நான் யாரென்று என்னிடம் கேட்காதீர்கள்; என்றைக்கும்
ஒன்றுபோல் இருங்கள் என்றும் என்னிடம் மன்றாடாதீர்கள்;
இவற்றையெல்லாம் நம்முடைய அதிகாரவர்க்கத்திற்கும் நம்முடைய
போலீஸ்காரர்களிடமும் விட்டுவிடுங்கள். நம்மைக் குறித்த விவரங்களை ‘ஒழுங்காக’ அடுக்கிவைத்துக் கொள்வதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
     
        -மிகயீல் பூக்கோ.

கவிஞர் சிற்பியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘நிலவுப்பூ’ 1963-இல் வெளிவந்தது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் ஒரு சிறிதும் இடைவெளி விடாமல் ‘கவிதை’ என்கிற ‘பிசாசோடு’ கூடிக் குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே மிகப்பெரிய சாதனைதான். சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்பயாகம்(1976), மௌன மயக்கங்கள் (1982), புன்னகை பூக்கும் பூனைகள் (1982), சூரியநிழல் (1990), ஆதிரை-கவிதை நாடகம் (1992), இறகு (1996), ஒரு கிராமத்து நதி (1998), பூஜ்யங்களின் சங்கிலி (1999), பாரதி கைதி எண் 253 (2001) என்று தமிழ் இலக்கியப் பரப்பில் தன் கவிதைகளைத் தொகுப்புக்களாக விதைத்துள்ள சிற்பி, தன் கவிதைகளைக் குறித்துத் தானே இவ்வாறு பிரகடனம் செய்கிறார்.

   உயரம் குறைந்தவன் நான்
   ஆயினும் எனது
   எழுத்துக்கள் குள்ளமானவை அல்ல

கூலிக்கு அவைகள் பிறந்ததுமில்லை
   வேலிக்குள் முடங்கிக் கிடந்ததும் இல்லை

இவ்வாறு தன் கவிதையாக்கம் குறித்த பார்வை கொண்டிருக்கும் கவிஞர், தமிழ்த் திறனாய்வாளர்களை நோக்கி ‘அகோ வாரும் பிள்ளாய்’ என்று ஒரு கவிதை எழுதியுள்ளார்.

   என்னை நானே
   சிதையில் ஏற்றி
   எருவிட்டு மூடி
   மூணுதரம் சுற்றிவந்து
   எரித்துப் பார்த்து
   முடித்தாச்சு


   போடா போ! உன்
   நமத்துப் போன தீக்குச்சிகளை
   வெயிலில் காயப் போடு

வீணையை வெட்டி
   விறகாக்கு
   விரலை நறுக்கிக்
   குழம்பு வை
   இதயத்தை வற்றலாக்கு
   ஊரைக் கூப்பிட்டு
  விருந்து வை

ஒருத்தரும் வராவிட்டால்
  பந்திக்கு நீயே முந்து

இப்படிக் கவிதை எழுதியதோடு மட்டுமல்லாமல்,

 “தங்கள் சொந்தக் கோபுரங்களில் இருந்தபடியே ஒருவர் குடுமியை இன்னொருபவர் பற்றி இழுக்கும் திறனாய்வாளர்கள் மீது எனக்குள் பொங்கிய சினத்தின் ‘ஒரு சிறு பகுதிதான்’ இது. இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு நேசமும் இல்லை; பாசமும் இல்லை” என்று 1994-இல் கேரளாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பிரகடனம் செய்கிறார். பொங்கிய சினத்தின் “ஒரு சிறு பகுதிதான்” இந்தக் கவிதை. அந்தச் சிறு பகுதியே ‘நெற்றிக் கண்’ மாதிரி பாய்கிறது. சினம் முழுவதும் பாய்ந்தால்!-நினைக்கவே பயமாக இருக்கிறது. இத்தகைய ஒரு படைப்பாளியை முன்னால் வைத்துக் கொண்டு அவர் கவிதைகளைக் குறித்து நான் இங்கே திறனாய்வு செய்வது என்பது பக்கத்தில் ஒரு “தாமரைக் குளம்” இல்லாமல் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் சாகித்திய அகாடெமிக்காக, தென்மண்டலச் செயலாளர் நண்பர் பொன்னுத்துரையின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அக்னி பரீட்சையில் இறங்குகிறேன்.

 இங்கே வானம்பாடிக் கவிஞர்கள் சிற்பி உட்பட ஞானி, மேத்தா, தமிழ்நாடன் என்று பலர் வந்திருக்கின்றனர். வானம்பாடி இயக்கம் என்று இங்கே அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1971-இல் கோவையில் ‘வானம்பாடி இலக்கிய வட்டம்’ என்று தான் தொடங்கப்பட்டது. ஓர் இயக்கத்திற்கு வேண்டிய அடிப்படையான விதிமுறைகளோ, கொள்கை கோட்பாடுகளோ, நிறுவனத்திற்கான செயல் முறைகளோ, அமைப்பு முறைகளோ ஒழுங்காக உட்கார்ந்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 1971-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த நானும் ‘விலையிலாக் கவிதை மடல்’ என்ற முத்திரை மொழியோடு வந்த அந்த வானம்பாடி இதழ் ஒவ்வொன்றையும் வாசிக்கின்றவனாக இருந்திருக்கிறேன். 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்ட சூழலில் அதன் செயல்பாட்டில் அதிருப்தியுற்ற கொள்கைப் பற்றாளர் பலரும் ஏமாற்றமுற்றனர். பெருஞ்சித்தனார் போன்று சிலர் நேரடியாக ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். பலர் இடதுசாரி இயக்கத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இவ்வாறு தமிழ், தமிழ் இனம், தமிழ்த் தேசியம் முதலியவற்றோடு மார்க்சியத்தையும் இணைத்துக் கொண்ட அறிவாளிகளுக்கு, ஆளுங்கட்சியால் தாங்கள் அடைந்த ஏமாற்றத்திற்கான மாற்றீடாகத்தான் ‘வானம்பாடி இலக்கிய வட்டம்’ உருவானது. வானம்பாடி இலக்கிய வட்டத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான கனல்மைந்தனின் கணிப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் கவிஞர் சிற்பி ‘நடை’, ‘கசடதபற’ ஆகிய இதழ்களுக்கு எதிர்நிலைப்பாடாக வானம்பாடி இயக்கம் தோன்றியதாகக் குறிப்பிடுகிறார்.

  மார்க்சியத் தத்துவத்தில் தம்மை கரைத்துக் கொண்டிருந்த
  கோவைக் கவிஞர்களிடம் ஏற்கனவே கனிந்து சிவந்திருந்த
  கவிதை நெருப்பை இவ்விதழ்கள் (நடை, கசடதபற)
  கிளறிவிட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் இதன் விளைவாக
  ‘வானம்பாடி இயக்கம்’ பிறந்தது. ஞானி, புவியரசு, அக்கினி
  புத்திரன், கங்கை, ஜன.சுந்தரம், மு.மேத்தா போன்ற பலருடன்
  நானும் தீவிரமாக இவ்வியக்கத்தில் ஈடுபட்டேன். இவ்வியக்கத்தின்
  மையமாக விளங்கியவர்களில் நானும் ஒருவனானேன் (சிற்பியின்
  கட்டுரைகள், ப.539)

ஒன்று உருவாவதற்குப் பன்முகப்பட்ட காரணங்கள் நம்முடைய அறிதல் நிலையிலும் அறிதலுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் பல்வேறு தளங்களில் வினைபுரிந்திருக்கலாம் என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். அந்தக் கோணத்தில் சிற்பியின் கணிப்பிற்கும் வானம்பாடி இலக்கிய வட்டத்தின் தோற்றம் குறித்த கருத்திற்கு இடம் உண்டு. இவ்வாறு தோன்றிய வானம்பாடி இலக்கிய வட்டத்தை “இயக்கமாகப்” புனைவதற்கான சூழல் எவ்வாறு உருவானது என்பதையும் கவனிக்க வேண்டும். பி.எஸ்.இராமையா போன்றவர்கள் மணிக்கொடி பத்திரிக்கைச் சூழலை ஓர் இயக்கமாகக் கட்டமைக்க முனையும் போது, சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் சூழலை எழுத்து இயக்கமாகப் புனையும் பொழுது, வானம்பாடி இலக்கிய வட்டச் சூழலையும் இயக்கமாக வளர்த்துக் காட்ட வேண்டிய வரலாற்று நெருக்கடி ஏற்படுகிறது. வரலாறு என்பதும் கட்டமைக்கக்கூடிய ஒன்றுதான் என்பது இதிலும் புலப்படுகிறது. கூடவே தமிழர்களுக்கான வரலாறு எழுதுதல் என்பது தமிழ்ப் பிராமணர்கள் கட்டமைக்கின்ற வரலாற்றின் பக்க விளைவுகளாகவே அமைகின்றன என்பதும் உண்மையாகிறது.
 
