இந்துத் துவமதுவே- நாட்டினில்
எளியவர் வாழ்வினை அழிக்கிறதே!
சிந்திடும் வியர்வையிலே- வாழ்கிற
சிறுபான் மையினரை வெறுக்கிறதே!

பாரினில் மதவெறியை- விதைக்கும்
பாசிஸ கொள்கையைப் பூசிக்குதே!
ஆரிய மேன்மையினை- நிரந்தரம்
ஆக்கிடப் பன்முகம் தாக்கிடுதே!

கோசலை மைந்தனுக்கு- பெரிய
கோவிலைக் கட்டுது காவியது
தேசமும் அழிந்திடவே- மதவெறி
தூண்டி வளர்த்திட வேண்டியிங்கே!

வள்ளுவர் ஆடையினை- காவியில்
வைக்கிறார் உண்மையை நைக்கிறவர்
எள்ளுவ தன்றியெதும்- செய்திட
இயலுமோ இச்சிறு செயலையெண்ணி!

வேஷம் போடுகிறார்- காவி
வேஷ்டிகள் கட்டிய கோஷ்டியினர்
பாசம் பசுவின்மேல்- வைத்துப்
பசுதின் போர்தமை நசுக்குகிறார்

சாதிச் சழக்குகளை- மேலும்
தழைத்திடச் செய்துதான் பிழைக்கின்றார்
ஆதிச் சரக்குகளை- புதிதாய்
அள்ளித் தெளித்துத் துள்ளுகிறார்

கற்பனை யில்மட்டும்- இருக்கும்
கடவுளின் பேரால் தொடமறுத்து
அற்பரும் நடத்துகிறார்- நாட்டில்
அடிநிலை மனிதரை அடிமைகளாய்

‘ஜெய்ஸ்ரீ ராம்’எனவே- யாரையும்
செப்பிடச் சொல்லியே மப்புசெய்வார்
தெய்வங்கள் இல்லையென்ற- உண்மைச்
செய்திசொல் வோர்தமைக் கைதுசெய்வார்

இளந்தலை முறையினரே!- சீறிப்
பாய்வீர் மதவெறி மாய்த்திடவே!
உளந்தனில் சகிப்பினையே!- வளர்த்து
உலகினில் வாழ்வீர் கலகமின்றி!

- மனோந்திரா

Pin It