தாயோ தாரமோ
தந்தையோ பிள்ளையோ
ஊரோ உறவோ
யாராகினும் மனிதன்
அன்புக்கு ஏங்கிடும் ஆன்மா!

நீ
நினைத்தால்
மயிலிறகால்
மனம் வருடலாம்
ஆதரவாய்ப்பேசி
ஏக்கம் போக்கலாம்
கண்களால்
கைது செய்யலாம்
சிரித்துச்
சிறையெடுக்கலாம்
காது கொடுத்துக்
கவலை தீர்க்கலாம்
கண்டு
கொள்ளாமலும்
இருந்து விடலாம்
தள்ளி
வைத்தும்
தண்டனை தரலாம்

என்ன செய்யப்போகிறாய் நீ

ஒரு சொல் போதும்
சில்லுகளாய் உடைத்துப்போட

ஒரு பார்வை போதும்
அன்பால் கட்டிப்போட

ஒன்றும் செய்யாதிருந்தால் போதும்
உணர்வுகளைக் கொன்றுபோட

என்ன செய்யப்போகிறாய் நீ

குறைந்த பட்சம்
செலவில்லாமல் புன்சிரித்து
வரவு வைத்துக்கொள் உன் கணக்கில்!

இராம. வயிரவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It