 இவ்வாறு வானம்பாடி இயக்கத்திற்குள் வந்து சேர்ந்த சிற்பியின் கவிதைப் பயணத்தை மூன்று கட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. வானம்பாடிக்கு முந்திய காலகட்டம்

2. வானம்பாடி காலகட்டம்

3. வானம்பாடிக்குப் பிந்திய காலகட்டம்

 கவிஞர் சிற்பி வானம்பாடி இயக்கத்திற்கு வருவதற்கு முன்பே ‘நிலவுப்பூ’, ‘சிரித்த முத்துக்கள்’, ‘ஒளிப்பறவை’ ஆகிய மூன்று தொகுதிகளை வெளியிட்டு விட்டார். அக்கவிதைகள் பெரும்பாலும் அவரே கூறுவதைப் போல இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறையாகக் கற்று அந்தச் சுமையில் பிதுங்கும் ஒரு தமிழ்க் கல்வியாளரின் தொடக்க காலக் கவிதை முயற்சிகளாகும். பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் கவிதை மொழியில் மனதை நனையவிட்டுச் சுகம் கண்டவராவார் சிற்பி. இதனாலேயே மற்ற வானம்பாடிக் கவிஞர்களிடமிருந்து தனியான ஒரு கவிஞராகவம் இவர் அறியப்பட வேண்டியவராகிறார். அதாவது மற்ற வானம்பாடிக் கவிஞர்கள் தமிழ், தமிழ்த் தேசியம் , மார்க்சியம் என்ற வெளியில் பெரிதும் நடமாடுகிறவர்கள் என்றால் கவிஞர் சிற்பி அவற்றுடன் இந்திய தேசியம், காந்தியம் என்கின்ற தளத்திற்குள்ளும் நடமாடுகின்றவராக விளங்குகின்றார். வசதியான பண்ணையார் குடும்பச் சூழல், ‘ஆத்துப் பொள்ளாச்சி’ கிராமத்தில் உயர்சாதிச் சூழல், இந்தச் சூழலில் இருந்து முற்றிலும் வேறாகத் தன்னை உணர்ந்து இல்லாதவர்கள்ஃபாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, குரல் இழந்தவர்களின் குரலாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதற்கு, அவருக்குள் இந்த மரபான தமிழ் இலக்கியக் கல்விதான் வினைபுரிந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் தொடங்கிப் பாவேந்தர் பாரதிதாசன் வரைக்குமான தமிழ் இலக்கியக் கல்விக்கு இப்படி ஒரு மன அமைப்பை வடிவமைக்கிற உயிர் ஆற்றல் வற்றாமல் இருந்து கொண்டிருக்கிறது. எனவேதான் 1970-இல் வானம்பாடி இலக்கிய வட்டத்திற்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது.

 வானம்பாடி இயக்கத்திற்குள் வந்த பிறகு அவர் வெளியிட்ட நான்காவது கவிதைத் தொகுப்பு ;சர்ப்பயாகம்’ என்கிற தொகுப்பாகும். இத்தொகுப்புதான் தமிழ் இலக்கிய வெளியில் அவருக்கு ஓர் ஆழமான இடத்தை உறுதிப்படுத்தியது. புதிய உவமைகளும், உருவகங்களும், படிமங்களும், குறியீடுகளும் இத்தொகுப்பிற்குள் சர்வ சாதாரணமாக அமைந்து வாசகனுக்கு ஒரு புதிய அரசியல் கவிதை வெளியைத் திறந்துவிட்டன. சர்ப்பயாகம், நாய்க்குடை, மதுரை வீரன், மௌனத் திரை, ஞானபுரத்தின் கண்கள், சாக்கடைகள், காலைச் சுற்றும் நாய்கள், ஆப்பிரிக்காவின் இதயம் முதலிய குறியீடுகள் அத்தொகுப்பைப் படிக்கிற யாருக்குள்ளும் விதைகளாய் விழுந்து மரங்களாய் வளரும் தன்மை கொண்டவைகளாகும்.

