அந்தப் பார்வை
எந்தப் பார்வை
என ஊருக்குத் தெரியாது

ஆனால்
உனக்குத் தெரியும்

இதயத்தை
தீப்பற்ற வைத்துவிட்டு
காதலை அதில்
குளிர்காய வைத்த
என் முதல் பார்வையைத் தான்
நான் அப்படிச் சொன்னேன்

மௌன மொழிகளின
ஊடகமான
அந்த கருப்பு வெள்ளைத் தடாகத்தின் மூலம்
எத்தனை உணர்வுகளை
என்னோடு பரிமாறி இருப்பாய்...

கண்ணடிப்புகள் முதல்
கண்டிப்புகள் வரை
உன் விழிகளில்தான்
தேய்ந்திருக்கக் கூடும்

சில வேதனைகளையும்
பல போதனைகளையும்
சாதனைகளாக்க...

உன்னை விலைக்கு வாங்கிய
என் விழிகளையும்
என்னை விலைக்கு வாங்கிய
உன் விழிகளையும்...
தத்துக் கொடுப்போம்
தான வங்கியிடம்...

பார்வையுதிர் காலத்தில்
இருக்கும்
சில விழிகளுக்கு
அது வசந்த கால
வாழ்த்து சொல்லட்டுமே!

விழிகளில் மலர்ந்த
நம் காதல்
மலர்ந்தே இருக்கட்டும்..

வாழையடி வாழையாய்
இம்மண்ணில்
நாம்
வாழ்வதற்கு அடையாளமாய்...


முத்துக்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It