நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரியாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்                                                              முன்னாள் குடியரசுத் தலைவர் அ.அப்துல்கலாம் அவர்களைக் கவர்ந்த கவிதை இது. எழுதியவர் யாழி. அவர் எழுதி வெளியிட்டுள்ள தொகுப்பு 'என் கைரேகை படிந்த கல்' . சிற்றிதழ்கள் வழி வெகுவாக அறிப்பட்டவர். குறுஞ்செய்தியிலும் பயணிப்பவர்.

நாய்கள் குரைப்பது இயல்பு. புது மனிதரைக் கண்டால் குரைப்பது அதிகரிக்கும். குரைப்பொலிகள் கேட்டால் பயமே மேலெழும். குரைப்பைக் கட்டுப்படுத்துவது இயலாது. 'சமரசம்'  கவிதையை குரைப்பொலிகளை வைத்து எழுதியுள்ளார்.
ரொட்டித் துண்டு போட்டு
பழக்கப் படுத்துவதா?
கல்லெறிந்து பயமுறுத்துவதா?
புரியவில்லை
இப்போது
எல்லா இடங்களிலும் குரைப்பொலிகள்                        ரொட்டித் துண்டு போட்டு பழக்கப்படுத்துவதை விட கல்லெறிந்து பயமுறுத்துவதே சுலபம். பயமுறுத்தினாலே திரும்பிப் பாராமல் ஓடும். 'குரைப்பொலிகள் ' என்பது குறியீடாகக் கையாளப்பட்டுள்ளது.

மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது ஒரு காலம். இன்று தனிக் குடும்பத்தையே மனிதர் விரும்புகின்றனர். கூட்டாக வாழ்ந்தாலும் பல்வேறு காரணங்களால் பிரிந்தே வாழ வேண்டிய கட்டாய நிலை. விடுதியில் பிள்ளைகள். காப்பகத்தில் பெற்றோர்கள். அலுவலகத்தில் தம்பதியர்கள்.
வெறுமைகளை
குடியமர்த்திய படி வீடுகளே                                                   'இற்றைத் திங்களி'ல் என்கிறார். வீடு என்பது மனிதர்கள் வசிக்க வேண்டும். காட்சிப் பொருளாக இருக்கக் கூடாது, பொருளாதார மயத்தால் குடும்பம் சிதைவதைக் குறிப்பிடுகிறார்.

தீண்டாமை ஒரு தொடர் வியாதியாகவே சமு்கத்தில் இருக்கிறது. உலகம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் விஞ்ஞானம் எத்தகைய வளர்ச்சி பெற்றிருந்தாலும் தீண்டாமையைக் கைவிடுவதே இல்லை மக்கள் . ஆனால் தேவைக்காக தீண்டாமையைத் தளர்த்திக் கொள்கின்றனர்.
சாக்கடையின் தூர்களுக்காக
வீட்டின் உட்பூச்சுக்காக
புடைத்தெடுக்கப்படும் அரிசிக்காக
தைக்கப்படும் செருப்புகளுக்காக
சில நேரங்களில்
தள்ளி வைக்கப்படுகிறது
தீண்டாமையும்                                                             தீண்டாமையைத் தள்ளி வைப்பதைச் 'சந்தர்ப்ப வாதம்' என சாடுகிறார். 'சுய நலவாதிகள் ' என விமரிசிக்கிறார். தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். ' வர்ணம்'  கவிதையிலும் தாழ்த்தப் பட்டவர்கள் சார்பாகவே எழுதியுள்ளார்
சம பலத்துடன்
இருந்த போதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக் காய்கள்                                                              'கருப்புக் காய்' என்பது தாழ்த்தப் பட்டவர்களைக் குறிக்கிறது. சதுரங்கத்தை வைத்து அருமையாக விளையாடியுள்ளார்.

வளையத்திற்குள் புகுந்து
வெளிவர சிரமப்படுகிறது
நாட்கள்.                                                                     எனத் தொடங்கும் 'தக்க வைத்தல்'  கழைத் கூத்தாடியின் சிரமத்தை, சங்கடத்தை பேசியுள்ளது. பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளார். தட்டில் விழும் நாணயங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறார். வேடிக்கைப் பார்ப்பவர்கள் கைத் தட்டலுடன் கலைந்து போவதைக் காணும் போது வருத்தமே மேலிடுகிறது. 'அட்சய பாத்திரம்' கவிதையிலும் நாணயத்துக்காகக் காத்திருக்கும் தட்டையே காட்டியுள்ளார். 'நாணயம்'  மூலமும் ஒரு பாடகர் தட்டு ஏந்தியிருப்பதையே பாடியுள்ளார். எல்லோர் கையிலும் தட்டு இருக்கிறது. இடமே வேறு படுகிறது.  தட்டில் விழுவதை வைத்தே வாழ்க்கை நிர்ணயிக்கப் படுகிறது.