 இத்தொகுப்பில் கதைத் கவிதைகளைப் புதுக்கவிதையில் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுத் தன் தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டார். இத்தகைய கவிதைகளில் குறிப்பிடப்பட வேண்டியவை ‘மௌன மயக்கங்கள்’ என்ற கவிதையும், ‘சிகரங்கள் பொடியாகும்’ என்ற கவிதையும் ஆகும். இந்த இரண்டு கவிதைகளுமே விளிம்புநிலை மக்களைக் கவிதையின் பாடுபொருளாக முன்னுக்கு எடுத்தவை ஆகும். ‘சிகரங்கள் பொடியாகும்’ எழுபதுகளில் உருவான தலித் கவிதை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இந்தக் கதைக் கவிதையின் சிறப்பே ஒரு தலித் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஒருத்தரின் சாதியைக் குறிப்பிட்டு அதுவும் அவர் சார்ந்த உயர்சாதியைக் கவிதைக்குள் குறிப்பிட்டுப் பாடிய துணிச்சலாகும். சாதியைச் சொல்லாமல் பொத்தம் பொதுவாகப் பாடுவதுதான் பெரும்பாலான போக்கு.

   கருவேலங்குச்சியை மென்றபடி நின்ற
   சென்னிமலைக் கவுண்டரின் பற்களுக்கு
   வயதானாலும் உறுதி குன்றவில்லை

என்று ஆதிக்க சக்தியைக் காட்சிப்படுத்தும் பாங்கும் வாசகர் மனத்தில் நின்றுவிடக்கூடியது.

   வானம்
   காயம்பட்டுக் கிடந்த விடியற்பொழுது
   அருக்காணியின்
   ஈட்டி மரச்சிற்பமேனி
   வாய்க்காலில் மூழ்கிக் கிடந்தது.

என்று கதையின் உச்சத்தை முதலில் சொல்லிப் பிறகு பின்னோக்கிக் கதையைச் சொல்லும் பாங்கு வாசகர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய உத்தி. கவுண்டரின் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் அந்தச் சக்கிலியர்கள் அவரைச் சம்பந்தியாகக் கொண்டு, அவர் மகள் காமாட்சியைப் பெண் கேட்கப் போவது போல் ஒரு கதைப் பின்னலை, ஓர் உண்மைக் கதை அடிப்படையில் அந்தக் காலத்தில், அதுவும் ஒரு கல்வியாளர் படைப்பது என்பது சாதி உணர்ச்சிமிக்கத் தமிழ்ச் சூழலில் எளிய காரியமில்லை. மேலும் பெண் கேட்டுப் போவது மட்டுமல்லாமல் சின்னான் தலைமையில் ஒரு போராட்டத்திற்குப் பூணாச்சி மலையின் அடிவாரத்தில், சுருளி ஆற்றங்கரையில் திரண்டார்கள் என்று படைப்பதும் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி பிறகு 1990-களில் கிளம்பிய தலித்துகளின் எழுச்சியை முன்கூட்டியே ய+கிப்பது போல அமைந்துள்ளது.

 இதே போன்ற ஓர் உண்மைக் கதைதான் ‘மௌன மயக்கங்கள்’ என்கிறார் சிற்பி. விளிம்புநிலையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் ஒரு விலைமகளின் கதையை, அதுவும் தனது இனிய நண்பன் ஒருவனின் அந்தரங்கமான கதையை ‘அவனும் அவளும்’ என்று சுட்டுப் பெயராலேயே பாடியிருப்பதும் ‘குரலாற்றவர்களின் குரல்தான் சிற்பியின் குரல்’ என்பது உறுதிப்படுகிறது.

 தொண்ணூறுகளுக்குப் பிறகு சிற்பியின் கவிதைப் பயணம் வேறொரு தளத்திற்குத் தாவுகிறது. எண்பதுகளில் அவர் நம்பிக் கொண்டிருந்த மார்க்சியம் உலகளவில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஒன்றிய சோவியத் ரஷ்யா சிதறியது. கம்ய+னிசத்துக்குள் ஈவிரக்கமற்று வினைபுரிந்து கொண்டிருந்த ஆணவமிக்க அதிகாரக் குரல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. உலக அரசியலில் முதலாளித்துவம் மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. உள்நாட்டு அரசியலிலும் அடிப்படைவாதிகளின் மதவாதம், மனிதாபிமானத்தை நெருப்புக்குள் பொசுக்கியது. இந்நிலையில் கவிஞர் சிற்பி தன் உள்ளொளியை நோக்கி அகமுகமாகப் பயணிக்கத் தொடங்கி விடுகிறார். இந்நிலையைச் சிற்பி கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்:

