Fallsவலமும் இடமும் இல்லை
வடக்கு தெற்கு இல்லை
கிழக்கு மேற்கு இல்லை

வழிந்தோடும் நீருக்கு
வழியும் திசையும் திக்கும்
மேலிருந்து கீழே தான்

அறிந்தோர் மனதிலிருந்து
அறியாதோர் நோக்கிப் பாயும்
அருவியாய் அது வீழும் கீழே

பள்ளத்தை நோக்கிப் பாயும்
உள்ளத்து எண்ண அலை போல்
துள்ளும் நீர்த்துளிகள் மின்னும்

அள்ளும் நெஞ்சை அற்புதமாய்
அது கீழ்திசை தோன்றி மேலே
அணையும் ஆதவன் சூட்டிலே

அதிசயமாய் தன் பாதை மாறும்
அது போகும் வானத்து மேகம்
அழையா விருந்தாய் புவிதிரும்பும்

அன்பில் குளிரும் மனம் போல்
அது குளிர்ந்தால் பளிங்கினால்
ஆன பனி வைரமாய் காணும்

அடுத்த நிமிடத்தில் கரையும்
அடுத்தவர் துன்பம் கண்டதும்
சடுதியில் உருகும் மனதாய்

கலங்கிய குட்டை போலும்
களங்கமான குறுகிய மனம்
கலங்கரை விளக்கம் நிற்க

பரந்து விரிந்த சமுத்திரம்
போல் திகழும் சில மனம்
அறிவால் அகிலம் காக்கும்

உப்பும்,சீனியும் நீரில் கரையும்
உயிரில் உறைந்து மறையும்
உடம்புகள் கரையும் கண்ணீரில்!


பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It