திணித்தல் என்பது தொடர்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இருப்பவர்கள் இல்லாதவர்கள் மீது திணிக்கிறனர். திணித்தல் மமூலம் ஆதிக்கமே நீடிக்கிறது.
திணிப்பை
எதிர்க்கும் பொருட்டுக்
கடித்து விடுகிறது
செருப்பு கூட
தன்னை உணர்த்தி
சில நேரங்களில்                                                                என்கிறார். செருப்புக்கு இருக்கும் 'எதிர்ப்பு' உணர்வு கூட மனிதர்களுக்கு இல்லை என்கிரறார். 'எதிர்ப்பு' உணர்வைத் தூண்டியுள்ளார்.

சாதகமாய்
பயன்படுத்தி கொள்கின்றன
காக்கையின் கூட்டை
சங்கீதத்தில்
சாதித்ததாய்க்
காட்டிக் கொள்ளும்
குயில்கள்                                                                       என்னும்
'தொனி' குறிப்பிடத்தக்கக் கவிதையாகும். ஆரியம் ஆக்கிரமிப்புச் செய்ததை அழகாக, அழுத்தமாகக் கூறியுள்ளார்.  கவிஞரின் 'தொனி'  பாராட்டுக்குரியது.

பிறர் மீது கல்லெறிந்தால் நம் மீதும் பிறர் கல்லெறியக் கூடும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது 'எதிர் வினை' . எப்போதோ , எவர் மீதோ வீசப்பட்ட கல் தற்போது தன் மீது வீசப்பட்டுள்ளது என 'எதிர் வினை' யாற்றியுள்ளார்.

ஆழ் கிணற்றின்
நீர்ப் பரப்பில் விழுந்த
உடைந்த பானையின் சில்லாய்
பயணிக்கிறது
எனதிந்த வாழ்க்கை
அறியப்பட்ட
முடிவொன்றை
முன் வைத்து                                                                     என்னும் 'பயணம்'  வாழ்க்கையைப் பற்றியதாகும். வாழ்க்கை ஒரு பயணம் என்பர். எந்த பயணத்துக்கும் முடிவுண்டு என்பது போல் வாழ்க்கையும் முடியும் என்கிறார். அதனாலே 'பயணம்'  என்றும் தலைப்பும் வைத்துள்ளார். ஒப்புமையும் நன்று.

மன்னிப்பு என்பது மிகப் பெரிய சொல். மன்னிப்பதற்கு மிகப் பெரிய குணம் வேண்டும்.  மன்னிப்பவனை மகான் என்பர். மன்னிக்கப்பட்டவன் மனிதன் ஆவான் என்பர்,. 'தண்டனை'யில் கவிஞரின் சிந்தனை வேறாக உள்ளது. மன்னிப்புத் தவறுகளையே உண்டாக்குகிறது என்கிறார்.
என்னைத்
தக்க வைத்துக் கொள்ள
கொடுத்தபடி இருக்கிறாய்
மன்னிப்புகளை
தவறுகளின்
மொத்தமாகிக் கொண்டிருக்கிறேன்
நான்                                                                    மன்னிப்பதால் மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டேயிருப்பதாக ஒப்புதல் வாக்கு மு்லம் அளித்துள்ளார். அதற்காக வருந்தியுள்ளார்.  மன்னிப்பை விட தண்டனையே மேல் என்கிறார்.

சாப்பிட்டவுடன் பசி அடங்கி விடும். செரித்தலுகளுக்கு பின் மீண்டும் பசி தொடங்கி விடும்.  பசி என்பதற்காக  கூடுதலாக சாப்பிட முடியாது.  ' காமமும்' அவ்வாறே. தொடர்ந்து கொண்டே இருக்கும்.  ' வேட்டை' யில் பசியும் காமமும் தொடரும் என்கிறார்.

மண் புழு மீனுக்கு உணவு.   மீன் மனிதனுக்கு உணவு. மனிதன் மண்ணுக்கு உணவு.  மண் மண் புழுவுக்கு உணவு. இயற்கைப் படைப்பில் ஒன்றையொன்று விழுங்கவே முயல்கிறது. உண்டே வாழ்கிறது.  அதற்காகவே காத்திருக்கிறது.
எப்பொழுது சிக்கும்
பொழுதுகளைத்
தின்று கொண்டிருக்கும்
மீன்கள்
தக்கையின் மீது
கண் வைத்து
காத்திருக்கிறேன்
நான்                                                                        காத்திருப்பதை ' கால விரயம் '  என்கிறார்.  நேரத்தை வீணாக்காமல் உழைக்க வலியுறுத்துகிறார்.  புழுவைத் தின்னாமல் பொழுதுகளை மீன்கள் தின்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்னும் சா.கந்தசாமியின் சிறுகதையை நினைவூட்டியது. ; ' ' பருவம் ' கவிதையிலும் ' கால அவகாசம்' குறித்து பேசியுள்ளார். காலத்தைக் கணக்கிட்டுச் செலவிட வேண்டும் என்கிறார்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை விட மோசமானது பதவியாசை. ' பதவி ' ஆசையில் அரசியல் வாதிகள் அநியாயச் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர்.
ஏணிகளின் கால் முறித்து
தனக்கான
நாற்காலி ஒன்றை
செய்து கொள்கிறhர்கள்                                                             என 'பதவி 'யில் விமரிசித்துள்ளர்.  ' பதவி ' வெறியர்களைச் சாடியுள்ளார்.