  நம் சமுதாயத்தைப் பொறுத்த அளவில், நம் பயணம்
  இருட்டிலிருந்து நள்ளிரவை நோக்கியதாக இருக்கிறது. அழிவின்
  தூதுவர்கள் வலிமை பெற்று வருகிறார்கள். தலித்துகளின் கோபம்
  அபாயமான உச்சியை எட்டி இருக்கிறது. அரசியல் நுட்பம்
  வளைந்து நசுங்கிக் கிடக்கிறது. ஒரு புறம் மத அடிப்படை
  வாதத்தின் குரல் மேலோங்கி இருக்கிறது. வரலாற்றில்
  இன்னொரு அடிமை யுகம் நோக்கிப் பொருளாதாரம்
  பயணப்பட்டிருக்கிறது. தொழில் நுட்பம் அதிர்ச்சி அலைகளை
  உருவாக்கி வருவதுடன் இயற்கை வளம் சர்வநாச விளிம்புகளை
  எட்டுமாறு தன் அரக்கப் போக்கைத் தொடங்கி இருக்கிறது.
  மனித வாழ்வின் இந்தச் சூழல்களை நிச்சயமாக ஓர் எழுத்தாளன்
  காணாமல் கண்களை மூடிக் கொள்ள முடியாது. இந்த வெறிச்
  சூழல் என்னைப் பெரிதும் பாதித்தமையால் துயர்க்கோலம் பூண்ட
  என் மனம் தனக்குள் பயணிக்கத் தொடங்கியது. உள்ளொளியை
  நாடிய என் கவிதை சற்றே அகமுகமாக மாறலாயிற்று (சிற்பியின்
  கட்டுரைகள், பக் 542-543)

 மனது முழுவதையும் மாந்தர்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, அவர்களது மேன்மைகளை, வலிகளை நிரப்பிக் கொண்ட கவிஞர் சிற்பி, இப்பொழுது மனத்தை வெறுமனே காலியாக வைத்துக் கொள்ள வேண்டுமென அவாவத் தொடங்கிவிட்டார். பறவையின் எச்சமும், மேகத்தின் மழைத் துளியும் அவருக்கு ஒன்றாகவே தோன்றத் தொடங்கிவிட்டன. இத்தகைய மனநிலையில் ‘பூஜ்யங்களின் சங்கிலி’ பிறக்கிறது. வாழ்க்கை வெறும் சூனியம், பூஜ்யம். ஆனால் அது மனிதர்களுக்குள் சங்கிலியாய்த் திரண்டு அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இவர்களுக்கு விடுதலை இல்லை. இவர்களுக்குள் “கல்லறைக்குப் போகும் மட்டும் சில்லறை தேவை” என்ற நரகமெனப்படும் நகர ஆட்டோவின் முதுகில் பொறித்த வாசகமே வேதவாக்காகப் பாய்ந்து வினைபுரிந்து கொண்டிருக்கிறது. கவிதை மனம் நைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

 “படைப்பில் தனித்தன்மையை (ழுசபைiயெடவைல) ஒரு சிறிதாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்றால் இளமைக் காலத்து நினைவுகளோடு உரத்த குரலில் மொழியாடத் தெரிந்திருக்க வேண்டும்” என்பர். கவிஞர் சிற்பி அவ்வாறு தன்னுடைய இளமைக்கால நினைவுகளோடு உரையாடிய உரையாடல்களின் தொகுப்புதான் அவருக்குச் சாகித்திய அகாடெமி பரிசு வாங்கிக் கொடுத்த ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதைத் தொகுப்பாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தன்னுடைய ‘சூரிய நிழல்’ என்ற கவிதையில்,

    யாருடைய
    நிழல் நான்?

என்று மூலத்தை நோக்கி வினாக்களோடு புறப்பட்டவர், ஒரு கிராமத்து நதியிலும் இந்த வினாக்களைக் தொடர்கிறார். தன் ஆத்துப் பொள்ளாச்சியில் ஓடும் நதியை யமுனையாகவம், கங்கையாகவும், காவிரியாகவும், தாய்ப் பாலாகவும் காணுகின்ற கவிஞர் இப்படி வினாக்களைக் கேட்கிறார்.

    எங்கிருந்து வருகிறது
    இந்த நதி!
     மலைகளின்
     மௌனம் உடைந்தா?
     முகில்களின்
     ஆடை கிழிந்தா?
     வனங்கள் பேசிய
     இரகசிங்கள் கசிந்தா?

என்று கேட்பவர் விடையும் காணுகிறார்.

