( ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை –அண்டனூர் சுரா சிறுகதைகள். 208 பக்கங்கள், விலை ரூ180. இருவாட்சி வெளியீடு, சென்னை )

oru nadodi kalainganஅண்டனூர் சுராவின் இத்தொகுப்பின் பொதுவான அம்சமாக விசாரணை அல்லது உரையாடல் என்பதாய் பெரும்பான்மையான கதைகள் அமைந்திருக்கின்றன. இது தீவிரமான வகையில் அரசியல் தளத்தில் இயங்குகிறது என்பது முக்கியம். அந்த வகையில்தான் நாடோடிக்கலைஞனோ, வாச்சாத்திப் பெண்ணோ தென்படுகிறார்கள், தங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பள்ளி ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளுடன் பழகுபவர் சுரா. அதனால் குழந்தைகளின் உலகத்தைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். யானை கதையில் அப்பா யானை சத்தம் போடுது என்கிறார். குழந்தையோ பிளிறுது என்று நுணுக்கமாய் சொல்கிறது. இது மரம், பறவை பற்றிய குறிப்புகளில் கூட நுண்ணிய தன்மை தென்படச் செய்கிறது. பன்றியை விற்கிற தகப்பனிடம் குழந்தை கேட்கும் கேள்வி அதிர வைப்பதுதான். பாரதி செல்லம்மா, மனைவியைப் பற்றி எழுதாமல் கண்ணம்மா என்ற கற்பனைக் காதலி பற்றி பாடியிருப்பது பற்றிய அவருடனான விசாரணை, படைப்பு எந்த தளத்தில் யதார்த்தச் சுழலோடு இயங்கலாம் என்பதைச் சுட்டுகிறது.

இலங்கை அகதியின் உயிர்பிழைக்கும் ஆசை, குழந்தையின் வாயைப் பொத்துவது மீறி மூக்கையும் பொத்தி விடுகிற அவலம். கல்வித்துறை சார்ந்த வன்முறை எனபதையும் இவர் தொடாமலில்லை. இந்த வன்முறையைச் செய்யும் அதிகார வர்க்கம் எடுக்கும் மாயா ஜாலங்கள் விதவிதமானவை. நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தில் கரி பூசப்படுகிற தன்மையில் ஆளை சிறைக்கம்பிகளுக்குள் மாற்றி விடுகிற ஜாலம் பயமளிக்கிறது. இந்த அதிகாரம் வெளிநாட்டின் நிறுவனம் ஒன்றின் வேலை நேர்முகத்தில் எல்லா முகங்களையும் காட்டி விடுகிறது.

லெக்கின்ஸ் பற்றிய எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அது கல்லூரி ஏழைப்பெண்ணிற்கு சுடிதாரைவிட விலை குறைவானது என்பதால் பிடித்தமாகி இருந்தாலும் சிக்கலை உண்டுபண்ணுகிறது. பசு பற்றிய சர்ச்சைகளில் சுவரொட்டி சாப்பிடும் ஒரு பசு பலியாவது உச்சபட்ச துயரம். இந்த வகைத் துயரங்கள் சற்று மிகைப்படுத்துலுடன் சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. உப்பு கதையில் கூட பல்வேறு அரசியல் விமர்சனங்களை நாசூக்காகச் சொல்கிறார். சீனப்பட்டாசு பற்றிய கதையை அந்த வகையில் சொல்கிறார்.

சென்னை மொழியை லாவகமாகக் கையாள்கிறவர் வேற்று நாட்டுப் பிரச்சினைகளைக் கையாண்டு, பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று அதில் தன் எழுத்துப் பயிற்சியை நீட்டிக்கொண்டு போவது நல்ல சவால் அம்சமே.

பாடம் சொல்லும் முறைகளின் வேறுபாடு பற்றி ஒரு கதையை, பள்ளிச் சூழலில் எழுதியிருக்கிறார். கதை சொல்லும் முறைகளின் வேறுபாட்டில் இவர் அக்கறை கொண்டிருப்பதும் நல்ல விசயம். உள்தரிசன அம்சங்களில் அக்கறை கொள்ளாமல் பிரச்சினைகள் சார்ந்தே படைப்புக்களங்களை உருவாக்கியிருக்கிறார். அது ஏழைகளுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான அறமாக உயர்ந்து நிற்கிறது.

( ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – அண்டனூர் சுரா சிறுகதைகள். 208 பக்கங்கள், விலை ரூ180, இருவாட்சி வெளியீடு, சென்னை )

- சுப்ரபாரதிமணியன்

Pin It