கீற்றில் தேட...

தாகம்தான்
இருந்தும்
தவம் கலைக்க
விரும்பவில்லை
நீரின் முகம் பார்த்து
கடந்து விட்டான்

*
காற்றுப்புரவி
கடினப்படுத்துகிறது
நதியோரம் மேயும்
செம்மறிதான்
வரைய ஏதுவாயிருக்கிறது

*
நறுக்கென கிள்ளும்
எறும்பின் மூச்சை
மண்ணோ மரமோ
மறுப்பதில்லை

*
கூடவே பயணிக்கும்
வண்டிகள்
சாலைப் பிரிவில்
தனித் தனி
றெக்கைகளாகின்றன

*
கிளிப் பேச்சு போல
வான பூமி
இடைவெளியெங்கும்
வெளிப் பேச்சு

- கவிஜி