பூத்துக் கிடக்கும் நட்சத்திரங்களில்
ஒன்றைப் பறித்து
சூடிக் கொள்கிறது விழி
ஆசை தீர்ந்ததா விழியே ?
பால்நதியில் கூழாங்கற்களைப்போல
உருண்டு கொண்டிருந்தவைகளை
எத்தனை முறை
கவரப் பார்த்திருப்பாய் நீதான்?
இப்புவியில் மலர்ந்த மலர்கள் அத்தனையும்
அரங்கனுக்கே சொந்தம் என்று
ஆண்டாள் நினைத்தால் நினைக்கட்டும்
உன் பங்கிற்கு
நீ வேறு நினைக்க வேண்டுமா?
கழுத்தில் இருள்மாலை
சூடிக்கொண்டு
பயணிக்கும் காலத்தை
காற்று வந்து தீண்டினால்
சீறியபடி படமெடுத்தாடுகிறது கருமை
வாடிவிடும் பூக்களையெல்லாம் வீசிவிடும்
வழக்கம் போல்
சூடிக்கொண்ட பின் நட்சத்திரங்களை
வீசிவிட முடியுமா சொல்?
உன்னை உதிர்ப்பதற்குத்தானே
அவைகள்
உன் விழிகளிலேயே குடியேறுகின்றன
- தங்கேஸ்