கீற்றில் தேட...


அந்த உற்பவிப்பு எல்லோருக்கும்
வாய்க்காதது
ஒரு முகிழ்த்தல் போலத்தான்
முகிழ்த்தல் என்பது எவ்வளவு அற்புதம்
பூக்கள், விதைகள் குழந்தை மனம் எண்ணம்
என்றபடிக்கு முகிழ்த்தல் அகலும்
ஒரு மௌனத்துள் ஆழ்வதும்
அதனை ஸ்பரிஸிப்பதும் ஒரு முகிழ்த்தல்தான்

ஒரு சூழலுக்குள் இயைவதும்
சூழல் எமக்குள் புகுவதும் இன்பம்
மென் புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து
சிறு குருவி நுழைவதும் மென்மை.

மனத்திடை சில நேரம் உதிர்த்தும்
மென் இழைகள், நெகிழ்வுகள் மெல்லியகாதல்
ஒரு பச்சாதாபம் எல்லாமே அற்புதம் நிகழ்த்தும்
முகிழ்த்தல்கள்.

எரியும் தீயிடை ஊனுருகுவதுமாகி
எந்த ஒப்பனையுமற்றதும்
எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும்
உள் மனதில் அது பற்றிய ரீங்காரமும்
எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்

வெண் பனியிடை மெல்லிதழ் தொடுவதாய்
உணர்வதும் எல்லாக்காலங்களும்
எல்லாப்பாதைகளும் நந்தவனத்தை நோக்கியதாய்
அமைவது போலவும் இருப்பது ஒன்றெனில்
அது..காதல் தானே..


இளைய அப்துல்லாஹ், லண்டன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)