கீற்றில் தேட...

எல்லா சன்னல்களையும்
ஒருசேரவே அணுகுகிறது
காற்று.

வீட்டிற்கு கதவு போல
மனதிற்கு சன்னல்.

விலையுயர்ந்த மரமானாலும்
திறக்க முடிந்தால் தான் சன்னல்.

வீட்டின் சன்னல்பகுதி
செடிகளை மட்டுமல்ல
கற்பனையை வளர்க்கவும் சிறந்தது.

கதவு பெரிதானாலும்
கதவின் வழி
நுழைய முடியாத
அரிதானவை, அழகானவை
சன்னல் வழியாகத் தான் நுழைகின்றன.

மனிதர்கள் இல்லாத வீட்டிலும்,
மனிதர்களாய் இல்லாதவர் வீட்டிலும்
சன்னல்கள் மூடியே இருக்கின்றன.

சன்னல் இருந்தும் திறக்காத மூடர்
கண்கள் இருந்தும் குருடர்.

என்ன செய்வதென்று தெரியாத
பல கணங்களில்,
எல்லா சன்னல்களையும் திறந்து விடுவது
மனதிற்குச் செய்யும் முதலுதவி.

சன்னல் வழியே
உட்புகா தீர்வுகள் கிடையாது,
சன்னல் வழியே
ஓடிவிடாத பிரச்சினைகளும் கிடையாது.

திறந்த சன்னல்
தாம்பத்தியத்திற்கு அவசியம்.

நான் முதன்முறை
சன்னல் வழியாக
வெளியுலகைப் பார்த்தேன்
தந்தை கடைசிமுறையாக!!

- அ.சீனிவாசன்