வெளி துறத்தலைக் காலம்
திணித்துப் போயிருக்கிறது
வீட்டில் என்னை
நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
தொலைக்காட்சி
அலைபேசி
படுக்கை ஆகியன
என்னைப் பகிர்ந்து கொள்கின்றன
என்னை மாறி மாறி
ஒப்படைத்துவிட்டு
ஓய்கிறேன்
விருப்பமில்லாப்
புத்தகமொன்றில்
கரைய முயன்று
திடமாய் நிற்கிறேன்
ஒரு மலையை
நகர்த்துவது போல்
பசித்தவன் கை
செல்லாக்காசு போல்
இயங்கு புள்ளியில்
கால் பாவாமல்
தத்தளிக்கிறேன்
வெறுமை வீதிகளை
அலங்கரித்திருக்கும்
தெரு நாய்கள்
மனிதர்களைக் காணாமல்
திசைகளை
வெறித்து நோக்கும்
கொரோனாவின்
அட்டகாசச் சிரிப்பில்
அண்டம் அதிர்கிறது
மூன்று வாரங்கள்
ஓடிவிடும்
வெற்றியை நம் கையில்
திணித்துவிட்டு...
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்