எப்போதும் ஏதேனும்
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை,
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.

* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.

* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.

* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.

* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?

* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.

நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It