man face 400விமரிசையாய் திருமணம்
நடைபெறும்
மண்டபம் முழுக்க மனிதர்கள்.

யார்முகமும் பார்க்க இயலாது
விதவிதமாய் முகமூடிகள்
முகத்திலொன்றும், நிறைய
கைகளிலும், பைகளிலும்..

"எப்படி இருக்கறீங்க..?
வீட்ல சௌக்கியமா.?"
பரஸ்பரம் முகமூடியும் முகமூடியும்
சம்பிரதாயமாய் விசாரித்துக் கொண்டன
பதில் குறித்தொரு
எந்த அக்கறையுமில்லாது..

"பையன் இப்ப என்ன பண்றான்?"
முகமூடியொன்றின்
போகிற போக்கிலான கேள்விக்கு,
முகமூடியைக் கழற்றிக்
கையிலெடுத்துக் கொண்டு
சோகம் சொட்ட ஏதேதோ
புலம்புகிறது முகமொன்று..

பதிலில் கவனமின்றி
பார்வையை மண்டபம் முழுக்கப்
பரவவிட்டவாறே "உம்" கொட்டுகிறது
கேள்வி தொடுத்த முகமூடி

முகமூடி முகமூடியோடு உரையாடியது
முகம் முகமூடியோடு உரையாடியது
மணமக்களை வாழ்த்தி,
மதியம் கை நனைத்துத்
தாம்பூலத்தோடு கிளம்பும் வரையிலும்
காணக் கிடைக்கவேயில்லை..
முகத்தோடு முகம் உரையாடியது...!

- ஆதியோகி

Pin It