உக்கிரமான வெயில்
தேசத்தை எரிக்கிறது
நாமெல்லாம் தேசத்தில் தான் வாழ்கிறோம்
இதிகாசங்களுக்குள் தூங்குபவர்கள்
தத்துவ கோடாங்கிகளாக ஊளையிடுகிறார்கள்
வீதிகளில் வாழ்க்கை
குற்றுயிராய்க் கிடக்கிறது
ஆசைப்படு
ஆசைப்படாதே
அட போங்கடா வெத்துப்பயலுகளா
என் பசியை சொல்லத் தெரியவில்லை
எந்த வார்த்தை வெளிப்படுத்தும்
இருளுக்குள் புதைந்து கொண்டிருக்கிறேன்
கையால் மீனைப் பிடிக்கிறேன்
நழுவிப் போகிறது
பதற்றம் தொற்றிக் கொள்கிறது
அன்றாட வேதனைகளுக்கு
கவிதையைக் கொல்வேன்
நுட்பங்களை ஏந்தி
கனவுகளை மட்டும் சொல்ல மாட்டேன்
வெற்றுப் படிமங்களும்
சொற்களுமல்ல
என் மெய் தேடல் பெருவெளி
மனசைக் கீறி மாங்காய் விளை
மாங்காய் அறுத்து ஊறுகாய் பண்ணு
ஊறுகாய் தொட்டு உலகை உண்
கோப்பை காலியாயிருக்கிறது
நிரப்ப முனைகிறேன்
கோப்பை காலியாக இருக்கவே விரும்புகிறது
எல்லாம் அழகாகக் காட்சியளிக்கிறது
எல்லாம் அசிங்கமாக உறுத்துகிறது
யாவற்றையும் மனசே தீர்மானிக்கிறது
பிதாவே ஏன் கை விட்டீர்?
பிதாவே ஏன் முகம் திருப்பிக் கொண்டீர்?
பிதாவே நீர் உண்மையில்லையோ
கண நேரம் சுகம்
யுக கால இம்ஸை
க்ஷணம் யோசித்தால் ஏது துக்கம்
நெருப்பைத் தின்கிறார்கள்
காற்றைக் குடிக்கிறார்கள்
பசி என்றைக்கும் தீரவில்லை
நகரத்திற்கு வருகிறார்கள்
நகரத்திலிருந்து போகிறார்கள்
நகரம் அழுகவும் இல்லை சிரிக்கவும் இல்லை..
- வசந்ததீபன்