
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!
பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!
நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!
மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!
மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!
ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை.