கீற்றில் தேட...

இலை வந்த பிறகே
இசை வந்தது
தலையாட்டுகிறது மரம்

*
ஒற்றையடிப் பாதங்கள்
முன் பின்
இரட்டைக்கிளவி

*
கோடை மழை
வலை வீசுகிறது
திறந்திருக்கும் ஜன்னல்

*
சில தப்புகளுக்கு
மன்னிப்பே கிடையாது
தண்டனையும் கிடையாது

*
உன் வீட்டில்
பேப்பர் விழுவது தான்
முதல் செய்தி வீதிக்கு

*
கொஞ்சம் அசை
கும்பிடத் துவங்கி விட்டது
கூட்டம்

*
உள்ளிருக்கும் பூட்டைத் திற
வெளியிருக்கும் அச்சம்
வெளியேறும்

*
சக இன்பத்தை ஏற்காத மனம்
சுய தோல்விக்கும்
துக்கப்பட முடியாது

*
வெற்றுப்பாறை அல்ல
அது பால்யத்தின்
கல்லறை

*
வானத்தை கட்டி இழுக்கும்
கோடி துளிகளைத்தான்
மழை என்கிறது பூமி

- கவிஜி