     என்னிலிருந்து…
     என் அந்தரங்கங்களின்
     ஊற்றுக்கண் திறந்து
     என் மார்புகள்
     புல்லரித்து
     என் ரத்தக் குழாய்களில்
     புல்லும் பூவும் மணந்து
     என்னை முழுக்காட்டி
     என்னையே கரைத்துக் கொண்டு…
    அங்கிருந்து வருகிறது
    இந்த நதி.

ஒரு கிராமத்து நதி என்ற இந்தத் தொகுப்பு, நம்முடைய காற்றும் நீரும் இயற்கை வளமும் நம்மைப் பெற்றெடுத்த மண்ணும் சூறைபோய் கொண்டிருக்கிற நுகர்வு பண்பாட்டை தூக்கிப் பிடிக்கும் உலகமயமாதல் சூழலில் இயற்கைக்குத் திரும்பு, நம்முடைய மண்ணைக் காப்பாற்று, நம்முடைய மனிதர்களை, நம்முடைய பண்பாட்டை விட்டுவிடாதே என நமக்குள் இருந்து புறப்பட்டு வரும் ஆதிகாலத் தொன்ம மனத்தின் குரலாக எனக்குப் படுகிறது.

 கவிஞர் சிற்பி தன் கவிதைச் செயல்பாடு குறித்து இவ்வாறு ஓர் இடத்தில் பதிவு செய்கிறார்.

 சுருக்கமாகச் சொன்னால் இக்கால மனிதனின் சிக்கலைப் புரிந்து
 கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை.

என்கிறார். இக்கால மனிதப் பிரச்சினைகளோடு பிரச்சினைகளாகத் தன் கவிதைகளை இடையறாமல் எழுதி வந்திருக்கிறார் என்பது உண்மைதான். அவரின் பேருள்ளம் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய அவதானிப்பு ஒன்றை இங்கே சொல்லத் தோன்றுகிறது. பாரதியார்தான் என் குரு; பாரதிதாசன் மேல் உள்ள ஈர்ப்பு ‘பிள்ளைக் காதல்’ போன்றது என்கிறார். ஆனால் படைப்புத் தளத்தில் பார்த்தால் குருவைவிடப் பாரதிதாசனைத்தான் அதிகம் பின்பற்றியுள்ளனர். எப்படியென்றால் பாரதிதாசனைப் போலவே தன் ‘சூழல்’ குறித்துச் சிந்தித்த சிந்தனைகளைத்தான் பெரிதும் கவிதையாக்கியுள்ளார். பாரதியார் போல ஆன்மீகம், அக உலகமெனப் பயணிக்கத் தொடங்கி விட்டாலும், அகத்திலும் புறத்திலும் ‘சூழல்’ தன் மேலும், தன் வாழ்க்கை மேலும் நிகழ்த்திய கொடூரங்களை, அதர்மங்களை, அனுபவங்களை இவர் கவிதையாக்க முயலவில்லை எனப்படுகிறது. இப்படி இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. இருவரும் நிரந்தர வருமானம் தரும் ஆசிரியத் தொழில் என்கிற எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். ஆனாலும் முன்பே சொன்னது போல அந்தச் சூழலையும் வென்று கவிதை ஊற்றுக்கே அடிப்படை ஆதாரமாக இருக்கும் “அறச்சீற்றம்” கொண்ட மாமனிதராகச் சிற்பி தன்னையும் தன் கவிதைகளையும் மேன்மை நிலைக்கு உயர்த்திக் கொண்டார் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

பயன்பட்ட நூல்கள்

1. சிற்பி, சிற்பியின் கவிதை வானம், (1996), மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

2. சிற்பி, சிற்பியின் கட்டுரைகள், (1996), மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

3. சிற்பி, ஒரு கிராமத்து நதி, (1998), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி.

4. சிற்பி, பூஜ்யங்களின் சங்கிலி, (1999), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி.

5. சிற்பி, பாரதி கைதி எண் 253 (2001), அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.

6. சந்திரசேகரன்.இரா. கவிஞர் சிற்பி: கவிதை வெளி: சூரியப்பறத்தல், (2004) பாரதியார் இல்லம், கோவை.

7. பெரியசாமி.தி முதலியோர் (தொ) பனிமலர் நெஞ்சம், (1996) கோணக்காடு, சேலம்.

8. ரவீந்திரன் சி.ஆர். கோபுரத்தில் ஒரு குயில், (1996), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி.

- பேரா.க.பஞ்சாங்கம்,  புதுச்சேரி-8 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It