கிறது. இதை நமது- ஈழ மக்களின் அநுப வெளிதாண்டிய அநுபவத்தால் ஒருபோதும் புரியமுடியாத சிக்கலை நாம் அறிகிறோம்.

நாவலின் இறுதிப் பக்கத்தில் ஒரு கிழவன் ஒரு பிரேதத்தைக் (தமிழீழக்கோசம்?) கண்டெடுத்து, அதைக் குழந்தைகளுக்கு (இளைஞர்களுக்கு?) விளையாட்டுக் காட்டுகிறான். பின்பு தான் வளர்க்கும் மிருகங்களுக்குப் (தம்பிமார்களுக்கு?) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான். பிரேதம் (ஈழம்) இப்போது சிறுக்கிறது, தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான் (யாருதாம் இந்தக் கிழவன்? செல்வநாயகம்?). பின்பு கிழவன் மதுக் கடையில் இருக்கிறான். குதிரை வண்டி, நோஞ்சான் குதிரை, மிகப் பெரும் பொதி...(பொதியைப் புரிகிறோமோ?) குதிரைக்காகக் (இது எதன் குறியீடு? கூட்டணி??) கிழவன் அழுகிறான். குதிரையின் எஜமானிடம் (இந்தியா, இலங்கை அரசுகள்) குதிரைக்காக அடிவாங்கி மனம் பிறழ்கிறது கிழவனுக்கு.

இந்த நாவல் முன்வைத்திருக்கும் 'மனித அவலம்' அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம். இதுவே முழுமையாகிவிடாது. இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது. 'ம்' எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும், படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது. இதை விளங்கிக்கொள்வதும் அதனூடாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும். இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.

கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை. மாறாகத் தன் ஆயுதமானது 'அவலத்தின்' உட்சுற்றில் நிகழும், உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது. இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான். நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ- அதிகாரமோ இங்கு கோலாச்சாது, மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது! இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத் தாக்கி விடுகிறது. இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது- தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது. இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையா அல்லது இவற்றைக் கடந்து தர்க்கத்தின் தோல்வியா? இதை வரலாறே தீர்மானிக்கும்! அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:

(நிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தேடுதல்... பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் - அதன் பின் தன்னையே காரணமாக்கும் நேசகுமாரன். இங்கு இந்த நாவல், செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில் நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை- அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல முடியாதென்கிறது.)

ஆம்! ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல முடியும்? ஈனத்தனத்தையும், மரணவோலத்தையும், தியாகத்தையும், துரோகத்தையும் தமிழீழ மகளைத் தவிர எவரால்தாம் சொல்ல முடியும்? அவளின் மடியில் தவழ்ந்து அவளையே 'கற்பழித்துக்'கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக் காரணமாகிறோம். நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான். அவனைக் கொண்டுபோய்ச் சாத்துகிற 'சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங்' எப்போது இந்தக் கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது?

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால், ஜேர்மனி.

ப.வி.ஸ்ரீரங்கன்

Pin It