சிறுவளைவுகளில்
பெரும் மலைகள் வரையும்
கரம் வைத்திருக்கிறது காடு
*
அது துள்ளல் அல்ல அழுகை
மீண்டும் நீரில் விடுகிறான்
இப்போது நீந்தல் அல்ல நன்றி
*
அவருக்கு மட்டுமல்ல
அவர் வேஷத்துக்கும்
முள் கிரீடம்
*
இத்தனை வெயில் ஆகாது
இப்படித்தான் மழைக்கும் சொன்னோம்
இத்தனை மழை ஆகாது
*
பசி வந்தால்
வீட்டு நாய் குரைக்கும்
வீதி நாய் நிற்கும் நடக்கும் ஓடும்
*
தரை விழுந்த
இலை நிழலில்
காற்றின் குலவை
*
வளர்ந்துவிட்ட மரத்தில் காணவில்லை
வெட்டியவன் கண்களில்
தழும்பு
*
பேசப் பேச வந்த மறதியை
ஓவியமாக்கிக் காட்டுகிறான்
நாள்பட்ட சாலைவாசி
*
குட்டி நதி ஓடுகிறது
கண்கள் கசக்காமல்
அழுகிறவர் கன்னத்தில்
*
வழக்கமாக ஒளிந்து நின்று பார்ப்பான்
என நம்பிய குட்டியைத் தான்
காட்டில் விட்டு வந்திருக்கிறான்
- கவிஜி