தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளருது கண்டாயா ? - அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்த்தும்
தருமதி யுரைதனை கொண்டாய?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை - அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக்கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது - தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்ந்தும் மதியுரைகாண - நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்து உரைப்பதுகாண்

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு - நீ
தொள்ளை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போது ஆய்ந்துகொடு


அகரம் அமுதா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It