1. நீராபிஷேகம்
மரங்களை அழித்து,
மரங்களைக் கொண்டு கட்டிய கோவிலில் —
மழை வேண்டி,
நீராபிஷேகம்!
2. பழந்தோழி(?)
அவன்
எதையும் மறக்காதிருந்தான்.
அவள்
எல்லாவற்றையும் மறந்திருந்தாள்.
அவன்
மறந்திருந்ததையும்
ஞாபகப்படுத்திச்
சென்றாள்.
3. பசியிலும் கவிதை
வயிற்றுக்கு,
செவிக்கு,
கண்ணுக்கு —
எதற்கு உணவில்லாத போழ்தும்
ஒரு கவிதை
எழுதப்படும்!
4. மரக்காற்று
மனிதன் மீதான கோபத்தை,
மரத்தின் மீது காட்டும்
காற்றிற்குக் கொஞ்சம்
மனித புத்தி.
5. இரு(த்தும்)விழிகள்
காதலில்,
இரட்டை நிலவாய் குளிர்விக்கும்
அதே விழிகள் —
கோபத்தில்,
இரட்டை சூரியனாய்
சுடுகின்றன.
6. அனுபவத்தின் சிற்பம்
சிற்பத்தின் அழகை ஆராதிக்க
செதுக்க உதவிய உளி
தேவைப்படுவதில்லை;
ஏன்,
சிற்பியே கூட
தேவைப்படுவதில்லை.
ஆராயாதே
அனுபவி.
7. நடை-வண்டி
அதுவரை மரமாய்
நின்று கொண்டிருந்த மரம் —
செத்த பின்
நடக்க
சொல்லிக் கொடுக்கிறது!
8. முகத்தாட்சண்யம்
உனக்கென
எனக்கொரு முகம் இருப்பது —
உனைக் கண்டவுடன்தான்
தெரிந்தது!
9. பதற்றக் கவிதை
கடைசியில்
இந்தக் கவிதையைத் தாண்டி
வேறெங்கும்
நான் இருக்கப் போவதில்லை
என்றொரு பதற்றம்
ஒவ்வொரு கவிதையிலும்
இருக்கிறது.
10. தேராம்!
செத்த பின்
ஊர்சுற்றிப் பார்க்கிறது
மரம்.
- அ.சீனிவாசன்