நைரா நாவல் ( நைரா- நைஜீரிய ரூபாய் )

உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும் சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது. ( வெளியீடு : என்சிபிஎச், சென்னை பக்கங்கள் 190, ரூ 150 )

கோமணம் நாவல் (வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 120, ரூ80 )

பாதயாத்திரை என்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி . அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார். குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதிமணியனின் அனுபவங்கள்

'முறிவு' நாவல்

நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது. அல்லது அங்கேயே முடங்கி விட வேண்டியிருக்கிறது. பட்டாம்பூச்சியாக முயலாமல் க்ம்பளீப்பூச்சிகளாக முடங்குகிற பெண் தொழிலாளிகளில் ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் பெண் தொழிலாளியின் அவ்வகை மாதிரி வாழ்க்கையை முன் வைக்கிறது. சுப்ரபாரதிமணியனின்14 வது நாவல் இது. இவரின் பல நாவல்கள் பல முக்கிய இலக்கியப்பரிசுகளையும், பல மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்ட சிறப்புகளையும் கொண்டவை.பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் 75க்கு மேற்பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளன. .. இந்நாவலும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.( ரூ 90 உயிர்மை பதிப்பகம் , சென்னை )

Pin It