கீற்றில் தேட...

1. நீராபிஷேகம்

மரங்களை அழித்து,
மரங்களைக் கொண்டு கட்டிய கோவிலில் —
மழை வேண்டி,
நீராபிஷேகம்!

2. பழந்தோழி(?)

அவன்
எதையும் மறக்காதிருந்தான்.
அவள்
எல்லாவற்றையும் மறந்திருந்தாள்.

அவன்
மறந்திருந்ததையும்
ஞாபகப்படுத்திச்
சென்றாள்.

3. பசியிலும் கவிதை

வயிற்றுக்கு,
செவிக்கு,
கண்ணுக்கு —
எதற்கு உணவில்லாத போழ்தும்
ஒரு கவிதை
எழுதப்படும்!

4. மரக்காற்று

மனிதன் மீதான கோபத்தை,
மரத்தின் மீது காட்டும்
காற்றிற்குக் கொஞ்சம்
மனித புத்தி.

5. இரு(த்தும்)விழிகள்

காதலில்,
இரட்டை நிலவாய் குளிர்விக்கும்
அதே விழிகள் —
கோபத்தில்,
இரட்டை சூரியனாய்
சுடுகின்றன.

6. அனுபவத்தின் சிற்பம்

சிற்பத்தின் அழகை ஆராதிக்க
செதுக்க உதவிய உளி
தேவைப்படுவதில்லை;
ஏன்,
சிற்பியே கூட
தேவைப்படுவதில்லை.

ஆராயாதே
அனுபவி.

7. நடை-வண்டி

அதுவரை மரமாய்
நின்று கொண்டிருந்த மரம் —
செத்த பின்
நடக்க
சொல்லிக் கொடுக்கிறது!

8. முகத்தாட்சண்யம்

உனக்கென
எனக்கொரு முகம் இருப்பது —
உனைக் கண்டவுடன்தான்
தெரிந்தது!

9. பதற்றக் கவிதை

கடைசியில்
இந்தக் கவிதையைத் தாண்டி
வேறெங்கும்
நான் இருக்கப் போவதில்லை
என்றொரு பதற்றம்
ஒவ்வொரு கவிதையிலும்
இருக்கிறது.

10. தேராம்!

செத்த பின்
ஊர்சுற்றிப் பார்க்கிறது
மரம்.

- அ.சீனிவாசன்