சாதிகள் இல்லயைடி பாப்பா என்றார் பாரதியார்.  சாதி இரண்டேயோழிய வேறில்லை என்றார் ஒளவையார். ஆனால் ஆயிரம் சாதிகள் நாட்டில் உண்டு. ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது. ஒன்றையொன்று 'ஆதிக்கம் ' செலுத்துகிறது.   'பொது மயானம்' என்கிறர்கள்.   'தனி சுடு காடு' இருக்கிறது. 'சமத்துவ புரம்' என்கிறார்கள். சாதியே முன்னிற்கிறது. 'பாரதம்'  கவிதையில் இவைகளை பொய் என்கிறார். எங்கும் சாதியே என்று விளம்பரப்படுத்தியுள்ளார். வேதனைப் பட்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் 'நான்' ஐ வைத்தே எழுதப்பட்டுள்ளன. அநேகமானவை 'நான்' இலேயே முடிகின்றன. 'நான்' என்னும் தலைப்பில் ஒரு கவிதை
அரிதாரப் பூச்சில்
நம்பிக்கை உண்டு
உங்களுக்கு எனில்
அசிங்கமாய்த்தான் தெரிவேன்
எப்போதும்
நான்                                                                     என்பதாகும்.  வேடதாரிகளை வெளிச்சப்படுத்தியுள்ளார். வேடம் கூடாது என்கிறார். காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகவே  தெரியும் என்பதைப் போலுள்ளது. நல்ல கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் நல்ல கவிதையாகாது.  ஏன் 'எனில்' எனில் என்று வரும் போது ஒரே வாக்கிமாய் ஆகி விடுகிறது. 'நான் நானாக'  தலைப்பிலும் ஒரு கவிதை. அவருக்குள்ளிருக்கும் 'நல்லவரை' அடையாளப் படுத்துகிறது.

'என் கை ரேகை படிந்த கல்' என்னும் இத்தொகுப்பு மூலம் தன் கவிதைப் பிரவேசத்தை அற்புதமாக நிகழ்த்தியுள்ளார் கவிஞர யாழி. சமூகப் பிரச்சனைகளை அவருக்கான மொழி நடையில் அழுத்தமாக பேசியுள்ளார். இயல்புக்கும் இருண்மைக்கும் இடைப்பட்டதாக உள்ளது கவி்ஞ்ரின் கவிதை மொழி. ஒரு கவிதையின் வெற்றி என்பது அதன் வெளிப்பாட்டிலேயே முக்கியமாக உள்ளது. இத்தொகுப்பிலுள்ளவை வெளிப்பாட்டில் சிறப்பாக அமைந்துள்ளன.  வாசகர்களுடன் நேரடியாக, நெருக்கமாக உரையாடும் தன்மைப் பெற்று தனித்து விளங்குகின்றன. கவிஞர்  ' யாழி' யையும் தனித்து அடையாளப்படுத்துகின்றன.  இலக்கிய உலகில் விரைவாகப் பேசப்படுவார் என்னும் நம்பிக்கையளிக்கிறது. அகத்தை முன் வைத்தே கவிஞ்ர் கவிதைகள் எழுதி இருந்தாலும் பெரும்பாலானவை 'புறம்'  பேசியுள்ளன.  சமூகத்தைச் சீர்திருத்த முயன்றுள்ளன. அநியாயங்களை அகற்ற முயன்றுள்ளன. 'என் கை ரேகை படிந்த கல்' இல் யாழியின் கையெழுத்தில் விளைந்த கவிதைகள் மட்டுமல்ல அவர் உள்ளத்தில் இருந்து விளைந்தவையாகவும் உள்ளன.

ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப் படுகிறது
இருள்                                                                என்கிறது
'வெளிச்சம்'  கவிதை.
ஒரு கவிதைத் தொகுப்பால்
வெளியேற்றப்படுகிறது
மன இருள்                                                               என்று
'வெளிச்சம்'  பாய்ச்சியுள்ளார். வெளிச்சம் தொடர வாழ்த்துக்கள்.


வெளியீடு       
தகிதா பதிப்பகம் 4-833 தீபம் பூங்கா கே.வடமதுரை கோவை  641017

Pin It