அவள் வீட்டின் சாவியை
யாரோ எடுத்துக் கொண்டார்கள்.
அவள்
தொலையக் கொடுத்தாள்
என்றும் சொல்லலாம்.
அதன் பிறகான பொழுதுகள்
யாவிலும்
அவள் உண்ணும் நேரம்
மாறிப்போனது.
அவள்
உறங்கும் நேரம்
மாறிப் போனது.
அவளின் யாவும்
மாறிப் போனது.
அவள்
கடவுளுக்காக கவலைப்பட்டு
அவருக்கு
கணக்கற்ற வேலைகள்
இருக்கிறதென
அவரைத் தொந்தரவுகள் செய்வதை
நிறுத்திக் கொண்டாள்.
அந்தத் துளை
சிறியது தான்
சற்றேனும்
சிறிய வில்லையைக் கொண்டு
யாரேனும் நிரந்தரமாக
சீலிட ஆசைப்படுவதைக் கூட
அவள் மறந்து போனாள்.
அவளுக்குத் தெரியும்
அவள் யாரெனவும்
அவர்கள் யாரெனவும்.
தொறக்குச்சி
எத்தனை இருந்தாலென்ன
தன் வீடு
தாழிட முடியாதெனவும்
சுவாசமாக்கிக் கொண்டாள்.
- ரவி அல்லது
(தொறக்குச்சி- சாவி)